22-4-2023 முதல் 13-4-2024 வரை
(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: சென்ற சுமார் ஒருவருட காலமாக லாப ஸ்தானத்தில் நிலைகொண்டிருந்த குரு பகவான், தற்போது ராசிக்கு விரயஸ்தானத்திற்கு மாறியிருக்கிறார். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களிடையே ஒற்றுமைக் குறைவும், வாக்குவாதமும் மேலிடும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, தக்க சிகிச்சையினால் குணம் கிடைக்கும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், புதிய கடன்களை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். தவறான வரன்களை நிர்ணயித்துவிடும் சாத்தியக்கூறும் உள்ளது. பழைய கடன்கள் கவலையை அளிக்கும். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் பிள்ளை அல்லது பெண் பிரச்னையினால் கவலை மேலிடும்.
உத்தியோகம்: உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியான சனி பகவான், ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், குருவின் விரயஸ்தான சஞ்சாரம் நிகழ்கிறது! விருப்பத்திற்கு மாறான, இட மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை குருவின் நிலை குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, பலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். பலப் பிரச்னைகளும் கவலையை அளிக்கும். புதியதாக வேலைக்கு முயற்சிக்கும் ரிஷப ராசியினருக்கு, வேலை கிடைக்கும். ஆயினும், அதில் திருப்தியிராது! நியாயமாக உங்களுக்கு அளிக்கவேண்டிய ஊதிய உயர்வு, பதவியுயர்வு ஆகியவை தள்ளிப்போகும்.
தொழில், வியாபாரம்: வியாபார அபிவிருத்தி காரணமாக, அடிக்கடி வெளியூர் அல்லது வெளி மாநிலம் செல்லவேண்டி வரும். அலைச்சல் அதிகரிக்கும். போட்டிகள் கடுமையாகும். சந்தை நிலவரம் மாறிக்கொண்டேயிருப்பதால், விற்பனை பாதிக்கப்படும். உற்பத்திக்கு அவசியமான அடிப்படை மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பது கவலையை அளிக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால், லாபம் குறையும். வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் தடங்கலும், தாமதமும் ஏற்படும். ராசிக்கு, ருண ஸ்தானமாகிய துலாம் ராசிக்கு குருவின் சுபப் பார்வை கிடைப்பதால், எந்நிலையிலும், நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை! புதிய முதலீடுகளையும், விஸ்தரிப்புத் திட்டங்களையும் கண்டிப்பாகத் தவிர்ப்பது மிகவும் அவசியம். சில தருணங்களில், சகக் கூட்டாளிகளினால், பிரச்னைகள் ஏற்படும். அத்தகைய தருணங்களில், சற்று அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.
கலைத் துறையினர்: குரு பகவானின் மேஷ ராசி சஞ்சார காலத்தில், நீங்கள் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது! ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, குடும்ப நலன்களில் பொறுப்பை ஏற்றுள்ளவர் குரு பகவானே!! அவர் விரய ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், வருமானம் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் விரயமாகிவிடும். ஓர் குறிப்பிட்ட காரியத்திற்காக வைத்துள்ள பணம், வேறு அநாவசிய செலவினால் விரயமாகிவிடும். வருடத்தின் இறுதி மாதத்தில், புதிய கடன்களை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஆதலால், வருட ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்வது, எதிர்காலத்திற்கு நலன் பயக்கும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிபதியான சுக்கிரன், உங்களுக்கு அனுகூலமான நிலையில் சஞ்சரிப்பதால், பணப்பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை. ராசிக்கு சுக ஸ்தானத்தையும் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தையும், ஆயுள் ஸ்தானத்தையும், குரு, தனது சுபப் பார்வையினால் பலப்படுத்துவதால், மேலிடத் தலைவர்களின் ஆதரவு நீடிக்கிறது. கட்சியில் தொண்டர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். கட்சிப் பொறுப்புகளினால், அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும். அசதியும், ேசார்வும் ஆட்ெகாள்ளும். உடல் ஓய்விற்குக் கெஞ்சும்! ஒரு சிலருக்கு, சட்டரீதியான பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். பொதுக்கூட்டங்களில் பேசும்போது வார்த்தைகளை அளவோடு பேசுதல் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது.
மாணவ, மாணவியர்: விரய ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பினும், கல்விக்கு அதிபதியான புதன் சுப பலம் பெற்றிருப்பதால், படிப்பில் எவ்விதத் தடங்கலுமின்றி, முன்னேற்றம் நீடிக்கிறது. சுக ஸ்தானத்தை, குரு பார்ப்பதால், உயர் கல்விக்கு உதவிகள் தேடிவரும். புரட்டாசி மாதம், ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால், வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயிலும் யோகமும் பலருக்குக் கிட்டும். இதற்கான உதவிகள் எளிதில் கிட்டும். பலருக்கு, படிப்பு முடிந்தவுடன், நல்ல வேலை கிடைத்துவிடும். ஆவணி 26ம் தேதியிலிருந்து, மார்கழி 7ம் தேதிவரை குரு பகவான் வக்கிர கதியில் செல்கிறார்! இதுபற்றி கவலைப்படவேண்டியதில்லை!! ஏனெனில், அதிசார, வக்கிர கதி மாறுதல்கள் குரு பகவானை பாதிப்பதில்லை.
விவசாயத் துறையினர்: இந்த ஆண்டின் மேகாதிபதி, குரு பகவான்தான்! உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் அவர் நிலைகொண்டிருப்பதால், தேவைக்கு அதிகமான தண்ணீர் வரத்தினால், பயிர்கள் சேதமடையும். கால்நடைகள் நோய்வாய்ப்படும். அவற்றின் பராமரிப்பில் சேமித்த பணம் விரயமாகும். பழைய கடன்களும் சிரமத்தைத் தரும். குடும்பக் கவலைகளும் மனத்தை வாட்டும்.
பெண்மணிகள்: ராசிக்கு விரய ஸ்தானத்திற்கு குரு பகவான் நிலைகொண்டிருப்பது, அனுகூலத்தைத் தராது. இந்த ஆண்டு, நீங்கள் பொறுமை, நிதானம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது, மிகவும் அவசியம். ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் நல்லது. வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள், தங்கள் பணிகளில் கவனமாக இருத்தல் வேண்டும். திருமண வயதிலுள்ள பெண்மணிகளுக்கு, வரன் அமைவது தாமதமாகும்.
அறிவுரை: குரு விரய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், இந்த ஒரு வருடக் காலத்திலும் திட்டமிட்டுச் செலவு செய்தல் மிகவும் அவசியம். ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும்.
பரிகாரம்: 12 வியாழக்கிழமைகள் உபவாசமிருத்தல் மிக நல்ல பரிகாரமாகும். பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.