மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: மீண்டும் ஏழரைச் சனி ஆரம்பமாகும் இத்தருணத்தில், ஜென்ம ராசியில் ராகு அமர்ந்திருப்பதை கவனிக்க வேண்டும். ஏப்ரல் 30-ம் தேதி வரை, ராசி நாதனாகிய குருவும், அனுகூலமாக சஞ்சரிக்கிறார். அதன்பிறகு, வருடம் முடியும் வரை, அவரால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. சப்தம ஸ்தானத்தில், கேது அமர்ந்திருப்பதும், கணவர் – மனைவியரிடையே கருத்து வேற்றுமை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. கைப்பணத்தை, எண்ணிச் செலவழிக்க வேண்டும். இல்லாவிடில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், நிதி நெருக்கடி ஏற்படக்கூடும். சிறு விஷயங்களுக்குக்கூட, அதிகமாக அலையவேண்டியதிருக்கும். செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், நிலம் சம்பந்தமான பிரச்னைகள் நல்லபடி தீரும்.

உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில், பணிச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். உங்கள் திறமைக்கு நிர்வாகத்தினரின் பாராட்டுதல் கிடைக்கும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு, மனத்திற்கு நிம்மதியை ஏற்படுத்தும். புதிதாக வேலைக்கு முயற்சிக்கும் மீன ராசி அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். ஆயினும், வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில்தான் கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: போட்டிகள் அதிகரிக்கும். லாபம் குறையாது. புதிய முதலீடுகளில் இறங்க அனுகூலமான ஆண்டு அல்ல இது! சகக் கூட்டாளிகளின் மறைமுகச் செயல்கள், உங்கள் வியாபாரத்தைப் பாதிக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதப்படும். அதனால், நிதிப் பற்றாக்குறை ஏற்படும்.

கலைத்துறையினர்: ஏற்கெனவே மிகக் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வரும் கலைத் துறை அன்பர்களுக்கு, மேலும் ஓர் சோதனையாக அமைந்துள்ளது இந்த ஏழரைச் சனிக் காலம்! எதிர்பார்த்திருந்த நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். வருமானம் குறையும். தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த கலைத் துறை நிறுவனங்கள், பல காரணங்களினால், உங்களைப் புறக்கணிக்கும். குறைந்த வருமானத்தில் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது! நிதி நிறுவனங்களின் ஆதரவு குறையும். நடிகர்கள், தங்கள் ஆடம்பரச் செலவுகளைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். வாய்ப்புகள் கிடைத்தாலும், வருமானம் குறைவாகவே இருக்கும். நண்பர்களாகப் பழகியவர்கள்கூட, உங்களைக் கண்டும் காணாதது போல், ஒதுங்கிவிடுவார்கள்.

அரசியல் துறையினர்: சிறு காரியமானாலும், திட்டமிட்டுச் செயல்படுவது மிகவும் அவசியமாகும். கட்சியில் செல்வாக்கு குறையும். மனதில் குழப்பம் நிலவும். வேறு கட்சிக்குச் சென்றுவிடலாமா? -என நினைக்குமளவிற்கு, கட்சியில் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள்! அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள்!! முக்கிய விஷயங்களில், உங்கள் கருத்துக்களை வெளியிடாமலிருப்பது நல்லது. கூடியவரையில், சற்று வளைந்து கொடுங்கள். ஏழரைச் சனி நடைபெறுகிறது! பின்பு நிமிர்ந்துகொள்ளலாம்.

மாணவ – மாணவியர்: கிரக நிலைகளின்படி, வித்யா ஸ்தானமும், வித்யா காரகரும் சுபத்துவப் பாதையில் தோஷமின்றி நீடிக்கின்றன. ஆதலால், இந்த ஏழரைச் சனியின் ஆரம்பக் காலம் உங்்கள் கல்வியை பாதிப்பதற்குச் சாத்தியக்கூறு கிடையாது. இருப்பினும், அதன் சாயை, அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதைகளை ஏற்படு்த்தக்கூடும். அதற்கு, எளிய பரிகாரமும் உண்டு.
விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாயும், விவசாயத் துறைக்கு உயிர்நாடியைப் போன்ற சூரியனும், சுப பலம் பெற்றுள்ள நிலையில், இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது! ஏழரைச் சனியின் ஆரம்பக் காலத்தினால், வயல் பணிகளில், உழைப்பு கடினமாக இருப்பினும், அதற்கேற்ற நல்ல விளைச்சலும், வருமான உயர்வும் கிடைப்பது, மனத்திற்கு நிறைவைத் தரும். கால்நடைகள் அபிவிருத்தியடையும்.

பெண்மணிகள்: ஏப்ரல் மாதம் முடியும் வரையில், குரு பகவான் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றார். சுக்கிரன், கிட்டத்தட்ட ஆண்டு முழுவதுமே சுப பலம் பெற்றுள்ளார். ஆதலால், இந்த ஆண்டு, ஏழரைச் சனியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். மேலும், உங்கள் ராசிக்கு சனி பகவான் இரட்டை ஆதிக்கம் கொண்டுள்ளவர்! விரயாதிபதியான சனி, லாபாதிபதியும் ஆவார் – உங்களுக்கு!! இவற்றின் காரணமாக, இந்த ஏழரைச் சனியினால் ஏற்படும் தோஷம், எளிய பரிகாரத்திற்கு உட்பட்டதேயாகும்!

அறிவுரை: அதிக உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். குறித்த நேரத்திற்கு, உண்பதும், உழைப்பதும், உறங்கச் செல்வதும் என கட்டுப்பாடான பழக்க – வழக்கங்களைக் கடைப்பிடித்தால் போதும். நிரந்தர உடல் பாதிப்புகளுக்காக மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் மீன ராசியினர் தவறாது, மருந்துகளைக் குறித்த நேரங்களில் எடுத்துக் கொள்வதும், ஓய்வெடுப்பதும் அவசியம். மற்றபடி, ஏழைரைச் சனியின் இந்த ஆரம்பப் பகுதி, அதிக சோதனைகளை ஏற்படுத்தாது!!

பரிகாரம்: 1. சனிக்கிழமைதோறும் வீட்டின் பூஜையறையில், மாலையில், 5.30 மணியிலிருந்து, 7.30 மணிக்குள்ளாக மண் அகலில் மூன்று எள் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால், கைமேல் பலன் கிடைக்கும்.

2. பெண்மணிகள் சனிக்கிழமைதோறும், பகல் உணவு ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, இரவில் உபவாசமிருப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us