துலாம்
தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்றில்லாமல் சுற்றம்-நட்புக்காகவும் உழைப்பீர்கள். பத்து ரூபாயை பையில் வைத்துக் கொண்டு பத்தாயிரம் ரூபாய் பொருளை விலைபேசுமளவிற்கு சாதுர்யமானவர்கள். சாம்பார் முதல் சாட்டிலைட் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருப்பீர்கள். உங்களுக்கு ராகுவும், கேதுவும் 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஒரு வேலையையும் செய்ய விடாமல் முடக்கிப் போட்ட ராகுகபவான் இப்பொழுது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்கிறார். முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனி பிரகாசிக்கும். குடும்பத்தினருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் என்று சங்கடத்திற்கு ஆளானீர்களே! இனி உங்கள் வார்த்தையை மீறி ஒன்றும் செய்யமாட்டார்கள். கணவன்மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். குழந்தை இல்லாமல் கோவில், குளம்என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். எவ்வளவோ உழைத்தும் கையில் ஒரு காசு கூட தங்கவில்லையே என வருந்தினீர்களே! இனி நாலுகாசு தங்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிப்பட்டீர்களே! அந்த நிலை மாறும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் திருதியசஷ்டமாதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். ஓரளவு பணமும் வரும். அவ்வப்போது ஏமாற்றங்கள், இழப்புகளை சந்திக்க வேண்டியது வரும். வழக்கை சுமுகமாக முடிக்க முயற்சிப்பீர்கள். சிலர் வீடு மாற வேண்டியது வரும். உறவினர்களின்,நண்பர்களின் வீட்டு விசேஷங்களை எடுத்து செய்வீர்கள். இளைய சகோதரர் வகையில் அலைச்சல் இருக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு மாற்றுவீர்கள். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்கள் இக்காலகட்டத்தில் பிரிவு, விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதி சென்று வருவது நல்லது. வாகனம் வாங்குவீர்கள். பணவரவும் உண்டு. திருமணம் கூடி வரும். உங்கள் தனசப்தமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 முடிய ராகுபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும்.
சொத்துப் பிரச்சனையை தீர்க்க புது வழி கிடைக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சி பலிதாகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மனைவிக்கு ரத்த சம்பந்தப்பட்ட நோய் வந்து போகும். ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாரின் ஆரோக்யம் குறையும். சிலநேரங்களில் அவருடன் கருத்து வேறுபாடுகள் வரும். பேச்சை குறைத்து சண்டையை தவிர்க்கப் பாருங்கள். பூர்வீக சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு,களைப்பு நீங்கும். நினைத்தபடி திருமணம் முடியும்.
பாதியிலேயே விட்ட கல்வியை தொடர்வீர்கள். மாணவர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும். விளையாட்டுப் போட்டியில் பரிசு,பாராட்டு கிட்டும். அரசியல்வாதிகளே! சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எனினும் மற்றவர்களை விமர்சித்து பேசவேண்டாம். வியாபாரிகளே! பற்றுவரவு உயரும். பழைய சரக்குகளை சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், இரும்பு,பருத்தி,ரசாயன வகைகள் மூலம் லாபமடைவீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். உத்யோகஸ்தர்களே! இதுவரை 10ம் வீட்டில் ராகு நின்றுகொண்டு வீண்பழியையும், வேலைச்சுமையையும் கொடுத்தாரே, இனி 9ல் நுழைவதால் அந்த நிலை மாறும். உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உங்களை தரக்குறைவாக நடத்திய மேலதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். வெகுநாளாக எதிர்பார்த்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். வேலைச்சுமை குறையும். கணினி துறையினர்களே! புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். வராமலிருந்த சம்பளபாக்கி கைக்கு வந்து சேரும். வீண் வதந்திகள், கிசுகிசுக்களிலிருந்து விடுபடுவார்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை நாலாபுறத்திலும் பந்தாடிய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார். குடும்பத்தில் சங்கடங்கள் தீரும். சந்தோஷம் கூடும். கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வி.ஐ.பிகளின் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும். ஆனால் இளைய சகோதரருடன் பனிப்போர் வந்துநீங்கும். கொஞ்சம் அனுசரித்துப் போங்கள். பிரபலங்கள், தொழிலதிபர்களின் நட்பு கிட்டும். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் லாபாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேதுபகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால் முன்கோபத்தால் புது பிரச்னைகள் உருவாகும். மூத்த சகோதரர் அனுசரணையாக இருப்பார். புது முதலீடுகள் வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம். உங்கள் ராசிநாதனும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் பணத்தட்டுபாடு குறையும். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். என்றாலும் ஓய்வெடுக்க முடியாதபடி அலைச்சலும், அசதி, சோர்வும் வந்து நீங்கும். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் சின்னச் சின்ன விபத்துகள் வந்து நீங்கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். மனைவி வழியில் செலவுகள் அதிகரிக்கும். உறக்கமில்லாமல் போகும்.
நீண்டநாள் பிரார்த்தனைகளை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள். பணப்பற்றாக்குறையால் அரைகுறையாக வீடு கட்டும் பணி நின்றுபோனதே! சொந்த ஊரில் உங்களை மதிப்பார்கள். வெளி நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். உயரக வாகனங்கள் வாங்குவீர்கள். தங்க நகை சேரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் கூடுதலாக அறை கட்டுவார்கள். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரிகளே! பழைய சரக்குகளை எளிதாக விற்பீர்கள். உத்யோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும், புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகை நீங்கும். இந்த ராகுகேது பெயர்ச்சியில் ராகுவால் முட்டுக்கட்டைகள் இருந்தாலும், கேதுவால் எதையும் சாதிக்கும் வல்லமையுண்டாகும்.
பரிகாரம்:
கோயம்புத்தூர் மாவட்டம், தர்மலிங்க மலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீதர்மலிங்கேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நிம்மதியுண்டாகும்.