ரிஷபம்
புரட்சியையும் புதுமையையும் விரும்பும் நீங்கள், தொலை நோக்குடன் சிந்திப்பீர்கள். அடிக்கிற கை அணைப்பது போல கோபப்பட்டாலும், அக்கம் பக்கமுள்ளவர்களுக்கு வாரி வழங்குவீர்கள். சமயோஜித புத்தி கொண்ட நீங்கள், விவாதமென வந்து விட்டால் வெளுத்து வாங்குவீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 13.2.2019 முதல் 31.8.2020 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும், மன தைரியத்தையும், பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி தவிர்க்க முடியாத செலவுகளும் அடுத்தடுத்து வரும். சில வேலைகள் தடைப்பட்டு முடியும். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டுப் பேசாதீர்கள். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் அதை வேறுவிதமாக சிலர் புரிந்து கொள்வார்கள். எனவே பேச்சில் கவனம் தேவை. உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க வேண்டியது வரும். கண், காது, பல் வலி அதிகரிக்கும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பாக மற்றொரு மருத்துவரின் கருத்தையும் கேட்டறிந்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் எப்போதும் பிரச்னை இருப்பது போல தோன்றும். அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள். திடீர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வரவேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். இளைய சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். சகோதரியின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் இனி திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்கள் வெகுநாட்களுக்குப் பிறகு உங்களை நாடி வருவார்கள்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் அஷ்டமலாபாதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். அலை பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். ஷேர் மூலம் பணம் வரும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாதக் கணக்கில் வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் சப்தமவிரயாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 முடிய ராகுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் உண்டு. மனைவிக்கு மாத விடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரர் உதவுவார்.
சகோதரிக்கு திருமணம் முடியும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகள் திருமணத்தை எப்படி நடத்தி முடிக்கப் போறோமோ என்று நினைத்து வருந்துனீர்களே! இனி கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். நீங்கள் விரும்பியபடி வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் வந்தமையும். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். 2ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேசவேண்டாம். இடம்பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. பத்திரங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு பல முறை படித்துப் பாருங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்குகளில் இழுபறியான நிலை ஏற்படும். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள். விலையுயர்ந்த தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.
கன்னிப்பெண்களே! அலட்சியம், சோம்பல், பயம் இவற்றிலிருந்து விடுபடுவீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணமும் சிறப்பாக நடந்து முடியும். தவறானவர்களின் நட்பை ஒதுக்கிவிடுங்கள். மாணவர்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க, நவீன விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். முன்பு போல் நஷ்டம் வராமல் இருக்க, புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி ஊக்குவிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள். உத்யோகஸ்தர்கள்! உத்யோகத்தில் இருந்து வந்த மோதல்போக்கு மறையும். மேலதிகாரி உங்களின் பொறுப்புணர்வைக் கண்டு புதிய பதவி தருவார். உங்களின் ஆலோசனையையும் ஏற்பார். சக ஊழியர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். கணினி துறையிலிருப்பவர்களே! அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். சம்பளம் உயரும். கலைத்துறையினர்களே! தள்ளிப் போன புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தையாருக்கு உடல்நலக் குறைவையும், அவருடன் வீண் மனஸ்தாபங்களையும், பணப்பற்றாக்குறையையும் தந்த கேது இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். இனி கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அடிமனதில் ஒரு பயம் வரும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். குறுக்குவழியில் சம்பாதிப்பவர்களின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. கனவுத்தொல்லையால் தூக்கம் குறையும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சண்டை வரும். மனைவியுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது தடித்த வார்த்தைகள் வேண்டாம். உறவினர்கள் உங்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது தொந்தரவு தருவார்கள்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேதுபகவான் செல்வதால் உஷ்ணத்தால் வேனல் கட்டி, கண் எரிச்சல் வந்து போகும். வேலைச்சுமை அதிகரிக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் கூடுதல் அறை கட்டுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ராசிநாதனும்சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கௌரவப் பதவியும், பொறுப்பும் தேடி வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுங்கள்.
தூக்கம் குறையும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். கையிருப்பு கரையும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வேற்றுமொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. கேது 8ல் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டாம். மற்றவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். ஆனால் எட்டில் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை,பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வேலையாட்களிடம் அதிகம் கண்டிப்பு காட்டாதீர்கள். நேரந்தவறி வீட்டிற்கு செல்ல நேரிடுவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும். உலக அனுபவங்களைப் பெறுவதுடன், உங்கள் பலம் பலவீனத்தை நீங்களே உணரும் சக்தி உண்டாகும்.
பரிகாரம்:
வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டான் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீபள்ளி கொண்ட பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். கால் இழந்தவர்க்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.