(15-01-2026 முதல் 12-02-2026 வரை)
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம்: ராசிக்கு விரய ஸ்தானமாகிய மிதுனத்தில், குரு பகவான் சஞ்சரிக்கும் இம்மாதத்தில், அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் ஆகியோரின் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் கூட்டு சேர்ந்துள்ளனர். “எங்கே போயிற்று....? எப்படிப் போயிற்று....?” -என்று நீங்களே வியக்கும் வண்ணமாகக் கைப்பணம் விரயமாகிவிடும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. கூடியவரையில், வெளியில் அலைவதையும், வீண் கவலைகளையும் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். “மனக் கவலையே உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது...” எனக் கூறுகின்றது புராதன ஜோதிட நூலான “பிருஹத் ஜாதகம்”! இந்த உண்மையை நவீன மருத்துவ நூல்களும் ஆமோதிக்கின்றன. பெரும்பான்மையான உடல் பாதிப்புகள், மனக் கவலைகளினாலேயே ஏற்படுகின்றன எனக் கூறுகிறது, “அஷ்டாங்க ஹிருதயம்” எனும் புராதன மருத்துவ கிரந்தம். இன்றைய வாழ்க்கையில், கவலைப்படாமல் எவரும் இருக்க முடியாது! ஆயினும், கவலையே வாழ்க்கையாக இருப்பதும் கூடாது அல்லவா?! ஆதலால், எந்த அளவிற்குக் கற்பனையான கவலைகள், எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் ஆகியவற்றைத் தவிர்க்கின்றோமோ, அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படாமல் இருக்கும் எனக் கூறுகின்றன, நமது மருத்துவ நூல்கள்! இல்லாத ஒன்றை, “அதுவாக இருக்குமோ...? அல்லது இதுவாக இருக்குமோ!” -என்றெல்லாம் நாமாகவே கற்பனை செய்துகொண்டு கவலைப்படுவது உடல் நலனை வெகுவாகப் பாதித்துவிடும் என ஆயுர்வேத நூல்கள் விவரிக்கின்றன. ஆதலால், நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு, கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிகாரம் படைத்த சனி பகவான், ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்திருப்பது, எதிர்பாராத பல நன்மைகளை உங்களுக்கு அளிக்கவிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. தசா, புக்திகளுக்கேற்ப, பதவியுயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில், அனைவரின் ஒத்துழைப்பும் அன்றாடக் கடமைகளில் உற்சாகத்தைத் தரும். சிலருக்கு, இடமாற்றமும், அதன் காரணமாக, கூடுதல் சலுகைகளும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. புதிதாக உத்தியோகத்திற்கு முயற்சித்து வரும் கடக ராசி அன்பர்களுக்கு, வெற்றி காத்துள்ளது!! வெளிநாட்டிலுள்ள பிரபல நிறுவனங்களில், முயற்சிப்பதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைகள், அனைத்தும் சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் பெரும்பாலும் உள்ளன எனக் கூறுகின்றன, “உத்தர காலாம்ருதம்", “ஜோதிட ரத்னாகரம்” போன்ற மிகப் பழமையான ஜோதிடக் கிரந்தங்கள்! இதனையே, “பிருஹத் ஜாதகம்” எனும் புராதன ஜோதிட நூலும் வலியுறுத்திக் கூறுகிறது. இத்தகைய சக்திவாய்ந்த சனி பகவான், ராகுவுடன் இணைந்து லாப ஸ்தானமாகிய கும்ப ராசியில், சஞ்சரிப்பது, நல்ல முன்னற்றத்தையும், வர்த்தக அபிவிருத்தியையும், லாபத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறன்!
கலைத் துறையினர்: நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆதலால், வருமானம் உயரும். உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்து கொள்வதற்கு ஏற்ற தருணம் இது. தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
அரசியல் துறையினர்: உங்கள் அரசியல் வாழ்க்கையில் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன! பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறமையில்தான் உள்ளது!! சூரியன், உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர் ஒருவரின் நட்பும், சேர்க்கையும் உங்களுக்கு இம்மாதம் துணை நிற்கின்றன. வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறை பெரும்பாலும், “வித்யாகாரகர்” எனப்படும் புதன் பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. அந்தப் புதன், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். தேர்வுகளில் முன்னணியில் திகழ்வீர்கள்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறை, செவ்வாயின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. சூரியனுக்கும் இத்துறையில் ஆதிக்கம் உள்ளது. இவ்விரு கிரகங்களும் சுப பலம் ெபற்று, அனுகூலமாக வலம் வருவதால், நல்ல விளைச்சலும் வருமானமும் கிடைக்கும். அடிப்படை வசதிகளான தண்ணீர், உரம், விதைகள் ஆகியவை குறைவின்றிக் கிடைக்கும். கால்நடைகள் நல்ல அபிவிருத்தியை அடையும்.
பெண்மணிகள்: திருமணமாகியுள்ள பெண்மணிகளுக்கு, இல்லற வாழ்க்கை இனிக்கும்! கணவர் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் அன்பு, மனதைக் குளிர்விக்கும். சிலருக்கு, சொந்த வீடு அமையும்.
அறிவுரை: லாப ஸ்தானத்தில் சனி - ராகு இணைந்திருப்பதால், தேவையற்ற செலவுகளில் பணம் விரயமாகும். ஆதலால், கைப் பணத்தை எண்ணி, எண்ணி செலவழியுங்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிது பசு நெய் சேர்த்துவருவது அற்புதப் பலனளிக்கும் என “பரிகார ரத்னம்” எனும் புராதன ஜோதிட நூல் கூறுகிறது.
அனுகூல தினங்கள்:
தை : 3 - 5, 10 - 14, 18, 19, 24 - 25, 28, 29.
சந்திராஷ்டம தினங்கள்:
தை : 6 பின்னிரவு முதல், 9 மாலை வரை.


