குகை வாசலில் வெகுநேரம் நின்று கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, பொறுமையாகக் காத்திருப்பது என்று முடிவு செய்தேன். அவச ரப்படக்கூடாது. பொறுத்தார் பெரும் தங்கம் ஆள்வார்! ஜோதிடர் சொல்லியிருக்கிறார், ‘சுக்கிர தசை அடி பின்னுதுங்க. நீங்க தொட்டதெல்லாம் தங்க மாகும். பெரிய சித்தரோட ஆசியும் கிடைக்கும்...’ என்று! ஆனால் கூடவே, ‘சுக்கிரன் கொஞ்சம் நீசம்தான்; சூரியனும் அவனைப் பார்க்கிறான்....’ எ ன்று இழுக்கவும் செய்தாரே! சரி விடு, சித்தர் குகையைக் கண்டுபிடித்தாகிவிட்டது. இனி சுக்கிரன் நீசமானால் என்ன, மோசமானால் என்ன? நான் தொட்டதெல்லாம்தான் தங்கமாகப் போகிறதே!
மாலை மயங்கி இருளுக்குள் அடைக்கலமாகும் நேரம். ஏற்கனவே அந்தக் காட்டுப் பகுதி இருட்டிக்கொண்டுதான் இருந்தது. இப்போது இன்னும்... ஒரு தீர்மானத்தோடு குகையின் வாயிலையே பார்த்தபடி நின்றிருந்தேன், உள்ளே எப்போது நுழைவது என்பதை யோசித்தபடி. மிகப்பெரிய ஒரு பாறை யைக் குடைந்து வழி பண்ணினாற்போல இருந்தது அந்த குகை. வாசல் சிறியதாகத்தான் இருந்தது. குனிந்துதான் போக வேண்டும். உள்ளிருந்து திடீ ரென்று பழைய கற்கால ஆதிவாசி யாராவது கல் உலக்கையைத் தூக்கிக்கொண்டு ஓடி வருவானோ... அல்லது மனைவியின் தலைமுடியைப் பற்றித் தரதரவென இழுத்து வருவானோ..?
தயங்கியபடியே, குகையினுள் ஓரடி எடுத்து வைத்தேன். உள்ளிருந்து இரண்டு சுடர்கள் மெல்ல அசைந்தபடி வெளியே வந்தன. எந்தக் கண்களின் சுடரொளி அது? புலியாக இருக்குமோ? அல்லது வேறு ஏதாவது கொடிய விலங்கினமாக இருக்குமோ? எந்த ஒளியின் பிரதிபலிப்பாகவும் இல்லாமல் இயற்கைபோலத் தோன்றும் அந்தச் சுடர்கள், விழிகளோ? அவை யாருக்கு சொந்தம்? மிகுந்த எதிர்பார்ப்புடனும் கனத்த யோசனையுடனும் இருந்த நான், இன்னும் ஓரடி முன்னே எடுத்து வைத்தேன். அவ்வளவுதான். படுவேகமாக, என்னை நோக்கி வந்து என்னைத் தாக்கின அந்தச் சுடரொளிகள். நான் தூரப்போய் விழுந்தேன். என்னை யாரும் அடித்தாற்போலவும் இல்லை;
தூக்கி எறிந்தாற் போலவும் இல்லை. நானே வேகமாக ஓடிவந்து, நானே பலமாக எதனுடனோ மோதி, மோதலின் கடினத்தால் பின்னோக்கி விழுந்ததுபோல இருந்தது. நான் யாருடன் அல்லது எதனுடன் மோதினேனோ அது சிறிதும் பின் வாங்காமல் என்னை நோக்கி அடியெடுத்து வைத்தது. அது, வெறும் அதுவல்ல. நான் தேடிவந்த சித்தர்தான்! மூங்கில் குச்சிகளால் பின்னப்பட்டது போன்ற உடலமைப்பு கொண்ட இந்த ஒடிசல் தேகம் மோதியா நான் இவ்வளவு தூரம் தள்ளிப்போய் விழுந்தேன்! நம்பாமல் இருக்க முடியவில்லை. என் சொந்த அனுபவம் அது. நான் சுய உணர்வுடன் அனுபவித்தது. அப்படியென்றால் தங்கம் கிடைப்பது உறுதி.
அதாவது, என்னால் நிச்சயமாக, மணலைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ள முடியும். இதற்கான சூசக அறிகுறிகள்தானே இதெல்லாம்! ‘‘யார் நீ?’’ இடிகுரல் கேட்டது. அந்த வனாந்திரத்தில் அந்தக் குரல் பயங்கரமாக ஒலித்தது. எனக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது. எந்த விளைவையும் எதிர்கொள்ளும் பக்குவத்தோடுதான் வந்தேன் என்றாலும், அமானுஷ்ய அனுபவத்தை நேரில் உணரும்போது மனசோடு உடலும் ஒடுங்கித் தவித்தது. கூடாது. தைரியமாக இருக்க வேண்டும். என் வைராக்கியம் ஈடேற வேண்டும். மணலைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க வேண்டும்.
‘‘உங்களை தரிசிக்கத்தான் வந்தேன்’’ என்று உறுதியாகக் கூறினேன். அந்தச் சுடர் விழிகள் என்னை ஊடுருவின. ‘‘எனக்கு மணலைத் தங்கமாக்கும் ரசவாதத்தைச் சொல்லித்தர வேண்டும்’’ குரலின் அடர்த்தியை நான் குறைக்கவில்லை. ‘‘போ... போ... துஷ்டனே!’’ மேலாக விரட்டினாலும் என்னைப் பார்த்து அவர் தயங்கியது போலவே தோன்றியது. ‘‘மணலாம், தங்கமாம்... பேராசை பிடித்த பேய் நீ. இப்போதே மனசுக்குள் உங்கள் ஊர் கடற்கரையை பட்டா போட்டு வாங்கி விட்ட பேராசைக்காரன் நீ. தூரப்போ... நானே இந்த ரசவாதத்தால், தீராப் பிணிகளுக்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் முழுமை பெற முடியாமல் தவிக்கிறேன். நீ வேறு குறுக்கே வந்து...’’
தடாலென்று அவருடைய காலடியில் விழுந்தேன். அவருடைய இரண்டு கால்களையும் கெட்டியாகப் பற்றிக்கொண்டேன். ‘‘உங்களை நான் விடமாட் டேன். எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லித் தந்துதான் ஆகவேண்டும். நானும் உலக நன்மைக்காகவே இந்த ரகசியத்தைப் பயன்படுத்துவேன்’’ எ ன்று கூறியபடி மன்றாடினேன். என் பற்றுதலிலிருந்து அவர் எப்படித்தான் எளிதாக நழுவினாரோ, நான் கண் திறந்து பார்த்தபோது வெறும் தரையைத்தான் தழுவிக் கொண்டிருந் தேன். நிமிர்ந்தபோது, சற்றுத் தொலைவில் ஒரு பாறை மீது அமர்ந்திருந்தார், அவர். பாய்ந்து சென்ற அந்தப் பாறை மீதே முட்டிக்கொண்டேன். தலையில், இடதுபக்கமாக நெற்றியில் காயம். ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. வலியால் முனகினேன்.
‘‘சூ’’ என்று என்னை அடக்கிய அவர், குகைச் சுவரில் கையைத் தேய்த்து, அடிபட்ட என் நெற்றியில் வைத்து அழுத்தினார். அட, ரத்தம், காயம், வலி யெல்லாம் எங்கே போயின? என்னைக் கூர்ந்து பார்த்தார் அவர். ‘‘சொன்னால் கேட்க மாட்டாய். புத்தியெல்லாம் தங்கமாய், அந்த நினைவாய் அழுகிவிட்டிருக்கிறது உனக்கு’’ என்றார். அவருடைய பார்வைக் கூர்மையில் மெல்ல மெல்ல கடுமை குறைந்து, சிறிது சிறிதாகக் குளுமை பரவியது. ‘‘சொல்லித் தருகிறேன்’’ என்ற அவருடைய குரல், என்னை ஆனந்த வெள்ளத்தில் மிதக்கச் செய்தது. எப்படி சம்மதித்தார்? உண்மையிலேயே நான் அதைத் தெரிந்து கொள்ளத் தகுதியானவன்தானா? மனசுக்குள் சிலிர்த்துக் கொண்டேன்.
‘‘எழுந்திரு. உன் உடைகள் எல்லாவற்றையும் அவிழ்த்துப்போடு. இந்த குகைக்குள்ளேயே இடது பக்கம் இருக்கும் சுனையில் தலை முழுகிக் குளித்து விட்டு வா. வந்து அப்படியே என்முன் உட்கார்’’ என்றார், அவர். உலகத்து மண்ணையெல்லாம் அப்போதே தங்கமாக்கி விட்ட சந்தோஷத்தில், அடுத்தடுத்து அவர் சொன்னதையெல்லாம் செய்தேன். என் முன் பத்மாசனம் போட்டு அமர்ந்தார். என்னை உற்றுப் பார்த்தார். பார்வையாலேயே என்னை ஊடுருவினார். உடலெங்கும் பார்வையாலேயே பர வினார். ‘‘சொல்’’ என்றார். நான் தயாரானேன். கூடவே நிதானமாக இருக்கவும் தீர்மானித்துக் கொண்டேன்.
அவர் கண்களை மூடிக்கொண்டு மந்திரத்தைச் சொன்னார். இரண்டு வரிகள்தான். திரும்பத் திரும்ப உச்சரித்தார். தமிழ்தான். கரடுமுரடான தமிழ். கு ரல் உயர்ந்தும் தாழ்ந்தும் நிறுத்தியும் இடைவெளி விட்டும் ஒரு சின்ன பாட்டு போல ஒலித்துக் கொண்டே இருந்தது. நூறுமுறை, ஆயிரம்முறை, எண் ணிக்கையையும் கைவிட்டு நேரம் காலம் மறந்து, சித்தரின் குரலை ஒட்டி, என் குரலையும் ஒன்றாக்கி, கம்பீரமாக உச்சரித்தேன். எவ்வளவு நேரம் கடந்ததோ! ஒரு கட்டத்தில் என் குரல் மட்டுமே ஒலிப்பது உணர்ந்து மெல்ல கண் திறந்தேன். எதிரே சித்தர் இருந்தார். அவர் மந்திர உச்சரிப்பை நிறுத்தியிருந்தார். ஆனால், பார்வை என் மீதே நிலைக்குத்தியிருந்தது.
நானும் மந்திரம் உச்சரிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் நான் உள்ளிழுத்து வெளியேவிடும் மூச்சிழையில் அந்த மந்திரம் ஒலிப்பதை என்னால் உணர முடிந்தது. ‘‘எழுந்திரு’’ என்ற அவருடைய குரலில் என்னைப் பற்றிய சந்தேகம் தட்டியது போலிருந்தது. என் உடைகளை எடுத்து அணிந்து கொண்டேன். தற் செயலாக கைக்கடிகாரத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். நான் குகைக்குள் வந்து இரண்டு நாளாகிறது! பசி, தாகம் எதுவும் என்னைத் தீண்டவில்லையே, அது எப்படி? திடீரென்று என்னை பரபரப்பு தொற்றிக் கொண்டது. அங்கேயே ஒரு பிடி மணலை எடுத்தேன். மந்திரத்தை உளமாற ஜபித்தேன். மணலைத் தூவி னாற்போல உதிர்த்தேன். தங்கம்! அவ்வளவும் தங்கம். தங்கத்துகள்கள் என் மேலெல்லாம், சட்டை, பேன்ட்டெல்லாம் பரவிப் படர்ந்தன.
உடனே எம்பி எம்பி குதித்தேன். என்னை மேலும் கீழுமாகப் பார்த்த சித்தரை நான் அலட்சியமாகப் பார்த்தேன். மந்திரத்தைத் தெரிந்து கொண்டு விட்டேன். இனி இவருடைய தயவு வேண்டாம். என்னை அவர் வெறித்து நோக்கியதிலிருந்து, நான் அவரை ஏமாற்ற முற்படுவதைத் தெரிந்து கொண்டுவிட்டார் என்றே தோன்றியது. ஒரு துடிப்புடன் குகை வாசலுக்கு நான் பாய்ந்தபோது, ‘‘நில்; இந்த மந்திரத்தை வரும் அமாவாசைக்கு முன் பிரயோகிக்க முயற்சிக்காதே. அப்படியே முயற்சித்தாலும், அப்போது ஒற்றைக் கொம்பு முளைத்த நரியின் முகம் உன் நினைவுக்கு வராமல் பார்த்துக்கொள்’’ என்றார். கூடவே குகை
உட்சுவரில் பொறிக்கப்பட்டிருந்த அந்தப் படத்தையும் காண்பித்தார்.
ஒற்றைக் கொம்புள்ள நரியின் முகம்! படத்தைப் பார்த்தேன். ஓட்டமும் நடையுமாக வீட்டிற்குப் பயணப்பட்டேன். சட்டை, பேன்ட் மேலெல்லாம் ஒட்டியிருந்த தங்கத் துகள்கள் எல்லாம் அந்தக் காட்டிலேயே உதிர்ந்து விழுந்தன. போகட்டும். டன், டன்னாக தங்கம் அள்ளப்போகிறேன்... இதெல்லாம் கால் தூசு...! வீட்டிற்கு வந்தவன், உடைகளைக் களைந்து அப்படியே அழுக்குக் கூடைக்குள் போட்டேன். சாயங்காலம் மறைந்து இருள் குவியும் நேரம். குளித்தேன். தோட்டத்திலிருந்து ஒரு பக்கெட் நிறைய மண்ணை அள்ளிக்கொண்டு வந்தேன். பூஜை அறைக்குள் கொட்டினேன். அறைக் கதவை சாத்தினேன். மந்தி ரம் சொல்ல ஆரம்பித்தேன்.
ஊ... என்ற ஊளையுடன் ஒற்றைக் கொம்பு நரி என் நினைவுக்கு வந்தது. அதுவும் என்னுடன் சேர்ந்து மந்திரம் சொன்னதோ! மீண்டும் மீண்டும் நான் மந்திரம் சொல்லச் சொல்ல அந்த நரியும் என்னுடன் சொன்னது. அதை நினைவிலிருந்து விரட்ட முயன்று முயன்று தோற்றேன். ஒரு தரம்கூட மந்திர த்தை முழுமையாகச் சொல்ல முடியவில்லை. கொட்டிவைத்த மணல் என்னைப் பார்த்து கைக்கொட்டி சிரித்தது. உற்சாகம் முற்றிலுமாக வடிந்துவிட்டது எனக்கு. உடம்பு பூராவும் எரிச்சல் பற்றிக் கொண்டது. கோபத்துடன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தேன். வியர்த்துக் கொட்டி, ஏமாற்ற சோகத்தை முகத்தில் அப்பிக்கொண்டு வந்த என்னை மனைவியும் இரண்டு குழந்தைகளும் பயந்தபடியே பார்த்தார்கள்.
சரி, அன்று போகட்டும்; மறுநாள் பார்க்கலாம்... மறுநாள், அதற்கு மறுநாள், அதற்கும் மறுநாள்... எப்போது நான் மந்திரம் சொல்ல ஆரம்பித்தாலும், எனக்கு முன்னே வந்து அமர்ந்துவிடுகிறது, கொம்பு முளைத்த நரி! சே! என் முயற்சிகள் எல்லாம் வீணா! சித்தரின் தந்திரமோ இது? எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். ‘செல்போன்’ இல்லாமலேயே எனக்கு நானே பேசிக்கொள்கிறேனாம், திடீரென சிரிக்கிறேனாம். எனக்குப் பித்து பிடித்திருக்கிறதாம். சில சமயம் என் முகமே ஒரு நரியின் முகம்போலத் தெரிகிறதாம். தலையில் ஒற்றைக் கொம்புகூட முளைத்திருக்கிறதாம்.... ‘‘என்னங்க..’’ மனைவி திடீரென அலறும் சப்தம் கேட்டது. ‘‘அழுக்குக் கூடையிலே போட்டிருந்த உங்க சட்டையை எடுத்து தோய்ச்சேங்க... சட்டைப் பையிலிருந்து பொடிப்பொடியாய், மினுக் மினுக்னு... தங்கம் மாதிரி....’’
பாய்ந்தோடி புழக்கடைக்குச் சென்றேன். தங்கத் துகள்கள்... சித்தர் குகையில் நான் மண் அள்ளி மந்திரம் சொன்னபோது பொன்னாகிய துகள்கள். அங்கே உதறிவிட்டதுபோக சட்டைப் பைக்குள் தங்கிவிட்ட தங்க மணல்! துணி தோய்க்கும் கல்லிலிருந்து சோப்பு, தண்ணீருடன் வழிந்தோடி வெகுவே கமாக சாக்கடை வாய்க்குள் அந்தத் தங்கத் துகள்கள் புகுந்து மறைந்தன. அவற்றையாவது கைப்பற்றும் நோக்கத்தில் பாய்ந்தேன். அந்த வேகத்தில் கால் வழுக்கி, துணி தோய்க்கும் கல்லில் என் தலை மோதிக்கொண்டு ரத்தம் கொட்டியது. தங்கத்துகளை அடித்துச் சென்றுவிட்ட வெறும் சாக்கடைத் தண்ணீர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தது.
பிரபுசங்கர்