கடகம்

Published: Last Updated on

புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை

குடும்பம்: இப்புத்தாண்டு முழுவதும் குருவும், ராகுவும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர்! மற்ற கிரகங்களால், அனுகூலம் ஏதும் இல்லை!! வருமானம் ஒரே சீராக இருக்கும். குடும்பச் சூழ்நிலை, மன நிறைவையளிக்கும். ஒற்றுமை நிலவும். சிறு சிறு சுப நிகழ்ச்சிகளுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. இருப்பினும், மிக முக்கியமான கிரக சஞ்சார நிலை அஷ்டம ஸ்தானத்தில் (8-ம் இடம்) சனி, செவ்வாய் இணைந்திருப்பதேயாகும்! உடல் நலனில் கவனம் அவசியம். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது, அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை, ஜோதிடக் கலை வற்புறுத்திக் கூறுகிறது. ராகு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களுக்கும் இரவில்தான் தீவிர சக்தியும், ஆதிக்கமும் இருப்பதாக மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் அனைத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான விபத்துகள் இரவு நேரத்தில்தான் நிகழ்கின்றன. அதற்குக் காரணம், ராகு மற்றும் செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் இரவு நேர சஞ்சார நிலைதான் காரணம்!! இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, இரவு நேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகள், பகல் நேரத்தைவிட பல மடங்கு அதிகம் என்பதை நேச நாடுகள் வெளியிட்டுள்ள போர் அறிக்கை கூறியுள்ளது. தேவையில்லாமல், வெளியில் அலைவது, தரக் குறைவான உணவகங்களில் உணவருந்துவது, இரவு நேரத்தில் தனியே செல்வது, வாகனம் ஓட்டும்போது, நிதானமாக ஓட்டுதல் ஆகியவை அவசியம்.

உத்தியோகம்: உத்தியோகத் துறை, சனி பகவானின் அதிகாரத்தில்தான் உள்ளது. இவ்வாண்டு முழுவதும், அவர் அனுகூலமாக இல்லை. மேலும், பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள ராகுவும், சாதகமாக இல்லை! அலுவலகப் பணிகளிலும், பொறுப்புகளிலும், ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். கிரக நிலைகளின்படி, மேலதிகாரிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். அத்தகைய சந்தர்ப்பங்களில், நிதானத்தை இழந்துவிடாமல், சமயோஜிதமாக நடந்துகொள்வது, வேண்டாத பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். பணிகளில் மிகக் கவனமாக இருந்தும்கூட, சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சொந்தப் பிரச்னைகளும், குடும்பக் கவலைகளும், உங்கள் கடமைகளைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

தொழில், வியாபாரம்: மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய புத்தாண்டு இது!! குறிப்பாக, பண விஷயங்களில் கண்டிப்பு வேண்டும்! கடனுக்கு சரக்குகளை அனுப்பினால், பணம் வருவது கடினமே. மேலும், தேவையில்லாமல் வங்கி போன்ற நிதிநிறுவனங்களிலிருந்து, கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தொழில் விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப்போடுதல் அவசியம். ஏற்றுமதி – இறக்குமதித் துறையினர் சந்தை நிலவரத்தைத் தீர ஆராய்ந்து பார்த்த பின்னரே, புதிய ஆர்டர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஆவணி 7-ம் தேதியிலிருந்து ஐப்பசி முடியும் வரை கிரகங்களின் சஞ்சார நிலை அனுகூலமாக இல்லை!! நஷ்டம் ஏற்படக்கூடும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதும், கடினம்தான். அவர்களால், புதுப்புதுப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

கலைத்துறையினர்: இப் புத்தாண்டில், கிரக நிலைகள் ஓரளவே அனுகூலமாக உள்ளன. பெரும்பான்மையான கிரகங்கள் சாதகமாக இல்லை. வருமானம் சற்றுக் குறையும். உள்ளதை வைத்து சமாளிக்கவேண்டிய நிலைதான்!! திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய படங்கள் எடுப்பதற்கு முன், தீர சிந்தித்துப் பார்த்து முடிவெடுப்பது மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன. நடிக – நடிகைகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அரசியல் தொடர்புகள் உங்கள் செல்வாக்கைப் பாதிக்கும்.

அரசியல்துறையினர்: சுக்கிரன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய மூவரும் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளனர். “உடன்பிறந்தே கொல்லும் வியாதி!! மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்!!” என்ற மூதுரைக்கு ஏற்ப, கட்சியில் நெருங்கிப் பழகியவர்களே உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு, மனத்திற்குள் பொங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தற்போதுள்ள கிரக நிலைகளின்படி, எவரையும் முழுமையாக நம்பிவிடவேண்டாம். தனியே வெளிச் செல்வதையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் திறமையே உங்களுக்கு எதிரியாக உள்ளது. பொதுமக்களிடையே செல்வாக்கு உயர்ந்துள்ளது.

மாணவ – மாணவியர்: இப்புத்தாண்டு முழுவதும், கிரகங்கள் ஓரளவே நன்மை செய்யும் நிைலகளில் நிலைகொண்டுள்ளனர். மனதைப் பாடங்களில் செலுத்துவது, சற்று சிரமமாக இருக்கும். புத்தகத்தைக் கையில் எடுத்தாலே உறக்கமும், சோம்பலும் மேலிடும். விடுதியில் தங்கி, படித்து வரும் மாணவ – மாணவியருக்கு, பணப் பிரச்னை கவலையளிக்கும். பிற மாணவ – மாணவியருடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில், கிரகங்களின் சஞ்சார நிலைப்படி, உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆதலால்தான், இந்த அறிவுரை!

விவசாயத் துறையினர்: உழைத்த அளவிற்கு விளைச்சல் இருப்பது சற்று சிரமம்தான்! அஷ்டம ராசி தோஷத்தினால், இரவு நேர வயல் பணிகளில் விழிப்புடன் செயல்படுவது மிகவும் அவசியம். சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. இத்தகைய கிரக நிலைகளின்போது, புதிய கடன்களை ஏற்பது, எதிர்காலத்தில் பகையை ஏற்படுத்தக்கூடும்,

பெண்மணிகள்: உங்கள் உடல் நலன் மீது கவனமாக இருத்தல் மிகவும் அவசியம் என்பதை சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை எடுத்துக்காட்டுகிறது. உஷ்ண சம்பந்தமான பிணிகளால் பாதிப்பு ஏற்படக்கூடும். சிறு உடல் பிரச்னை என்றாலும், அதனை அலட்சியம் செய்யாமல், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம். தேவையற்ற, கற்பனையான கவலைகளைத் தவிர்த்தல் வேண்டும்.

அறிவுரை: பணப் பிரச்னை, குடும்பக் கவலைகள், ஆரோக்கியக் குறைவு ஆகியவை உங்கள் உடல் நலனைப் பாதிக்கக்கூடும். நேரத்தில் உண்பது, உறங்கச் செல்வது, ஓய்வு, கடின உழைப்பைத் தவிர்த்தல் ஆகியவை மிக மிக அவசியமானவை.

பரிகாரம்: தினமும் அருகிலுள்ள ஆலய தரிசனம் செய்வதால் அஷ்டம ஸ்தான தோஷத்தைக் கண்டிப்பாகக் குறைத்துவிடும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us