சிம்மம்

Published: Last Updated on

மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை

குடும்பம்: சித்திரை 17-ம் (30-4-2024) தேதி வரை குரு பகவான், உங்களுக்கு அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், குடும்பத்தில் மன நிறைவும், மகிழ்ச்சியும் நிலவும். அதன் பிறகு, இப்புத்தாண்டு முழுவதும், சுக்கிரனின் ராசியான ரிஷபத்திற்கு மாறி, உங்கள் ராசிக்கு வாக்கு, தனம், குடும்பம் மற்றும் சுகம், ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆகிய இடங்களை, தன் சுகப் பார்வையினால், தோஷத்தை அகற்றிவிடுகிறார். வருமானம் தேவையான அளவிற்கு இந்தப் புத்தாண்டு முழுவதும் இருக்கும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். களத்திர ஸ்தானத்தில், சனி – செவ்வாய் கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். ஜோதிடம் என்பது, எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காக மட்டுமே ஏற்பட்டுள்ள கலை என நினைப்பது தவறாகும். குறிப்பிட்ட கால கட்டங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? என வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகும், ஜோதிடம்! திருமண முயற்சிகளில், சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன் பின்பு நல்ல வரன் அமையும். செவ்வாயின் நிலை காரணமாக, சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். நெருங்கிய உறவினர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, மன நிம்மதி பாதிக்கப்படும். எத்தகைய நிலையிலும், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்தல் அவசியம்.

உத்தியோகம்: சித்திரை 17-ம் (30-4-2024) தேதி வரை குரு பகவான், ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், அலுவலகச் சூழ்நிலை மன நிறைவையளிக்கும். சக உத்தியோகஸ்தர்கள் ஒத்துழைப்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தையளிக்கும். சித்திரை 18-ம் தேதி (1-5-2024) குரு ரிஷப ராசிக்கு மாறுவதால், வேலைபார்க்குமிடத்தில், பிரச்னைகள் ஏற்படும். பணிகளில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். “நண்பர்களே எதிரிகளாவர்!” எனக் கூறுகிறது, “ஜோதிட ரத்னாகரம்” எனும் புராதன ஜோதிட கிரந்தம்! வேலையில் சுணக்கம் ஏற்படும். உற்சாகம் குறையும். ஆதலால், சக ஊழியர்களுடன் பழகுவதில், ஜாக்கிரதையாக இருத்தல் மிகவும் அவசியம்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைக்கு அதிகாரம் கொண்ட கிரகங்கள் இவ்வருடம் முழுவதும் ஓரளவே சுப பலம் பெற்றுள்ளன. ஆதலால், விற்பனையும், லாபமும் ஒரே சீராக இருக்கும். நியாயமற்ற போட்டிகளை முறியடிக்கும் திறமையை சனி பகவான் தந்தருள்வார்! ஆயினும், அஷ்டம ஸ்தானத்தில் (8-ம் இடம்) நிலைகொண்டுள்ள ராகுவினால், சந்தை நிலவரம் சாதகமாக இராது. எதிர்பார்க்கும் அளவிற்கு விற்பனை இராது. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் குறையும். வெளியூர்ப் பயணங்கள் பெரிய லாபத்தைப் பெற்றுத் தராது. இந்நிலை ஆனி 4-ம் (18-6-2024) தேதிவரை நீடிக்கிறது. ஆனி 5-ம் தேதியிலிருந்து, வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும். படிப்படியாக லாபமும் உயரும். இந்த முன்னேற்றம் ஆண்டு முடியும் வரை நீடிக்கிறது. இத்தருணத்தில், உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள சிறந்த தருணமாகும்.

கலைத்துறையினர்: இப்புத்தாண்டில் பெரும்பான்மையான கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இல்லை! சிறிய காரியமானாலும், அதிகமாக அலைய வேண்டியிருக்கும். வருமானம் தேவைக்கு சற்று குறைவாகவே இருக்கும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் ஏமாற்றத்தையளிக்கும். திரைப்படத் துறையினர் அளவோடு நன்மையடைவார்கள். தயாரிப்பாளர்கள், குறைந்த அளவில் முதலீடு செய்து, தரத்தில் உயர்ந்த கருத்துகளைக் கொண்ட படங்களை எடுப்பது அவசியம். ஏனெனில், நிதிநிறுவனங்களின் உதவி அளவோடுதான் கிடைக்கும், இப்புத்தாண்டில்!

அரசியல்துறையினர்: கட்சியில் ஆதரவு மேலோங்கும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு கிட்டும். மனதில் தெளிவும், தன்னம்பிக்கையும் ஏற்படும். ஜனனகால கிரக நிலைகள் சாதகமாக இருப்பின், முக்கிய பதவியொன்றை ஏற்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

மாணவ – மாணவியர்: புத்தாண்டின் ஆரம்பத்தில் இருந்து, புரட்டாசி 19-ம் (5-10-2024) தேதி வரை கல்விக்கு அதிபதியான கிரகங்கள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. கல்வியின் சிறந்த முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய காலகட்டம் இது! மனம் படிப்பில் தீவிரமாக ஈடுபடும். பாடங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் மேம்படும். நேர்முகத் தேர்வுகளில் தெளிவான பதில்களைக் கூறி, வெற்றிக் கனியை எளிதில் பறித்துவிடுவீர்கள்!! புரட்டாசி 20-ம் (6-10-2024) தேதியிலிருந்து, கல்வி முன்னேற்றம் சாதாரணமாக இருக்கும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் ஓரளவு சுப பலம் பெற்றுள்ளன. விளைச்சல் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். இந்த ஆண்டின் மேகாதிபதி சனி பகவானாக இருப்பதால், தேவைக்குச் சற்று அதிகமாகவே மழை பொழியும். கால்நடைகளின் பராமரிப்பில் பணம் செலவழியும். பழைய கடன்கள் நீடிக்கின்றன.

பெண்மணிகள்: புத்தாண்டின் பெரும் பகுதியில் சுக்கிரன் உங்களுக்குச் சாதகமாகவே சஞ்சரிக்கின்றார். இருப்பினும், குரு பகவான் சித்திரை 17-ம் (30-4-2024) தேதி வரைதான் அனுகூலமாக சஞ்சரிக்கின்றார். அதன் பிறகு, அவரால் நன்மை எதையும் எதிர்பார்க்க இயலாது வருடம் முடியும் வரை! இருப்பினும், சுக்கிரனின் சஞ்சார நிலை சுப பலம் பெற்றிருப்பதால், ஓரளவு சரிசெய்ய முடிகிறது. குடும்ப நிர்வாகத்திற்கு அளவோடுதான் வருமானம் இருக்கும். வீண் செலவுகளில் பணம் விரயமாகும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருமணத்திற்குக் காத்திருக்கும் வனிதையருக்கு, வரன் அமைவதில் தடங்கல்கள் உண்டாகும்.

அறிவுரை: கைப் பணத்தை சிக்கனமாக எண்ணி எண்ணிச் செலவழியுங்கள். உறவினர்கள், நண்பர்கள் எவருடனும் உங்கள் சொந்தப் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வருடம் முழுவதும் சனி பகவானும், ராகுவும் அனுகூலமாக இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

பரிகாரம்: சனிக்கிழமைகள்தோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ மாலையில் 5.30 மணி முதல், 7.30 மணிக்குள் ஐந்து நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால், தோஷம் நீங்கி, குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us