(26-4-2025 முதல் 25-11-2026 வரை)
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: மகர ராசியின் ஆட்சி நாயகர், சனி பகவான்தான்! 7½ சனிக் காலத்தின் கடைசிப் பகுதி நடைபெறுகிறது உங்களுக்கு! கோள்சார விதிகளின்படி, கும்ப ராசியில், சனி பகவான் ஓரளவு நன்மைகளையே செய்வார், ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, ஏழரைச் சனி முடியும் தருவாயில் சென்று முடிந்த 5 வருட சிரமங்களுக்்குப் பரிகாரமாக, கடைசி 2½ வருடக் காலத்தில், உயர்ந்த நன்மை ஒன்று செய்தருள்வதாக, பகவான் ÿகிருஷ்ண பரமாத்மாவிற்கு வாக்களித்திருப்பதாக, வரலாற்று நிகழ்ச்சியொன்று கூறுகிறது.இருப்பினும், கும்பம் மகர ராசியினருக்கு தன ஸ்தானமும் ஆகும். வாக்கு, குடும்ப ஸ்தானமும் அதுவே. குடும்பத்தில் வீண் செலவுகள் குறையும். ஒரு சிலருக்குச் சொந்த வீட்டிற்கு மாற்றம் ஏற்படும். உடல் நலனில் நல்ல அபிவிருத்தியைக் காணலாம். குரு பகவானும், ஆதரவாக சஞ்சரிப்பதால், விவாக வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு நல்ல வரன் அமையும்.
உத்தியோகம்: சனி – ராகு சேர்க்கை, மகர ராசியினருக்குப் பல நன்மைகளைப் பெற்றுத் தரவுள்ளது. இதுவரை, காரணம் எதுவும் இல்லாமல், மறுக்கப்பட்டு வந்த ஊதிய உயர்வு, பதவியுயர்வு ஆகியவற்றை இப்போது எதிர்பார்க்கலாம். உங்களைப் பார்த்தாலே முகம் சுளிக்கும் மேலதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவது, மனதிற்கு நிம்மதியை அளிக்கும், வெளிநாடுகளில் பணியாற்றிவரும் மகர ராசியினர், சிறு விடுப்பில் தாய்நாடு சென்று-வரும் வாய்ப்பு உள்ளதையும் கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. சக-ஊழியர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு உற்சாகத்தையும், பணிகளில் திறமையையும் அதிகரிக்கச் செய்யும்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையினருக்கு, லாபகரமான காலகட்டம் இது. சனி பகவானும், ராகுவும் அனுகூல நிலைகளில் சஞ்சரிக்கின்றனர். புதிய துறையில் கால்பதிப்பதற்கும், கிளை நிறுவனங்கள் திறப்பதற்கும் கிரகங்கள் ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். நிதி நிறுவனங்களின் உதவி எளிதில் கிட்டும். சந்தை நிலவரம் ஆதரவாக உள்ளது. கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். ஒரு சிலர் வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக வெளிநாடு – வெளி மாநிலம் சென்று-வரும் வாய்ப்பு அடிக்கடி ஏற்படும். கூட்டுத் தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
கலைத் துறையினர்: பல காரணங்களினால் கைநழுவிப் போன வாய்ப்புகள் இனி உங்களைத் தேடி வரும் – அதிக முயற்சி இல்லாமலேயே! வருமானமும் போதிய அளவிற்கு இருக்கும். கும்பம் தன ஸ்தானமாகி, அதில் ராகு – சனி கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளிலும் “நண்பர்களுக்கு” அளிக்கும் விருந்துகளிலும் பணம் விரயமாகும். பலருக்கு வங்கிக் கடன் அதிகரிக்கும். மகர ராசியில் பிறந்துள்ள திரைப்படத் துறையினருக்கு, ஆடம்பரச் செலவுகளிலும், விருந்துகளிலும் பணத்தைச் சற்று தாராளமாகவே செலவு செய்வது பழக்கமாகிவிட்டது. அதிலிருந்து மீள்வதற்கு மனவுறுதி அவசியம். இந்தச் சனி – ராகு கும்ப ராசி சேர்க்கை “மீளாக் கடனில் ஆழ்த்திவிடக்கூடும்” (ஆதாரம் : “ஜோதிட பாரிஜாதம்” -எனும் மிகப் பிரசித்திப் பெற்ற பண்டைய ஜோதிடக் கிரந்தம்.)
அரசியல் துறையினர்: மக்களிடையே செல்வாக்கு உயரும். கட்சியில் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். கட்சியில் ஏற்பட்டுள்ள உட்பூசல்களினாலும், கட்சிப் பிரமுகர்களிடையே உள்ள பதவி மோகத்தினாலும், எந்தப் பக்கம் சேர்வது என்பது தெளிவாகத் தெரியாமல் குழப்பம் மேலிடும்.
மாணவ – மாணவியர்: மனதைத் தொடர்ந்து அரித்துவந்த குடும்பக் கவலைகள், தாய் – தந்தையர், உடன்பிறந்தோர் பிரச்னைகள் ஆகியவற்றின் கடுமையைப் பெருமளவில் குறைத்துவிடுவார்கள், சனியும் – ராகுவும். பாடங்களில் மனதை ஊன்றிச் செலுத்த முடியும். உயர் கல்விக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். திறமைவாய்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களிடம் உயர் கல்வி பெறும் வாய்ப்பு கிட்டும். பலருக்கு, கல்வி உதவிப் பணம் (ஸ்காலர்ஷிப்) கிடைக்கும். நற்குணங்கள் அமைந்த மாணவர்களின் நட்பு ஏற்படும். பாடங்கள் சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள இந்த நட்பும், தொடர்பும் மிகவும் உதவியாக இருக்கும்.
பேச்சுப் போட்டிகள், கட்டுரைகள் எழுதும் போட்டிகள் ஆகியவற்றிலும் வெற்றி உங்களைத் தேடிவரும். நேர்முகத் தேர்வுகளில், அதிக முயற்சியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். “அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்டுகிறது” -என்றால், அது மிகையாகாது!
விவசாயத் துறையினர்: நல்ல விளைச்சலும், சந்தை விற்பனைகளில் கிடைக்கும் அமோக லாபமும், கால்நடைகளின் விருத்தியும், மகிழ்ச்சியை அளிக்கும். சனி, ராகு இருவருமே, சுபபலம் பெறும்போது, அள்ளி, அள்ளிக் கொடுப்பதை அனுபவத்தில் பார்க்கலாம். பலருக்குச் சொந்த வீடு கட்டும் யோகமும் இப்போது கிட்டும் எனக் குறிப்பால் உணர்த்துகின்றனர், சனியும், ராகுவும்!
பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்குச் சிறந்த யோக காலம் இது. தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், பொன், பொருள் சேர்க்கை கிட்டும். மணமாலைக்கு ஏங்கி நிற்கும் கன்னியருக்கு நல்ல வரன் அமையும். படித்த பெண்மணிகளுக்கு, மனதி்ற்கு உகந்த வேலை கிடைக்கும். கணவர் மற்றும் குழந்தைகளின் பாசமும், அன்பும் மனதை நெகிழவைக்கும். சித்திரை 28-ம் தேதியிலிருந்து (மே 11, 2025) சனி – ராகுவிற்குக் கிடைப்பதால், மேலும் பல நன்மைகள் கிட்டும்.
அறிவுரை: சனி – ராகு கொடுக்கும்போது, வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமித்துவைத்துக் கொள்ளுங்கள். வரும்போது, வாரி இறைத்துவிட்டால், எதிர்காலத்தில் வருந்தவேண்டியிருக்கும்.
பரிகாரம்: தினமும் காகத்திற்கு எள், பருப்பு, நெய் சிறிது சேர்த்த சாத உருண்டை வைத்து வந்தாலேபோதும்! தோஷங்கள் பறந்தோடிவிடும்.