(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: லாப ஸ்தானத்தில் ராகுவும், விரயத்தில் குருவும், ஜீவன ஸ்தானத்தில் சனியும் அமர்ந்திருக்கும் நிலையில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது உங்களுக்கு! வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆயினும், கைப்பணம் பல வழிகளிலும் விரயமாகும். மே 1-ம் தேதி, குரு பகவான், ஜென்ம ராசிக்கு மாறுதலும் எச்சரிக்கை தேவை. ஒரு சிலர் உத்தியோகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். லாப ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால், பணப் பற்றாக்குறை இராது. குடும்பப் பிரச்னைகளினால், மன நிம்மதி பாதிக்கப்படக்கூடும். திருமண முயற்சிகள் எவ்விதப் பலனும் இல்லாமல் நீடிக்கும். குடும்பத்தில், ஒற்றுமை குறையும். ராகு அனுகூலமாக இருப்பதால், எதிர்பாராத பண உதவிகள் தக்க தருணத்தில் கிடைக்கும். ஆரோக்கியத்தில், கவனம் அவசியம்.
உத்தியோகம்: ஜீவனாதிபதியான சனி பகவான், அவரது ஆட்சி வீடான கும்பத்தில் சுப பலம் பெற்றுள்ளதால், மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தையளிக்கும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொறுப்புகளும், பணிச் சுமையும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு, இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. புதிய வேலைக்கு முயற்சிக்கும் அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். ஆயினும், வெளியூர் செல்ல வேண்டியிருக்கும்.
தொழில், வியாபாரம்: வியாபார முன்னேற்றத்திற்கு, சனி மற்றும் ராகு ஆகிய இரு கிரகங்களின் சஞ்சார நிலைகளும் மிகவும் முக்கியம். ராகு, லாப ஸ்தானத்திலும், சனி ஜீவன ஸ்தானத்திலும், சுப பலம் பெற்றுத் திகழ்வதால், லாபகரமான ஆண்டாகும். வெளியூர்ப் பயணங்கள் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தரும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் பலருக்குக் கிட்டும். புதிய முதலீடுகளில் அளவோடு ஈடுபடலாம். நிதி நிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, அந்நியச் சந்தைகளில் புதிய வரவேற்பு உருவாகும். நீண்டகாலமாகக் கைக்குக் கிடைக்காமல் கவலையளித்து வந்த பாக்கிகளை வசூலிப்பதற்கு ஏற்ற கால கட்டமிது.
கலைத் துறையினர்: ராகு மற்றும் சுக்கிரன் ஆகியோர் கலைத் துறையுடன் நேர்முக ஆதிக்கம் கொண்ட கிரகங்கள். செவ்வாயும், புதனும் மறைமுகத் தொடர்பு கொண்டவர்கள் (ஆதாரம்: சாணக்கியரின் “அர்த்த சாஸ்திரம்” மற்றும் “ஜோதிட ரத்னாகரம்”). கோள்சார விதிகளின்படி, இந்த ஆங்கிலப் புத்தாண்டில் பெரும்பாலும் எல்லா கிரகங்களும் அனுகூலமாகவே சஞ்சரிப்பதால், கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் சற்று அதிகமாகவே கிடைக்கும். வருமானம் உயரும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல் தொடர்புகள் துணை நிற்கும். ஒருசிலர் அரசியலில் நேரடியாக ஈடுபடுவார்கள். திருமணமாகியுள்ள சினிமாத் துறையினருக்கு, குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படும்.
அரசியல் துறையினர்: பெரும்பான்மையான கிரகங்கள், சுப பலம் பெற்று இருப்பதால், அரசியலில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். அது உங்கள் அரசியல் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவிகரமாக அமையும். வருமானத்திற்குக் குறைவிராது. மேல்மட்டத் தலைவர்களின் பரிபூரண ஆதரவைப் பெறுவீர்கள். அக்டோபர் 18-ம் தேதியிலிருந்து, நவம்பர் 11-ம் தேதிவரை உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருத்தல் நல்லது.
மாணவ – மாணவியர்: ஆகஸ்ட் மாதம் வரை கல்வி முன்னேற்றம் எவ்வித பாதிப்புமின்றி நீடிக்கும். அதன் பிறகு, படிப்பில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும். அப்போது, ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். பிற மாணவ – மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது, தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு உதவும். ெவளிநாடு சென்று, பிரத்யேக உயர் கல்வி பெற விருப்பமிருப்பின், முயற்சிக்கலாம்.
விவசாயத் துறையினர்: இப்புத்தாண்டில், மேகாதிபதி சனி பகவான்! அவர் தனது ஆட்சி வீடான மகரத்தில் சுபபலம் பெற்று விளங்குகிறார். மகரம், ரிஷப ராசியினருக்கு ஜீவன ஸ்தானமாகும். செவ்வாயும், பெரும்பாலும் அனுகூலமாக இருப்பதால், தண்ணீர் வசதி அபரிமிதமாக இருக்கும். விளைச்சல் மற்றும் வருமானம் ஆகியவற்றிற்குக் குறைவிராது. கால்நடைகள் இந்த ஆண்டு நல்ல அபிவிருத்தியை அடையும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை எளிதாக அடைத்து, நிம்மதி பெறலாம்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ள இரு கிரகங்களில், சுக்கிரன் ஒருவரே அனுகூலமாக திகழ்கிறார், ஆண்டு முழுவதும்! குருவினால், அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. இருப்பினும், சுக ஸ்தானத்தையும், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், ஆயுள் ஸ்தானத்தையும் தனது சுபப் பார்வையினால், தோஷமற்றதாக மாற்றிவிடுகிறார். சிறு, சிறு உடல் உபாதைகளைத் தவிர மற்றபடி ஆண்டு முழுவதும், ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
அறிவுரை: ஆண்டு முழுவதும், குருபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், கைப்பணத்தைச் சிக்கனமாக செலவழியுங்கள். உறவினர், நண்பர்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும்.
பரிகாரம்: ஆலங்குடி தரிசனம் சிறந்த பரிகாரமாகும். இயலாதவர்கள், வியாழக்கிழமைதோறும் அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் நெய் தீபம் ஏற்றி வைத்து, தரிசித்துவிட்டு வந்தால் போதும்.