(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
குடும்பம்: சனி பகவான் வக்கிர கதியில், மகர ராசியை நோக்கிப் பின் சென்றதால், ஜென்மச் சனி தோஷம் ஓர் சிறு இடைக்காலம் விலகிய நிலையில், நிம்மதியாக இருந்த கும்ப ராசியினருக்கு, இப்புத்தாண்டில் மீண்டும் ஜென்மச் சனி தொடர ஆரம்பித்துள்ளது!! ஜென்மச் சனியை “கண்டச் சனி” -எனக் கூறுவர் பெரியோர்! அதிர்ஷ்டவசமாக, கும்பம், சனி பகவானின் ஆட்சி வீடாக அமைந்திருப்பது, ஓர் அற்புத வரப்பிரசாதம் என்றே கூறுகிறது, ஜோதிடக் கலை!! ஒவ்வொரு ஜாதகத்திலும், லக்னம், பெற்ற தாய்க்குச் சமம் என விவரிக்கிறது “ஜோதிடப் பாரிஜாதம்” எனும் மிகப் புராதனமான ஜோதிட பொக்கிஷம். லக்னத்திற்கு அடுத்தபடியாக, ராசியை, அன்னைக்குச் சமமாக வைத்துள்ளன, மகரிஷிகள் அருளியுள்ள ஜோதிட நூல்கள். ஆதலால், ஜென்மச் சனிக் காலத்தில், மகரம் மற்றும் கும்ப ராசியினருக்கு, தோஷம் மிக, மிகக் குறைவாகவே இருக்கும் என்பது மகரிஷிகள் வாக்கு! ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற உழைப்பையும், வீண் கவலைகளையும், கற்பனையான பயத்தையும் தவிர்க்க வேண்டும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் பழகுவதில், எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்மணிகள், தனியாக இருப்பதையும், இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு, தக்க பாதுகாப்பு இல்லாமல், செல்லக் கூடாது. வெளியூர்ப் பயணங்களின்போது, சக பயணிகளுடன் நெருங்கிப் பழகாமலிருப்பது அவசியம். மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும், குளியலறையில் அடியெடுத்து வைக்கும்போதும், அதிஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். சமையலறையில், விழிப்புடன் செயல்படவேண்டும். ஏனெனில், சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
உத்தியோகம்: சனி பகவான்தான் உத்தியோகத் துறைக்கும் அதிகாரியாவார். அளவிற்கு அதிகமான கண்டிப்பு காட்டும் மேலதிகாரிகளினால், உங்கள் பொறுமைக்கு சோதனைகள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களின் மறைமுகத் தொல்லைகள், உங்கள் பொறுமைக்கு சோதனையாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பது, கடினம். பணிகளில் வெறுப்பும், விரக்தியும், பணியாற்றும் நிறுவனத்தின் மீது அதிருப்தியும் ஏற்படும். ஒரு நிமிட நேரம் உணர்ச்சிவசப்பட்டு, தவறான முடிவு எடுத்துவிடும் சாத்தியக்கூறு உள்ளது. பொறுமை, நிதானம் மிக மிக அவசியம். உங்களுக்கு நீங்களே எதிரியாகிவிடக்கூடாது. ஜென்மச் சனிக் காலத்தில், நம் மனமே நமக்கு எதிரியாகிவிடக்கூடும். எச்சரிக்கை அவசியம்.
தொழில், வியாபாரம்: மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரமிது! பண விஷயங்களில், கண்டிப்பாக இருத்தல் அவசியம். ஒரு ரூபாயானாலும், உங்கள் நேரிடையான கண்காணிப்பில்தான் செலவழிக்க வேண்டும். கீழ்நிலை, அதிகாரிகளுக்கு, சுதந்திரமாக பணப் பட்டுவாட செய்யும் அதிகாரத்தைக் கொடுக்கக் கூடாது. சிறு விஷயமானாலும், உங்கள் நேரிடையான கவனம் அவசியம். இல்லாவிடில், பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கலைத்துறையினர்: இருப்பதைக் கொண்டு, உங்கள் மாதாந்திரச் செலவுகளைச் சமாளிப்பது அவசியம்! ஏனெனில், ஜென்மச் சனிக் காலத்தில், வருமானம் குறையக்கூடும். எந்நிலையிலும், கடன் வாங்குவதை மட்டும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஜென்மச் சனிக் காலத்தில், வாங்கும் கடன் வளரும் என ஜோதிடம் விளக்கியுள்ளது. திரைப்பட வாய்ப்புகள் குறையும். அதற்கேற்ப வருமானமும் பாதிக்கப்படக்கூடும்.
அரசியல் துறையினர்: கட்சி விவகாரங்களிலும், மேல்மட்டத் தலைவர்களுடன் பழகும்போது நிதானமாக இருத்தல் வேண்டும். சந்திப்பதற்கு முன்னரே என்ன பேச வேண்டும்? உங்கள் கருத்துக்களை எவ்விதம் முன்வைக்க வேண்டும்? -என்பது பற்றி தயார் செய்துகொண்டு செல்ல வேண்டும். சிறிய தவறும், பெரும் பிரச்னையில் கொண்டுவிடக் கூடும்.
மாணவ – மாணவியர்: கல்வி முன்னேற்றம் தடைபடுவதற்கு வாய்ப்பில்லை, கிரக நிலைகளின்படி! ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆரோக்கியக் குறைவு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. ஜென்மச் சனிக் காலத்தில், சக மாணவ – மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது, ஓர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். ஏனெனில், எந்தத் தவறும் செய்யாத நிலையிலும் கூட, உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக்கூடும். மற்றபடி, நினைவாற்றலும், கிரகிப்பு சக்தியும் குறைவில்லாது இருக்கும்.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், கடுமையாக உழைக்க நேரிடும். உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் கிடைப்பது, சற்று கடினமே! சந்தை நிலவரமும் அடிக்கடி மாறுவது, பிரச்னைகளை ஏற்படுத்தும். பழைய கடன்கள் தொல்லை தரும்.
பெண்மணிகள்: ஏற்கெனவே நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளபடி, உடல் நலனில் கவனமாக இருங்கள். வெளியே செல்லும்போது, விழிப்புடன் செயல்படவேண்டும். கூடியவரையில், விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு, விழாக்களில் கலந்துகொள்ள வேண்டாம்.
அறிவுரை: ஏழரைச் சனியின், கண்டச் சனிக் காலத்தில், இரவு நேரங்களிலும், பிரயாணங்களின் போதும், உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை, புராதன ஜோதிடக் கிரந்தங்களும், மருத்துவ ஜோதிடமும் வலியுறுத்துகின்றன.
பரிகாரம்: திருநள்ளாறு, திருக் கொள்ளிக்காடு, சோளிங்க புரம் தரிசனம் மிகவும் உகந்த பரிகாரமாகும்.