துலாம்

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: சனி, கேது ஆகிய இரு கிரகங்களைத் தவிர மற்ற அனைவரும் அனுகூலமாக சஞ்சரிக்கும் நிலையில், இந்த ஆங்கிலப் புத்தாண்டு மலர்கிறது! இது தவிர, சனி பகவானால் ஏற்பட்டு வந்த அர்த்தாஷ்டக தோஷமும் விலகிவிடுவதால், அவராலும் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். ஆங்கிலப் புத்தாண்டு முழுவதிலும், பணக் கஷ்டம் இராது! ஏப்ரல் 30-ம் தேதி வரை குடும்பத்தில், பல சுப காரியங்கள் நிகழும். திருமண முயற்சிகள் கைகூடும். மே 1-ம் தேதியிலிருந்து, குரு, ரிஷப ராசிக்கு பிரவேசிப்பதால், குடும்பச் சூழ்நிலையில் பிரச்னைகள் ஏற்படும். ஒற்றுமை குறையும். கணவர் – மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் பாதிக்கப்படும். குடும்பத்தில் விலையுயர்ந்த பொருட்கள் களவு போகக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. நெருங்கிய உறவினர் ஒருவரின் தலையீட்டினால், குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். குழந்தைகள் நன்மை பெறுவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆயினும், செலவுகளும், அதற்கேற்ப சற்று அதிகமாகவே இருக்கும். உத்தியோகம்: இந்த ஆங்கிலப் புத்தாண்டு முழுவதும், ஜீவன காரகரான சனி பகவான் பஞ்சம ஸ்தானத்தில்ஆட்சி பலத்துடனும், ராகு ேயாக பலன்களை அளிப்பவராகவும் விளங்குவதால், வேலை பார்க்கும் துலாம் ராசியினருக்கு, சிறந்த முன்னேற்றம் ஏற்படும். பலருக்கு, பதவியுயர்வும், ஊதிய உயர்வும் கிட்டும். வெளிநாடு சென்று பணியாற்றி உயர வேண்டும் என்ற விருப்பமிருப்பின், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு அனுகூலமாக அமைந்துள்ளன, கிரக நிலைகள்!

தொழில், வியாபாரம்: உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கு, மிகவும் அனுகூலமான ஆண்டு இது! கொடுப்பதில் ராகு தன்னிகரற்றவர். ஆதலால், உங்கள் நிதித் தேவைகளை அவர் பார்த்துக்கொள்வார்!! திறமையும், நேர்மையும் வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதால், உங்கள் தொழிலை நன்கு வளர்த்துக் கொள்ளலாம். ஏற்றுமதி – இறக்குமதித் துறையினருக்கு, தொழில் அபிவிருத்தி சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு அமைந்திருப்பதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

கலைத்துறையினர்: சென்ற சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக, கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன, இப்போது! திரைப்படம், பரத நாட்டியம், ஆன்மிகம், நாதசுவரம் ஆகிய கலைகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும். நம் நாட்டில் கலைகள் அனைத்துமே, இயற்கையுடன் பின்னிப் பிணைந்தவையாகும்!! ஆதலால்தான், நமது கலைகள் அனைத்தும், மனித வாழ்க்கையை “தெய்வீகம்” என்ற நிலைக்கு உயர்த்துகின்றன. சங்கீதத்தின் மூலமாகவே இறைவனை அடைந்த பெரியோர்கள் ஏராளம், நம் நாட்டில்! இந்த ஆண்டு முழுவதும் நம் கலைத்துறைகள் அனைத்தும் நல்ல முன்னேற்றத்தை அடையவிருப்பதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் பெற்றுள்ள சுக்கிரன்தான், உங்கள் ராசிக்கு நாயகனாவார்! அவர் மிகவும் அனுகூலமாக வலம் வந்துகொண்டிருக்கிறார், இப்புத்தாண்டில்!! ஒருசில காலகட்டத்தைத் தவிர, பெரும்பாலும் சுப பலம் பெற்றே விளங்குகிறார்.

மாணவ – மாணவியர்: கல்வித் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள கிரகங்கள், இந்த ஆண்டில் மாணவ – மாணவியருக்கு மிகவும் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். படிப்பில் ஆர்வம் மிகும். பாடங்களை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலை புதன் தந்தருள்கிறார்! வெளிநாடு சென்று, பிரத்யேக தொழிற் கல்வி கற்க வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், முயற்சிக்கலாம்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை தங்கள் நிர்வாகத்தில் வைத்துக்கொண்டுள்ள, கிரகங்கள் அனைத்தும், உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர், இப்புத்தாண்டில்! அக்டோபர் மூன்றாம் வாரத்திலிருந்து பூமி காரகரான செவ்வாய், வக்கிர கதியில் மாறி, மாறி பயணிப்பதால், தேவைக்கு அதிகமான நீர் வரத்தால் பயிர்கள் சேதமடையக்கூடும். சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

பெண்மணிகள்: ஏப்ரல் மாதம் முடிய குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இருவருமே உங்களுக்கு ஆதரவாக வலம் வருகின்றனர். மே மாதம் 1-ம் தேதியிலிருந்து, சுக்கிரன் மட்டுமே சாதகமாக உள்ளார். குடும்பச் சூழ்நிலை மன நிம்மதியை அளிக்கும். குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றமடைவார்கள். கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் சற்றே குறையும். வேலைக்குச் சென்று வரும் வனிதையருக்கு, லாபகரமான ஆண்டு இது!

அறிவுரை: உறவினர்களுடன் அனுசரித்து, நடந்துகொள்வது அவசியம். ஒற்றுமைக் குறைவும், அதன் காரணமாக, மன நிம்மதி பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் மண் அகல் ஒன்றில் நெய் தீபம் ஏற்றி வந்தால் போதும். கைமேல் பலன் கிட்டும். வசதியில்லாதவர்கள், தங்கள் வீட்டுப் பூஜையறையிலேயே இதைச் செய்யலாம். ஒவ்வொரு துளி நெய்யும், அளவற்ற, தெய்வீகப் பரிகார சக்தி வாய்ந்தது (ஆதாரம்: “பூர்வஜென்ம நிர்ணய ஸாரம்”.)

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us