search-icon-img
featured-img

மகரம்

Published :

(15-01-2026 முதல் 12-02-2026 வரை)

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: ஜென்ம ராசியில் இரு உஷ்ண கிரகங்களான ராசியில் சூரியனும், செவ்வாயும் இணைந்துள்ள இத்தருணத்தில், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில், குரு பகவானும், வக்கிர கதியில் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். தேவையற்ற அலைச்சல், தரக்குறைவான உணவகங்களில் உண்பது, இரவு நேரத்தில், கண்விழித்தல் ஆகியவற்றைத் தவிர்த்தல் மிகவும் அவசியம். நமது உடலும், ஓர் துல்லிய இயந்திரம்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்! இந்த இயந்திரத்தை நாம் எந்த அளவிற்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு மட்டும்தான், அது ஆரோக்கியமாக வேலை செய்யும் என்பதை மறந்துவிடக்கூடாது!! அதேபோன்று, நம் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். உடலும், உள்ளமும் மிக நெருங்கிய தொடர்புள்ளவை. ஒன்று பாதிக்கப்பட்டாலும், மற்றொன்று பாதிக்கப்படும். ஆதலால்தான், நம் முன்னோர்கள், உடல் ஆரோக்கியத்துடன், உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளல் அவசியம் என்பதை வற்புறுத்தியுள்ளனர். கைப்பணத்தையும், சிக்கனமாகச் செலவு செய்தல் வேண்டும். ஏனெனில், இம்மாதத்தில், எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதை, கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. திடீர் செலவுகளைச் சமாளிக்க வேண்டுமல்லவா...? முன்னெச்சரிக்கையாகவே திட்டமிட்டு, செயல்படில், பின்பு கஷ்டப்படாமலிருக்கலாமல்லவா...?

உத்தியோகம்: ஏழரைச் சனியின் சோதனைகளிலிருந்து, நீங்கள் இப்போது விடுபட்டு வருகிறீர்கள்! என்னதான் மகரம், சனி பகவானின் ஆட்சி வீடாக இருந்தாலும், அவரது தாக்கத்தை ஓரளவாவது இந்த ராசியில் பிறந்தவர்கள் அனுபவித்திருப்பார்கள். அத்தகைய சோதனைக் காலம் இப்போது, நீங்கி வருகிறது. ஏழரைச் சனிக் காலம் முடியும்போது, அதன் பிடியினால் துன்பப்பட்டவர்களுக்கு, ஓர் நன்மை செய்வதாக ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு, சனி பகவான் வாக்களித்திருப்பதைப் புராதான நூல்கள் விவரித்துள்ளன. ஆதலால், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெரிய அளவில் நன்மை ஒன்றைச் செய்துவிட்டுத்தான், சனி பகவானின் ஏழரைச் சனிக்காலம் முடிவுறும்!

தொழில், வியாபாரம்: சென்ற சில மாதங்களாக சந்தையில், மிகக் கடினமான போட்டிகளையே அனுபவித்துவந்த உங்களுக்கு, இனி படிப்படியாக வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்பட ஆரம்பிக்கும். மூலப் பொருட்களின் விலை குறையும். சந்தையில் உங்கள் பொருட்களுக்குத் தேவை அதிகரிக்கும். அதனால், லாபமும் உயரும். உங்கள் தொழிலை விஸ்தரிப்பதற்கு, வழிவகுக்கும். இனி புதிய முதலீடுகளிலும், முயற்சிகளிலும், தயக்கமின்றி ஈடுபடலாம். லாபம் கிட்டும்.

கலைத் துறையினர்: வருமானத்தையும், செல்வாக்கையும் உயர்த்தும் பல வாய்ப்புகள் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டும்! பிரபல கச்சேரிகளில், உங்கள் நிகழ்ச்சி நடைபெறும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், வெளிநாடு சென்று, அங்கு நிகழும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் கிட்டும். உங்கள் பெயர் பிரபலமாகும். அதே தருணத்தில், வருமானமும் உயரும். சிலருக்கு, அரசாங்க விருது கிடைப்பதற்கும், சாத்தியக்கூறு உள்ளது. உங்கள் பொருளாதாரத்தைச் சரிசெய்துகொள்ளும் அளவிற்கு வருமானம் கிட்டும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையின் ஏற்ற - தாழ்வுகளுக்கு, அதிகாரம் படைத்தவர் சுக்கிரனாவார்! மற்ற கிரகங்களுக்கும், இதில் பங்கு உண்டு என்றாலும், பிரதான கிரகம் சுக்கிரனே! அத்தகைய மகத்தான சக்திவாய்ந்த சுக்கிரன், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், கட்சியில் பலம் கூடும். தசா, புக்திகளுக்கு ஏற்ப பதவி ஒன்றும் உங்களைத் தேடி வரும். உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு உங்கள் கைகளை மேலும் பலப்படுத்தும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள பிரதான கிரகமாகிய புதன், தோஷம் ஏதுமின்றி வலம் வருவதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று, விசேஷ கல்வி பயில்வதற்கு வசதிகள் அனைத்தும் கிட்டும். உயர் கல்வியில் உற்சாகம் மேலிடும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையின் ஏற்றத் தாழ்வுகளை நிர்ணயிப்பது செவ்வாய் கிரகமே! மற்ற கிரகங்களுக்கும், இத்துறையுடன் தொடர்பு உண்டு! ஆயினும், இத்துறைக்கு பிரதான கிரகம் “பூமி காரகர்” எனப்படும் செவ்வாயே!! அத்தகைய சக்திவாய்ந்த செவ்வாய், இம்மாதம் முழுவதும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், தண்ணீர் வசதியும், குறைவில்லாமல் கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற கிரக நிலைகள் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் உறுதிப்படுத்துகின்றன.

பெண்மணிகள்: சுக்கிரன் ஓரளவு உங்களுக்கு ஆதரவாகவே சஞ்சரிப்பதால், பல நன்மைகள் உங்களுக்குக் காத்துள்ளன. திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமைய, சுக்கிரன் உதவிகரமாக உள்ளார். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு, மனத்திற்குப் பிடித்தமான வேலை கிட்டும். உயர் கல்விக்கு, நல்ல கலாசாலையில் இடம் கிடைக்கும்.

அறிவுரை: பெரும்பான்மையான கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன. இவ்விதம் கிரகங்கள் அமைவது அரிது!! சாதுர்யம், சமயோஜிதம், சந்தர்ப்பம் ஆகியவற்றிற்கேற்ப, பயன்படுத்திக்க கொள்ளுங்கள்.

பரிகாரம்: சனி பகவான் மற்றும், ராகுவிற்கு பரிகாரம் செய்துகொள்வது, நல்லது. தினமும் காலையில், காகத்திற்கு, நெய், பருப்பு, எள் சேர்த்து ஐந்து சாத உருண்டைகள் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

அனுகூல தினங்கள்:

தை : 1, 4 - 7, 11 - 14, 18, 23 - 25, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்:

தை : 19 பின்னிரவு முதல், 22 காலை வரை.