(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: ஏப்ரல் மாதம் முடியும் வரை, லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பது, மிகவும் அனுகூலமான கிரக நிலையாகும்! வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். மே 1-ம் தேதி குரு பகவான், விரய ஸ்தானத்திற்கு மாறுவது, சுப நிகழ்வுகளும் சுபவிரயங்களும் ஏற்படும். சில தருணங்களில், நிதி நெருக்கடி கவலையை அளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். திருமண முயற்சிகளுக்கு, தடங்கல்கள் ஏற்படும். மிதுன ராசிக்கு, பாக்கிய ஸ்தானமாகிய கும்பத்தில் சனி பகவான் இருப்பது, பல நன்மைகளை அளிக்கக்கூடிய கிரக நிலையாகும். கேதுவின் நிலை, சாதகமாக இல்லை! இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது, கவனமாக இருத்தல் அவசியம். பழைய கடன்கள் கவலையை அளிக்கும்.
உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில், பலம் வாய்ந்த ராகு அமர்ந்திருப்பது, அன்றாடப் பணிகளில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது! வேலைச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். அதிகாரிகளின் கண்டிப்பு மனத்தில் வெறுப்பை ஏற்படுத்தும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, சலுகைகள் காரணமின்றி மறுக்கப்படும். அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, வெளியூர்ப் பயணங்கள் செல்லும்போது, முக்கிய ஆவணங்களையும், உடைமைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு, விருப்பத்திற்கு மாறாக, பதவிமாற்றம் ஏற்படும். கூடியவரையில், மேலதிகாரிகளுடன், சற்று அனுசரித்து நடந்துகொள்ள வேண்டிய புத்தாண்டு இது!! வெளிநாடுகளில் பணியாற்றிவரும் மிதுன ராசியினருக்கும், இவை பொருந்தும்.
தொழில், வியாபாரம்: தொழில் ஸ்தானத்தில் உள்ள ராகு, கடும் போட்டியை ஏற்படுத்துவார்! அதிக அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் ஆகஸ்ட், மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க நேரிடும். சில்லரை வியாபாரிகள், நடைபாதை விற்பனையாளர்கள் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைப்பது, சற்று கடினம். பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால், அவ்வப்போது எதிர்பாராத நிதியுதவிகள் கிடைக்கும். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். ஏற்றுமதி – இறக்குமதித் துறையினருக்கு, அனுகூலமான ஆண்டாகும் இது! புதிய ஆர்டர்கள், தக்க தருணத்தில் கிடைக்கும்.
கலைத் துறையினர்: மிகவும் சுமாரான ஆண்டாகும் இது! வாய்ப்புகளும், வருமானமும் ஒரே சீராக இருக்கும். நிதி நிறுவனங்கள் தக்க தருணத்தில் கைகொடுக்கும். திரைப்படத் துறையினர், அளவோடு முதலீடு செய்து, புதுப் படங்களை எடுக்கலாம். வருடத்தின் கடைசி இரு மாதங்களில் மிகக் கடுமையான பணப்பற்றாக் குறையைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
அரசியல் துறையினர்: இப்புத்தாண்டில், கிரகங்கள் ஓரளவே உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றன. வருமானத்திற்குக் குறைவிராது. இருப்பினும், கட்சிப் பிரச்னைகள் மன அமைதியைப் பாதிக்கும். ஒரு சிலர் வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமும் ஏற்படக்கூடும்.
மாணவ – மாணவியர்: ஆண்டின் ஆரம்பம் முதல், செப்டம்பர் 2-ம் தேதி வரையில், கல்வி முன்னேற்றம் சிறப்பாக உள்ளது. அதன் பிறகு, பாடங்களில் கவனக் குறைவு ஏற்படக்கூடும். விடுதிகளில் தங்கிப் படித்துவரும் மாணவ – மாணவியர், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியமென கிரக நிலைகள் உணர்த்துகின்றன. வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில வேண்டுமென்ற அவா இருப்பின், அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
விவசாயத் துறையினர்: இந்தப் புத்தாண்டின் மேகாதிபதி சனி பகவான்! தானியாதிபதி சந்திரன்!! தேவையான அளவிற்கு, மழை பெய்யும். தண்ணீர்ப் பற்றாக்குறை இராது. பயிர்கள் செழித்து வளரும். விளைபொருட்களுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும்.
பெண்மணிகள்: ஏப்ரல் மாதம் முடியும் வரை, குரு பகவான், லாப ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளார். சுக்கிரனும் அனுகூலமாக திகழ்கிறார். மே 1-ம் தேதியிலிருந்து, குரு, விரய ஸ்தானத்திற்கு மாறுவதால், வருடம் முடியும் வரையில், குரு பகவானால், நன்மை எதையும் எதிர்பார்க்க இயலாது! குடும்பத்தில் ஒற்றுமை குறையும். சரும சம்பந்தமான பாதிப்பு ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர்களுடன் விட்டுக் கொடுத்தும், அனுசரித்தும் நடந்து கொள்வது நல்லது.
அறிவுரை: உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது அவசியம். பகையுணர்ச்சி மேலிடும்.
பரிகாரம்: தினமும் மாலை நேரத்தில், பிரதோஷ நேரமாகிய 5.30 – 7.30-க்குள்ளாக அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ, அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ மூன்று அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, தவறாது, கந்தர் சஷ்டி கவசம் படித்து, முருகப் பெருமானை 18 முறை வலம் வந்து. வணங்கி வந்தால் போதும். பலன்களை கைமேல் பெற்று மகிழலாம்.