search-icon-img
featured-img

மீனம்

Published :

15-5-2026 முதல் 14-6-2026 வரை

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: ஜென்ம ராசியில், பலம் வாய்ந்த சனி பகவான் சஞ்சரிக்கிறார். அக்னி கிரகமாகிய செவ்வாய், வாக்கு, தனம், குடும்ப ஸ்தானத்தில்!திருதீய ஸ்தானத்தில் சூரியன்!! உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். உஷ்ணம் சம்பந்தமான சரும உபாதைகள் ஏற்படக்கூடும்.கூடியவரையில், வெயிலில் அலைவதைக் குறைத்துக் கொள்ளுதல் அவசியம். இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதையும், தவிர்ப்பது நல்லது. ஏனெனில், விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை, கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.குடும்பத்திலும்,நெருங்கிய உறவினர் களிடையே பரஸ்பர ஒற்றுமை பாதிக்கப் படக்கூடும்.வெளியூர்ப் பயணங்களின்போது, பணம், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். புதிய நபர்கள் எவரேனும் பேச்சுக் கொடுத்தால், தவிர்த்தல் அவசியம். கூடியவரையில், வெளியிடங்களில் உண்பதையும், தரக் குறைவான உணவகங்களில் சாப்பிடுவதையும் தவிர்த்தல் வேண்டும்.திருமணத்திற்குக் காத்துள்ள பெண் அல்லது பிள்ளைகளுக்கு வரன் அமைவதில் தடங்கல்கள் ஏற்படும்.

உத்தியோகம்: உங்கள் பொறுப்புகளிலும், அன்றாடக் கடமைகளிலும் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மீன ராசி அன்பர்கள், இடைத்தரகர்களை நம்பி, பணம் கொடுத்து ஏமாந்துவிடாமல் இருக்க வேண்டும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரம் ஆவதில் கால தாமதம் ஏற்படும்.

தொழில், வியாபாரம்: புதிய முதலீடுகளையும், விஸ்தரிப்புத் திட்டங்களையும் கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம். சந்தை நிலவரம் அனுகூலமாக இல்லை.சகக் - கூட்டாளிகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். வெளியூர்ப் பயணங்கள், லாபகரமாக இராது. நிதி நிறுவனங்களும் ஒத்துழைக்க முன்வராது!

கலைத் துறையினர்: லாபகரமாக இருந்து வந்த நிலைமை மாறி, வாய்ப்புகள் குறையக்கூடும். வருமானத்தை அது வெகுவாக பாதிக்கும். வருமானக் குறைவினால், பிரச்னைகள் ஏற்படக்கூடும்.சங்கீத சபாக்கள், தங்கள் நிகழ்ச்சிகளைக் குறைத்துக் கொள்ள நேரிடும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கடைசி நேரத்தில், பல காரணங்களினால், கைநழுவிப் போகும். எதிர்பார்த்திருந்த வருமானம் கிடைக்காமல் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.திரைப்படத் தயாரிப்பாளர்கள், நிதிப்பற்றாக் குறையினால், புதிய முயற்சிகளை ஒத்திப் போட வேண்டி வரும்.

அரசியல் துறையினர்: கட்சியில் செல்வாக்கு குறையும்! உயர்மட்டத் தலைவர்கள், உங்கள் கருத்துக்களைப் புறக்கணிப்பார்கள். பிற அரசியல் கட்சிகளுடனும் நெருங்கிப் பழகுவதால், உங்கள் கட்சித் தலைவர்களே உங்கள் நம்பகத் தன்மையைச் சந்தேகிக்கிறார்கள்.உங்கள் தவறுகளும் இந்நிலைக்கு ஓர் காரணம்தான்! உங்களை நீங்களே திருத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது! இல்லாவிடில், உங்கள் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் அபாயமும் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அதனால்தான் இந்த எச்சரிக்கை!

மாணவ - மாணவியர்: பாடுபட்டுப் படித்தால்தான், உங்கள் கல்வி முன்னேற்றத்தை ஓரளவு பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. உங்களை நீங்களே திருத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை கிரக நிலைகள் சந்தேகத்திற்கிடமின்றி உணர்த்துகின்றன.இன்றைய உழைப்பே, உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். பின்பு வருந்துவதினால் என்ன பயன்...?

விவசாயத் துறையினர்: கிரக நிலைகளின்படி, இம்மாதம் முமுவதும் இயற்கை உங்களுடன் ஒத்துழைக்கும் என்பது உறுதியாகத் தெரிகின்றது. பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறனில்தான் உள்ளது.பழைய கடன்கள் இருப்பின், அவற்றையும் அடைத்து, நிம்மதி பெற கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.தசா, புக்திகள் சாதகமாக இருப்பதால், புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் பலருக்கு அமைந்துள்ளது.விவசாயத்திற்குத் தேவையான, தண்ணீர், உரம் மற்றும் விதைகள், நாற்றுகள் கால் நடைகள் ஆகியவை நியாய விலையில் கிடைக்கும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சுக்கிரனும், இதர கிரகங்களும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், இம்மாதம் முழுவதும் பெண் மணிகளுக்கு உற்சாகமான காலகட்டமாகும்.முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, மனத்திற்கு ஏற்ற மணாளன் அமைவார்.திருமணமான பெண்மணிகளுக்கு, குடும்ப வாழ்க்கை இனிக்கும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு பிரபல நிறுவனத்தில் மனத்திற்கு மகிழ்ச்சியளிக்கும் வருமானத்தில் வேலை கிடைக்கும். அதனால், குடும்ப நிம்மதியை பாதித்து வந்த பணக் கஷ்டம், நீங்கும்.

அறிவுரை: பெண்மணிகளின் நலன்களுக்கு அதிகாரம் கொண்டுள்ள முக்கிய கிரகங்கள் அனைத்தும், சிறந்த சுப பலம் பெற்று சஞ்சரிக்கின்றன. வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது அவரவரது திறனில்தான் உள்ளது.

பரிகாரம்: தினமும், காலையில் சிறிது எள், நெய், பருப்பு கலந்த ஐந்து சாத உருண்டைகள் காகத்திற்கு உணவாக வைத்து வந்தால், அளவற்ற நற்பலன்கள் குடும்பத்தில் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம்.

அனுகூல தினங்கள்

வைகாசி : 3-7, 11, 12, 17-21, 25-27, 31.

சந்திராஷ்டம தினங்கள்

வைகாசி : 13 இரவு முதல் 16 காலை வரை.