(15-01-2026 முதல் 12-02-2026 வரை)
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம்: அர்த்தாஷ்டக ராசியில் சனி மற்றும் ராகுவின் சேர்க்கை ஏற்பட்டுள்ள இத்தருணத்தில், அஷ்டம ராசியிலும், குரு பகவான் வக்கிர கதியில் செல்கிறார்! சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக அலைச்சலும், முயற்சியும் தேவைப்படும். வரவிற்கு மீறிய செலவுகளில் பணம் விரயமாவதால், மாதக் கடைசியில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்கு வாதமும், கருத்து வேற்றுமையும் ஒற்றுமையைப் பாதிக்கும். வௌியூர்ப் பயணங்களில், பணம் விரயமாகும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவதில் தடங்கல்கள் மற்றும் தாமதமும் உண்டாகும். தசா, புக்திகள் சுப பலமற்று இருப்பின், தவறான வரனை நிச்சயித்துவிடும். தவறுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம் என்பதையும் கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
உத்தியோகம்: அலுவலகப் பணிகளில், நீங்கள் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன! மேலதிகாரிகள் உங்கள் அன்றாடக் கடமைகளில் குற்றங் குறைகளைக் கூறிக் கொண்டேயிருப்பார்கள். சிலருக்கு, பதவி மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. கூடியவரையில், மேலதிகாரிகள், சக-ஊழியர்கள் ஆகியோருடன் அனுசரித்து நடந்துகொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. புதிய வேலைக்கு முயற்சித்துவரும் விருச்சிக ராசி அன்பர்கள், இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமார்ந்துவிட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
தொழில், வியாபாரம்: பண விஷயங்களில், நீங்கள் கவனமாக இருத்தலின் அவசியத்தை கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. இடைத் தரகர்களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். சந்தை நிலவரம் அடிக்கடி மாறிவருவதால், உங்கள் பொருட்களுக்கு சந்தையில் விற்பனை விலையை நிர்ணயிப்பதில் சற்று கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.
கலைத் துறையினர்: கலைத் துறை என்பது பெரும்பாலும், சுக்கிரனின் சஞ்சார நிலையின் அடிப்படையில்தான் இயங்குகிறது! இம்மாதம் முழுவதும் சுக்கிரன் ஓரளவுதான் சுப பலம் பெற்று வலம் வருகிறார். ஆதலால், வாய்ப்புகள் குறையக் கூடும். அதன் காரணமாக வருமானமும் குறையக்கூடும். கைப்பணத்தை சிக்கனமாக எண்ணி, எண்ணிச் செலவு செய்வது மிகவும் அவசியம். கிடைக்கும் சில நிகழ்ச்சிகளிலும், எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானமும் கிடைக்காது.
அரசியல் துறையினர்: கட்சித் தலைவர்களுடன் பழகுவதில் நிதானமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் வற்புறுத்திக் கூறுகின்றன. ஏனெனில், அவர் களிடையே ஒற்றுமை இல்லை! ஒருவருடன் நெருங்கிப் பழகினால், மற்றவருக்குப் பிடிக்காது. அந்த உட்கட்சிப் பூசலில், நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் சாதுர்யமாக விலகி இருப்பது, உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. அரசியல் என்பதே ஒரு சூதாட்டம் போன்றதுதான் என நியாயப் படுத்துகிறது,சாணக்கியரின் “அர்த்த சாஸ்திரம்” எனும் அரசியல் நூல்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறையை தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள புதனும், மற்ற கிரகங்களும் ஓரளவு அனுகூலமாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரின் வழிகாட்டுதல்களும், நேரிடையான உதவியும், பாடங்களில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பலருக்கு நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். படிப்பு முடிந்தவுடன், வேலை கிடைப்பதற்கும், கிரக நிலைகள் உதவிகரமாக அமைந்துள்ளன.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள சூரியன், செவ்வாய் மற்றும் சனி பகவான் ஆகிய கிரகங்கள் ஆதரவாக சஞ்சரிப்பதால், விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாக இருக்கும். சனி பகவானுடன் ராகு சேர்ந்திருப்பதால், வயல் பணிகள் கடினமாக இருக்கும். விவசாயத்திற்கு அவசியமான, மூலப் பொருட்களும், தண்ணீர் மற்றும் கால்நடை வசதிகள், உரங்கள் குறைவின்றிக் கிடைக்கும். அரசாங்க உதவியும் ஓரளவு எதிர்பார்க்கலாம். மாநில அரசின் சலுகைகள் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்கள் மீது அனைத்து கிரகங்களுக்குமே ஆதிக்கம் உண்டு. எனினும், குருவிற்கும் சுக்கிரனுக்கும் மட்டும் விசேஷ தொடர்பு உண்டு என்பதை விவரித்துள்ளது, “ஜோதிட ரத்னாகரம்” எனும் பண்டைய ஜோதிட நூல். இவ்விரு கிரகங்களில், சுக்கிரன் மட்டும் உங்களுக்கு இம்மாதம் அனுகூலமாக சஞ்சரிக்கிறார்! குருவினால் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை!! வேலைக்குச் சென்று வரும் வனிதையருக்கு, அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். தற்போது நடைபெறும் தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், ஊதிய உயர்வு, பதவியுயர்வு கிட்டும். புதிய வேலைக்கு முயற்சித்து வரும் பெண்மணிகளுக்கு வெற்றி காத்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றிவரும் பெண்மணிகள், தாய்நாடு திரும்பும் வாய்ப்பும் உள்ளது. திருமணமாகியுள்ள பெண்மணிகள், கருத்தரிப்பதற்கு கிரக நிலைகள் சிறந்த சுப பலத்துடன் விளங்குகின்றன.
அறிவுரை: நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும், இம்மாதம்! எதையும் நழுவ விட்டுவிடாமல், பயன்படுத்திக் கொள்ளுங்கள். அர்த்தாஷ்டக ராசியில் சனி - ராகு கூட்டுச் சேர்க்கையும், அஷ்டம ராசியில் குரு பகவானும் நிலை கொண்டுள்ளதால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்த்துவிடுங்கள். தரக்குறைவான உணவகங்களில், உண்ண வேண்டாம்.
பரிகாரம்: தினமும் காலையில் நீராடிய பின்பும், மாலையில் வீடு திரும்பிய பின்பும், உங்கள் இஷ்ட தெய்வத்தையும் சிறிது நேரம் தியானம் செய்து வந்தால் போதும்.
அனுகூல தினங்கள்:
தை : 1, 5 - 7, 11 - 14, 18 - 21, 25 - 27.
சந்திராஷ்டம தினங்கள்:
தை : 15 மாலை முதல் 17 இரவு வரை.


