(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: ஏப்ரல் மாதம் முடியும் வரை, ஜென்ம ராசியில், குருவும், விரய ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்திருக்கின்றனர்! இருப்பினும், லாப ஸ்தானத்தில், தனது ஆட்சி பீடத்தில், சனி அமர்ந்திருப்பதால், பணக் கஷ்டம் இராது!! ஆயினும், வரவிற்கேற்ற செலவுகளை ஏற்படுத்துவார், ராகு. ஜனவரி 31ம் தேதி 2024 வரை குடும்பச் சூழ்நிலை, கவலையளிக்கும். உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமை குறையும். ஏதாவதொரு உடல் உபாதை ஏற்பட்டு, வைத்தியரை நாட வேண்டியிருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி முன்னேற்றம் பற்றிய கவலைகள் மனதை அரிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். மே 1-ம் தேதி குரு பகவான், மேஷ ராசியை விட்டு, ரிஷப ராசிக்கு மாறுவதால், குடும்பச் சூழ்நிலையில் படிப்படியாக நல்ல மாறுதல்கள் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம். வருமானம் உயரும். மனதை அரித்து வந்த பல குடும்பப் பிரச்னைகள் நல்லபடி தீரும். ராசியின் பூர்வ புண்ணிய, களத்திர பாக்கிய ஸ்தானங்களுக்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், ஆண்டின் முதல் நான்கு மாதங்களாக, மனதைப் பாதித்துவந்த பல துன்பங்கள் நல்லபடி தீருவதால், மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும். ரிஷபம், உங்கள் ராசிக்கு, வாக்கு, தன, குடும்ப ஸ்தானமாக விளங்குவதால், அதிர்ஷ்ட பலன்கள் உங்களைத் தேடி வரும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
உத்தியோகம்: ஜீவனகாரகரான, சனி பகவான், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்கிறார், இந்த ஆங்கிலப் புத்தாண்டு முழுவதும்! மேலும், மே மாதம் குரு பகவானும் தன ஸ்தானத்திற்கு மாறி, பாக்கிய ஸ்தானத்தை, தனது சுபப் பார்வையினால் பலப்படுத்துவதால், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, கூடுதல் சலுகைகளுடன் இடமாற்றம் ஆகியவற்றிற்கு நல்ல வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். விரய ஸ்தானத்தில் ராகு உள்ளதால், பொறுப்புகளும், அன்றாடப் பணிகளில் கடின உழைப்பும், வெளியூர்ப் பயணங்களும் ஏற்படக்கூடும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையின் அனைத்து பிரிவுகளும், சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளன. கோள்சார விதிகளின்படி, அவரது கும்ப ராசி சஞ்சார காலம், பல வகைகளிலும் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் அளிக்கக் கூடியது. ராகுவின் நிலையினால், வியாபாரத்தில் போட்டிகளும், சிறு சிறு பிரச்னைகளும் ஏற்படக்கூடும். அவற்றைத் திறமையுடன் சமாளித்து, வியாபாரத்தை உயர்த்தும் திறனை அளித்தருள்வார், சனி பகவான்!! சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு, உற்சாகத்தைத் தரும். ஏற்றுமதி – இறக்குமதித் துறையினருக்கு, லாபகரமான புத்தாண்டு இது!! தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வியாபாரம் முன்னேற்றம் சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் உருவாகும்.
கலைத் துறையினர்: மேஷ ராசிக்கு, தன ஸ்தானமாகிய ரிஷபம், கலைத் துறைக்கு அதிபதியான சுக்கிரனின் ஆட்சி வீடாகும்! புதிய வாய்ப்புகள் அதிக சிரமமின்றி, கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சனி பகவான் பூரண பலத்துடன் இருப்பது, ராகுவின் தோஷத்தை ஓரளவு குறைகிறது. அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் அவ்வப்போது, சிறு சிறு ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும். ராகுவிற்கு பரிகாரம் அவசியம்.
அரசியல் துறையினர்: லாப ஸ்தானத்தில், சனி பகவான் பரிபூரண சுப பலத்துடன் நிலைகொண்டுள்ள தருணத்தில், ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது! ராகுவின் நிலையினால், கட்சியில் மறைமுகமான எதிர்ப்புகள் உருவாகும். செல்வாக்கு குறையும். உயர்மட்டத் தலைவர்களிடம் உங்களைப் பற்றிய தவறான செய்திகள் கொண்டு செல்லப்படும். லாப ஸ்தானத்தில், சனி பகவான் சிறந்த சுப பலம் பெற்றிருப்பதால், உங்கள் நலன்கள் பாதுகாக்கப்படும்.
மாணவ – மாணவியர்: இந்த ஆண்டு முழுவதும், ராகு அனுகூலமாக இல்லை! புதன் ஓரளவு சாதகமாக சஞ்சரிக்கின்றார்!! படிப்பில் மனம் தீவிரமாக ஈடுபடும். சக-மாணவர்களுடன் நெருங்கிப் பழகாமலிருத்தல் நல்லது.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் கடின உழைப்பை ஏற்படுத்துவார், விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு! அதிர்ஷ்டவசமாக, லாப ஸ்தானத்தில், ஜீவன காரகரான சனி பகவான் பூரண சுப பலம் பெற்று வலம் வருவது, மிக நல்ல கிரக அமைப்பாகும். பட்டபாட்டிற்கு, ஏற்ற விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். சிலருக்கு, புதிய பசுக்கள் சேரும் யோகமும் உள்ளது.
பெண்மணிகள்: கிரக நிலைகளின்படி, இந்த ஆங்கிலப் புத்தாண்டில், நன்மைகள் குறைவாகவும், பிரச்னைகள் சற்று அதிகமாகவும், ராகுவின் நிலையினால், அடிக்கடி ஏதாவதொரு உடல் உபாதையும் ஏற்பட்டும், கவலையளிக்கும். குரு, சுப பலம் பெறுவதால், வருமானம் உயரும். ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் நலன் பயக்கும்.
அறிவுரை: சிறு உபாதையானாலும், மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் பிரதோஷ காலமாகிய மாலை மணி 5.30லிருந்து 7.30க்குள்ளாக திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ எள் எண்ணெய் தீபம் ஏற்றி வரவும். சக்திவாய்ந்த பரிகாரம், அனுபவத்தில் காண்பீர்கள்!