(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம்: குரு பகவான் ஜீவன ஸ்தானத்திலும், சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திலும், ராகு பாக்கிய ஸ்தானத்திலும் நிலை கொண்டுள்ள நிலையில், இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது! வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். பல தருணங்களில், பண நெருக்கடி ஏற்படக்கூடும். குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். பழைய கடன்கள் மன நிம்மதியைப் பாதிக்கும். பாக்கிய ஸ்தானத்தில் ராகு இருப்பதால், கைப்பணம் எளிதில் கரையும். சனி பகவானின் நிலையினால், அடிக்கடி ஆரோக்கியம் பாதிக்கப்படும். வயிற்று வலி, மூட்டுவலி, முதுகு வலி, தலை வலி, தலைச்சுற்றல் ஆகியவை காரணமாக, வைத்திய சிகிச்சை மேற்கொள்ள நேரிடும். குழந்தைகளின் பிரச்னை, மன நிம்மதியை பாதிக்கும். திருமண முயற்சிகளில், வரன் அமைவது, மேலும் தாமதப்படும். மே மாதம் 1-ம் தேதியிலிருந்து, குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுவதால், எதிர்பார்த்த நிகழ்வுகள் கைக்கொடுக்கும். வீண் செலவுகள் குறையும். குரு பகவான் சாதகமாக மாறுவதால், மே 1-ம் தேதியிலிருந்து, விவாக சம்பந்தமான முயற்சிகளில் இறங்கலாம். பலன் கிட்டும்.
உத்தியோகம்: பாக்கிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பது, ஓரளவு நன்மை தரும் என்றாலும், உத்தியோகத்திற்கு காரகத்துவம் வாய்ந்த சனி பகவான், அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிகளில் கவனமாக இருத்தல், மிகவும் அவசியம். சக-ஊழியர்களினாலும், பிரச்னைகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. மேலதிகாரிகளின் மனப் போக்கு, வேதனையை அளிக்கும். வெளியூர்ப் பயணங்களின்போது, விழிப்புடன் இருத்தல் நல்லது.
தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்கு அதிகாரியான சனி பகவான், அஷ்டம ராசியில் சஞ்சரிப்பது, மிகக் கடினமான போட்டிகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற உண்மையை எடுத்துக்காட்டுகிறது. உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப் பொருட்களின் விலை உயர்வதால், உற்பத்தியை அதற்கேற்றவாறு குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சகக் கூட்டாளிகளினால், பிரச்னைகள் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள ராகு, தக்க தருணங்களில் கைகொடுத்து உதவுவார்! “கொடுப்பதிலும், ராகுவிற்கு இணை அவரே….!!” -என்ற மூதுரைக்கு ஏற்ப, பல நன்மைகளை அவரால் எதிர்பார்க்கலாம்.
கலைத்துறையினர்: ராகு அனுகூலமாக இருப்பதால், வாய்ப்புகளுக்குக் குறைவிராது! சுக்கிரனின் நிலை அனுகூலமாகவே நீடிக்கின்றது. வருமானம் படிப்படியாக உயரும். ஆயினும், வருமானத்திற்கேற்ற ஆடம்பரச் செலவுகளும் அதிகமாகவே இருக்கும். எதையும் கட்டுப்படுத்த இயலாது. வேலையாட்களினால் பிரச்னைகள் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் பலம் வாய்ந்த சனி அமர்ந்திருப்பதால், ஆபத்தான பாத்திரங்களில் நடிக்கும்போது, அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், கிரகநிலைகளின்படி, விபத்துகள் நிகழக்கூடும். சக நடிகர்களுடன், வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது அவசியம். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, வங்கிகளின் உதவி எளிதில் கிட்டும். ஒருசிலர் வெளிநாடு சென்று திரும்பும் வாய்ப்பும் உருவாகும்.
அரசியல் துறையினர்: கிரக நிலைகள் ஆண்டு முழுவதுமே ஓரளவு சாதகமாக அமைந்துள்ளன. கட்சியில் ஆதரவு பெருகும். மக்களிடையே செல்வாக்கு உயரும். மேலிடத் தலைவர்களுக்கு, உங்கள் மீதுள்ள நம்பிக்கை அதிகரிக்கும்.
மாணவ – மாணவியர்: வித்யா ஸ்தானமும், வித்யா காரகரும் எவ்வித தோஷமுமின்றி சஞ்சரிப்பதால், இந்த வருடம் உங்கள் படிப்பை எவ்விதப் பிரச்னையுமின்றி வெற்றிகரமாக முடித்துத் திகழ்வீர்கள்! வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில வேண்டுமென்ற அவா இருப்பின், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி கிட்டும்.
விவசாயத் துறையினர்: இப்புத்தாண்டில், மேகாதிபதி சனி பகவான்தான்! அவர் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், தேவைக்கு அதிகமான மழை பொழியும். அதன் விளைவாக, பயிர்கள் சேதமடையக்கூடும். கால்நடைகளும் நோய்வாய்ப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம். வெளிநாடுகளுக்கு உங்கள் விளை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அனுகூலமாக உள்ளது, இந்த ஆங்கிலப் புத்தாண்டு!! வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பெண்மணிகள்: அதிக உழைப்பு, குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான கவலைகள், உறவினர்களுடன் கருத்துவேற்றுமை ஆகியவற்றைக் கண்டிப்பாக நீங்கள் இந்த ஆண்டு தவிர்க்க வேண்டும். ஏனெனில், அஷ்டமச் சனியின் காரணமாக, உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. கூடியவரையில் உடல் உழைப்பையும் குறைத்துக் கொள்ள முயற்சியுங்கள்.
அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். அஷ்டம ராசியில், சனி பகவான் அமர்ந்திருப்பதை மறந்துவிட வேண்டாம்!
பரிகாரம்: சனிக்கிழமைகளில், மாலையில், உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள திருக்கோயில் ஒன்றில் தீபம் ஏற்றி வைத்து, தரிசித்துவிட்டு வந்தாலே போதும். அதியற்புத பலன் கிட்டும்.