கன்னி

22-4-2023 முதல் 13-4-2024 வரை

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: வீரியம் நிறைந்த சனி பகவான், கும்ப ராசியில் சுப பலம் பெற்று அனுகூலமாக சஞ்சரிக்கும் நிலையில், ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய மேஷ ராசிக்கு, குரு பகவான் மாறியது, அனுகூலமான மாறுதல் என்று கூற முடியாது! ராகுவின் அஷ்டம ஸ்தான சஞ்சாரம், குருவின் சேர்க்கையினால், குறையும் என்பது உண்மையே!! ஆயினும், சூரியன் அவரது உச்ச கதியில் இருக்கும் நிலையில், குருவும் இணைவது குடும்பத்தில் பணப் பிரச்னை ஏற்படக்கூடும். வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். இருப்பினும், சென்ற பல மாதங்களாக ராகுவின் நிலை காரணமாக, ஏற்பட்டிருந்த ஆரோக்கியக் குறைவு, உடல் உபாதைகள், ஒற்றுமைக் குறைவு ஆகியவற்றின் கடுமை குறையும். விவாகம் சம்பந்தமான முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது.

உத்தியோகம்: வேலைக்குச் சென்றுவரும் கன்னி ராசி அன்பர்கள், தங்கள் அன்றாடப் பணிகளில் அதிகக் கவனத்துடன் செயலாற்றவேண்டியது அவசியம் என கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. அஷ்டம ஸ்தானத்தில், சூரியன், குரு மற்றும் ராகு ஆகிய கூட்டணி உருவாகியுள்ளதால், தொழிற்சாலைகளில் பணியாற்றிவரும் ஊழியர்கள், இயந்திரங்களைக் கையாளும்போது, அதிஜாக்கிரதையாக இருப்பது மிகவும் அவசியம். விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. மானிட வாழ்க்கையில் ஜோதிடம் உயிர்காக்கும் தோழன் என்று கூறினால், அது மிகையாகாது! கூடியவரையில் சிக்கனமாக செலவு செய்யவும். சக ஊழியர்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். அவர்களது சொந்தப் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

தொழில், வியாபாரம்: கிரக நிலைகள் ஓரளவே சாதகமாக அமைந்துள்ளன. நியாயமற்ற போட்டிகள் கடினமாக இருக்கும். லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள தினமும் போராட வேண்டியிருக்கும். பல தருணங்களில் நிதிப் பற்றாக்குறை ஏற்படும். சகக் கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடு உருவாகும். கடனுக்கு சரக்குகள் அனுப்புவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். சில்லரை வியாபாரிகள், அன்றாட கந்து வட்டிக்குக் கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். ஜோதிடம் தெரிவிக்கும் இந்த எச்சரிக்கை உங்கள் எதிர்கால நன்மைக்காகவும், உங்கள் குடும்பத்தின் ஷேமத்திற்காகவும் இங்கு வெளியிட்டிருக்கின்றோம்.

கலைத் துறையினர்: எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கைக்குக் கிடைப்பதில் ஏமாற்றமே மிஞ்சும். திரைப்படத் துறையினருக்கு, பணப் பற்றாக்குறை மிகக் கடுமையாக இருக்கும். வசதியான வாழ்க்கையையே இதுகாறும் அனுபவித்து வந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோர் தற்போதைய நிலை கருதி ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தயாரிப்பாளர்கள், புதிய படம் எடுப்பதற்கு முன் பல தடவைகள் ஆழ்ந்து சிந்தித்து, முயற்சியில் இறங்குவது விவேகமாகும்.

அரசியல் துறையினர்: குறிப்பாக, இந்த குரு பகவானின் மேஷ ராசி சஞ்சாரம், அரசியலில் ஈடுபட்டுள்ள பிரமுகர்களுக்கும், தொண்டர்களுக்கும் பல எச்சரிக்கைகளை விடுக்கின்றது – உங்களின் நன்மைக்காகவே! கட்சியில் எவரையும் முழுமையாக நம்பிவிடாமல் இருக்க வேண்டும். “தோளைத் தழுவினவர்கள் அனைவருமே தோழர்களாகிவிடமாட்டார்கள்…!” எனக் கூறுகிறது, “காதம்பரி” எனும் பிரசித்தி பெற்ற வடமொழி காவியம் ஒன்று! இந்தக் கருத்து, இப்போதைய கன்னி ராசி அரசியல் பிரமுகர்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். மேஷத்தில் சூரியனும், ராகுவும் இணைந்துள்ள இத் தருணத்தில், பரம சுபக் கிரகமான குரு பகவான் இணைவது, மேஷ ராசி அரசியல் துறையினருக்கு, மிகச் சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது.

மாணவ, மாணவியர்: தேவையற்ற பல சிந்தனைகளினால் பாடங்களில் மனத்தை ஊன்றிச் செலுத்த இயலாத மன நிலை ஏற்படும். ராகுவின் நிலையினால், அடிக்கடி ஏதாவதொரு உடல் உபாதை உடலை வருத்திக்கொண்டே இருக்கும். சக ஊழியர்கள் சிலராலும், பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளது. கூடியவரையில், நீங்களுண்டு உங்கள் பாடங்கள் உண்டு என்று அனைத்து விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பது உங்களுக்கு நன்மையளிக்கும்.

விவசாயத் துறையினர்: வயல் பணிகளுக்கு, அதிகாரியான செவ்வாய், அனுகூலமாக இருப்பதால், விளைச்சலும் வருமானமும் தேவையான அளவிற்கு இருக்கும். ஆயினும், பல வகைகளிலும், பணச் செலவு அதிகமாக இருக்கும். சந்தை நிலவரம், பல தருணங்களில் சாதகமாக இராது. ராகு – சூரியன், செவ்வாய் ராசியில் சேர்ந்திருப்பதால், அதிக மழையினாலும், வேறுபல காரணங்களினாலும், பயிர்கள் சேதமடையும். பல தருணங்களில், கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அண்டை நிலத்தாரோடு பகையுணர்ச்சி மேலிடும். கால்நடைகள் நோய்வாய்ப்படுவதனால், மருத்துவச் செலவுகள் சக்திக்கு மீறியதாக இருக்கும்.

பெண்மணிகள்: குரு பகவான், அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிப்பதாலும், ராகுவின் பாதிப்பினால் சூரிய பகவானுக்கு சிறிது தோஷம் ஏற்பட்டிருப்பதாலும், குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்குக் குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். தேவைக்கேற்ப வருமானம் கிடைப்பதும் சற்று கடினம்தான்! நெருங்கிய உறவினர்களின் மனப்போக்கு, வேதனையை அளிக்கும்.

அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சி்று பிரச்னைகளுக்கெல்லாம் மனத்தை அலட்டிக்கொள்ளவேண்டாம். வருமானத்திற்குள் குடும்பச் செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவும்.

பரிகாரம்: தினமும் காலையில், கந்தர் சஷ்டி கவசம், சுந்தர காண்டம், மந் நாராயணீயம் ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றைப் படித்து வரவும். பெண்மணிகள், மீனாட்சி பஞ்சரத்னம், அபிராமி அந்தாதி, ராம பட்டாபிஷேக ஸ்தோத்ரம் ஆகியவற்றை தினமும் படித்துவந்தால், சோதனைகள், சூரியனைக் கண்ட பனியென பறந்தோடும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us