22-4-2023 முதல் 13-4-2024 வரை
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம்: விருச்சிக ராசி அன்பர்களுக்கு, மேஷம், ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகும். குரு பகவான், தன் ஆட்சி வீடான மீன ராசியை விட்டு மேஷ ராசிக்கு மாறுவது, அனுகூலமானது எனக் கூறமுடியாது! அதற்கு மாறாக, பல சிரமங்களை சுமார் ஒரு வருட காலத்திற்கு நீங்கள் அனுபவிக்கவேண்டி வரும்!! மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது.சிறு உடல் உபாதையானாலும், உடனுக்குடன் மருத்துவ ஆேலாசனை பெற்று, சிகிச்சையளிப்பது நல்லது. கைப்பணம் எங்கே போயிற்று.? -என்று நீங்களே வியக்கும் வண்ணம் பல வழிகளிலும் செலவுகள் ஏற்படும். ஆேராக்கியத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர்களுடன் ஒற்றுமை குறையும். கொடுக்கல், வாங்கலில் பகை ஏற்படும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களின்போது, ஏமாற்றமே மிஞ்சும். கூடியவரையில், கடன் வாங்குவதைத் தவிர்க்கவும், சப்தம ஸ்தானத்தில், குரு சஞ்சரிக்கும் காலகட்டத்தில், வாங்கும் கடன் எளிதில் அடைபடாது என்றொரு கருத்து நெடுங்காலமாக நம்மிடையே நிலவி வருகிறது. அது உண்மையே!
உத்தியோகம்: வேலைபார்க்கும் இடத்தில், சக ஊழியர்களினால் பிரச்னைகள் ஏற்படும் என கிரக நிலைகள் முன்கூட்டியே உணர்த்துகின்றன. மேலும், குரு பகவான் அனுகூலமற்ற நிலையில் இருக்கும் இத்தருணத்தில், சனி பகவானும் அர்த்தாஷ்டக ராசியில் சஞ்சரிப்பது, உங்கள் அன்றாடக் கடமைகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலதிகாரிகளுடன் முக்கிய விஷயங்களில் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். அத்தகைய தருணங்களில், உங்கள் கருத்துதான் சரி என வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
தொழில், வியாபாரம்: குரு பகவானின் மேஷ ராசி சஞ்சாரம் உங்களுக்கு நன்மை செய்ய வாய்ப்பில்லை! சந்தையில் போட்டிகள் அதிகரிக்கும். லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். விஸ்தரிப்புத் திட்டங்கள், புதிய முதலீடுகள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். வெளியூர்ப் பயணங்களில், ஏமாற்றமே மிஞ்சும். பிற மாநிலத் தொழிலாளர்களினால், பிரச்னைகள் உருவாகும். கொடுக்கல், வாங்கலில் பகை மேலிடும். கூடியவரையில், உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம். இத்தகைய தருணங்களில்தான் ஜோதிடம் தக்க வழிகாட்டி உதவுகிறது.
கலைத் துறையினர்: குரு பகவானின் மேஷ ராசி சஞ்சார காலத்தில், கலைத் துறையினருக்கு அளவோடு நன்மைகள் ஏற்படும். விருச்சிக ராசிக்கு, மேஷம் கடன் தோஷத்தை விளைவிக்கும் இடமாகும். வரும் ஒரு வருட காலத்தில், எக்காரணத்தைக் கொண்டும் கலைத் துறையினர் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ராகு அனுகூலமாக இருப்பினும், அவர் கிட்டத்தட்ட மேஷ ராசியின் முக்கால் பகுதியைக் கடந்து, மீன ராசிக்கு வெகு சமீபத்தில் நிலைகொண்டிருப்பதால், அவரால் ஏற்படும் நன்மைகளும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும் என்பதை ஜோதிடக் கணிப்பு எடுத்துக்காட்டுகிறது. பண விஷயங்களில் கண்டிப்பு அவசியம்.
அரசியல் துறையினர்: மேஷம் உங்கள் ராசிக்கு சத்ரு ஸ்தானமாகும்! ஆதலால், வரும் ஒரு வருடக் காலத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் ஆகியோருடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். அரசியல் துறையில் எப்பொழுது நிலைமை எப்படி மாறும் எவ்விதம் மாறும் என்று அறுதியிட்டுக் கூறுவது கடினம். அப்படிப்பட்ட நிலையற்ற துறை அது!! ஆதலால், பேச்சிலும், செயலிலும் நிதானமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை குருவின் நிலை எச்சரிக்கை செய்கிறது. தன் சொல்லே தனக்கு எதிரியாகக் கூடாதல்லவா? அதைத்தான் குரு பகவானின் மேஷ ராசி சஞ்சாரம் அரசியல் துறை அன்பர்களுக்கு எடுத்துக் கூறுகிறது.
மாணவ, மாணவியர்: விருச்சிக ராசி அன்பர்களுக்கு, புதன் மட்டுமல்ல – கல்வித் துறைக்குச் சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்களும்கூட அனுகூலமாக இல்லை! இத்தகைய தருணத்தில்தான், குருவும் மேஷ ராசிக்கு மாறுகிறார். விருச்சிகத்திற்கு மேஷம் நன்மை தராது. அத்தகைய இடத்தில் குரு அமர்ந்திருப்பது நல்லதல்ல! புத்தகத்தைக் கையில் எடுத்தாலே, சோர்வும், உறக்கமும் மேலிடும். சேர்ந்தாற்போல் சில மணி நேரம் படிக்க இயலாமல் தடைசெய்யும். தசா, புக்திகள் பாதகமாக இருப்பின், தகாத நண்பர்களின் சேர்க்கையும் ஏற்படக்கூடும்.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், உழைப்பு கடினமாகும். இருப்பினும், விளைச்சலும் வருமானமும் மனத்திற்கு நிறைவைத் தரும். கால்நடைகள் நோய்வாய்ப்படுவதால், மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கும். விவசாய வசதிகளுக்கு எவ்விதக் குறைவும் இராது. சந்தையில், நியாயமற்ற போட்டிகள் அதிகரிப்பதால், உங்கள் விளைபொருட்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் இராது. அன்றாட வட்டிக்குக் கடன் வாங்கி, விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகள் சந்தை நிலவரத்தைத் தீர ஆராய்ந்து பார்த்து, அவசியமான அளவிற்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லாவிடில், மிகவும் சிரமத்திற்கு ஆளாகக்கூடும் என குரு பகவானின் நிலை எச்சரிக்கை செய்கின்றது.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் கிரகம், குரு! அவரது மேஷ ராசி சஞ்சாரக் காலம், விருச்சிக ராசிப் பெண்மணிகளுக்கு ஓரளவே நன்மை செய்யும். குடும்ப நிர்வாகத்தில், பிரச்னை இராது. ஆயினும், வரவை விட செலவுகளே அதிகமாக இருக்கும். அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, பின்பு குணமாகும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள் அலுவலகத்தில் அனைவருடனும் அனுசரித்து நடந்துகொள்ளுதல் நல்லது.
அறிவுரை: ஆரோக்கியத்தில், கவனமாக இருங்கள். கடன் வாங்குவதை கூடியவரையில் தவிர்க்கவும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் மட்டும் உபவாசம் இருப்பது, மிகச் சிறந்த பரிகாரமாகும். பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.