மகரம்

22-4-2023 முதல் 13-4-2024 வரை

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: ஜென்மச் சனி நீங்கியுள்ள இத்தருணத்தில், குரு பகவான் உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டக ராசியான மேஷத்திற்கு மாறுவது நன்மை தராது. வருமானத்திற்கு மீறிய செலவுகள் கவலையை அளிக்கும். பழைய கடன்கள் தொல்லை தரும். சிறு, சிறு உடல் உபாதைகளினால், அன்றாட அலுவல்களை கவனிப்பதில், சோர்வு ஏற்படும். மனத்தில் நிம்மதி இராது. சிறு விஷயங்களுக்குக்கூட அதிகமாக பாடுபடவேண்டியிருக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், ஏமாற்றமே மிஞ்சும். நெருங்கிய உறவினர்களுடன் வாக்குவாதமும் பகையுணர்ச்சியும் மேலிடும். சக்திக்கு மீறிய செலவுகளினால், கடன் வாங்கவேண்டிய அவசியம் ஏற்படும். மிகவும் அமைதியாக இருக்கவேண்டிய காலகட்டமிது! நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகை, கவலையை அளிக்கும்.

உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில், பணிச் சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் விரோத மனப்பான்மை கவலையை அளிக்கும். நியாயமாக உங்களுக்குத் தரவேண்டிய ஊதிய உயர்வு, மறுக்கப்படும். ராசிக்கு திருதீய ஸ்தானாதிபதியான குரு பகவான், மேஷத்்தில் நிலைகொண்டிருப்பது, கட்டுக்கடங்காத செலவுகளைக் குறிக்கிறது. ஏழரைச் சனியின் கடைசி பகுதியில் நீங்கள் இருப்பதால், குரு பகவானின் சஞ்சாரம் ஓரளவே சிரமங்களைக் கொடுக்கும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு குரு பகவானின் சஞ்சார நிலை அனுகூலமாக இல்லை.

தொழில், வியாபாரம்: குருவின் மேஷ ராசி சஞ்சாரக் காலம், தொழில் மற்றும் வியாபார முன்னேற்றத்தைத் தடை செய்யும். சந்தையில் போட்டிகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையினால், சரக்குகளை அதிகளவில் விற்பனைக்கு அனுப்ப இயலாத நிலை உருவாகும். சகக் கூட்டாளிகளின் தொல்லைகள் கவலையை அளிக்கும். நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு குறைவதால், அடிக்கடி நிதிநெருக்கடி ஏற்படக்கூடும்.

கலைத் துறையினர்: “திருதீய” குரு வருமானத்தைப் பாதிக்கும் என்பதைப் புராதன ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன. மிகக் கடுமையான நிதி நெருக்கடியை நீங்கள் சமாளிக்க நேரிடும். இருப்பினும், ராகு அனுகூலமாக இருப்பதால், அவ்வப்போது எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிட்டும். இருப்பினும், திட்டமிட்டுச் செலவு செய்வது, எதிர்காலத்தில் நன்மை செய்யும்.

அரசியல் துறையினர்: மேல்மட்டத் தலைவர்களுடன் அடிக்கடி அபிப்ராய பேதம் ஏற்படக்கூடும். தொண்டர்களிடையேயும் மதிப்பும் மரியாதையும் பாதிக்கப்படும். முக்கிய விஷயங்களில் உங்கள் கருத்தை வெளிப்படையாகக் கூறாமலிருப்பது, நன்மையளிக்கும்.

மாணவ, மாணவியர்: கிரகிப்பு சக்தியும், நினைவாற்றலும் குறையும். பாடங்களில் மனம் செல்லாமல், தேவையற்ற மனக் குழப்பங்களும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும், தோல்வி மனப்பான்மையும் மனத்தை அரிக்கும். பரிகாரம் அவசியம்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிபதியான செவ்வாய், குரு பகவானுக்கு நட்புக் கிரகமாவார். கோள்சார விதிகளின்படி, மகர ராசிக்கு, குருவினால் அர்த்தாஷ்டக தோஷம் ஏற்பட்டிருப்பினும், விளைச்சலும் வருமானமும் பாதிக்கப்படாது. இருப்பினும், வயல் பணிகளில் உழைப்பு சக்தியை மீறியதாக இருக்கும். ஓய்வின்றி உழைப்பதால், உடல் நலன் பாதிக்கப்படும். அடிக்கடி ஓய்வெடுத்துக்கொள்ள மனம் விழையும். சிறு அளவில், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். ஆடு, மாடுகளின் பராமரிப்பில் செலவுகள் அதிகரிக்கும், சில தருணங்களில், புதிய கடன்கள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை குரு பகவானின் நிலை எடுத்துக்காட்டுகிறது.

பெண்மணிகள்: உங்கள் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பு, குரு பகவானிடம்தான் உள்ளது. அவர் தற்போது ராசிக்கு அர்த்தாஷ்டகத்தில் இருப்பதால், குடும்ப நலன் மற்றும் குழந்தைகள், கணவரின் நலன் பற்றிய கவலை அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றி அச்சம் மேலிடும். மாதவிடாய், வயிற்று வலி, ஒற்றைத் தலைவலி, கிறு,கிறுப்பு போன்ற உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமாகும்.

அறிவுரை: தேவையற்ற கவலைகளையும், கடின உழைப்பையும் குறைத்துக்கொள்ளுங்கள். ஓடிவிடும், ஒருவருடக் காலம்! எந்நிலையிலும், குரு அளவிற்கு மீறிய சோதனைகளை ஏற்படுத்த மாட்டார். கொடுப்பதிலும், கெடுப்பதிலும் அளவோடுதான் நிற்பார், குரு என்பது ஜோதிடக் கலையின் சட்டமாகும்.

பரிகாரம்: பெண்மணிகள் 12 வியாழக்கிழமைகள் வீட்டின் பூஜையறையில் மாலையில் ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வந்தால் மிக நல்ல பலன் கிடைக்கும். இதே பரிகாரத்தை மாணவ, மாணவியரும் செய்துவருவது, அளவற்ற நற்பலன்களை அள்ளித்தரும். நமது ரகசிய கிரந்தங்களில், ஏராளமான பரிகாரங்கள் கூறப்பட்டிருப்பினும், குரு பகவானைப் பொருத்தவரையில், எளிய பரிகாரங்களே அவருக்குத் திருப்தியளித்துவிடும் என கூறுகின்றன, மிகப் பழைமையான ஜோதிடப் பரிகார நூல்கள். ஜாதகத்தில் குரு பகவானால் மிகக் கடுமையான தோஷங்கள் இருப்பினும் கூட, அவர் தாங்கற்கரிய கஷ்டங்களைக் கொடுக்க மாட்டார்!! கொடுப்பதிலும், கெடுப்பதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர் குரு பகவான்! கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும்கூட, குற்றவாளிக்குச் சில நீதிபதிகள் மரண தண்டனை அளிப்பதில்லை!! இறைவன் கொடுத்த உயிரைப் பறிப்பதற்கு நமக்கு அதிகாரம் கிடையாது என்பதே இதற்குக் காரணம். ஆதலால்தான், நவக்கிரகங்களில் குரு பகவான் சிறந்த யோக பலனை அளிக்கக்கூடிய நிலையில் அமர்ந்திருந்தாலும், அளவோடுதான் அளித்தருள்வார். அதேபோன்றுதான், தோஷத்தை விளைவிக்கும்படி ஜாதகத்தில் இருந்தாலும், மிகக் கடுமையான கஷ்டத்தைக் கொடுக்க மாட்டார். இதுவே தேவகுருவின் பெருமையுமாகும்! இதற்கு மாறானவர்கள் அசுர குருவான சுக்கிரனும், நிழல் கிரகமான ராகுவும் மற்றொரு வீரியம் நிறைந்த செவ்வாயும் ஆவார்கள்!

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us