அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை
குடும்பம்: சித்திரை 13-ம் (26-4-2025) தேதியன்று ராகு, ஜென்ம ராசியிலும், கேது – சிம்ம ராசியிலும் பிரவேசிக்கின்றனர். சித்திரை 28-ஆம்(11-5-2025) தேதியன்று குரு பகவான், மிதுன ராசிக்கு மாறுகிறார். ஏற்கெனவே, ஜென்ம ராசியில் ஏழரைச் சனிக் காலம் நடைபெறுகிறது! மாசி 22-ஆம்
(6-3-2026) தேதியன்று சனி பகவான், மீன ராசியில் பிரவேசிப்பதால், ஜென்மச் சனிக் காலம் அன்றுடன் முடிவடைகிறது!! அதுவரையில், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். தேவையற்ற அலைச்சல்களையும், உடல் உழைப்பையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ஜோதிடக் கலையின் விதிகளின்படி, ஜென்மச் சனிக் காலத்தில் மருத்துவச் செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கக்கூடும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமை பாதிக்கப்படும். செலவுகளும், சக்திக்கு மீறியதாக இருக்கும். திட்டமிட்டு செலவு செய்தல் நன்மை செய்யும்.
உத்தியோகம்: உத்திேயாகத் துறை, சனி பகவானின் நேர் கட்டுப்பாட்டில் உள்ளது! அதனால்தான், ஜோதிடம், அவரை, “ஜீவன காரகர்” எனப் போற்றுகிறது. ெஜன்மச் சனிக் காலத்தில், பணிச் சுமை அதிகமாகவே இருக்கும். அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். தசா. புக்திகள் அனுகூலமாக இல்லாவிடில், விருப்பத்திற்கு மாறான இடமாற்றம் ஏற்படக்கூடும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவியுயர்வு காரணமில்லாமல் நிறுத்திவைக்கப்படும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் வெற்றி பெறுவது கடினம். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் கும்ப ராசியினர், தாய்நாடு திரும்ப நேரிடும்.
தொழில், வியாபாரம்: ஐப்பசி மாதம் முடியும் வரையில், வர்த்தகத் துறையினருக்கு, சந்தையில் போட்டிகள் அதிகமாகும். உங்கள் பொருட்களுக்கு, நியாயமான விலை கிடைப்பது கடினம். பல தருணங்களில், நிதி நெருக்கடி ஏற்பட்டு, கவலையளிக்கும். வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்கள் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் நின்றுபோகும். சந்தை நிலவரத்தை முன்கூட்டியே கணித்து தெரிந்துகொண்டு, அதற்கேற்ப உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது விவேகமாகும். புதிய முயற்சிகள் அனைத்தையும் ஒத்திப் போடுவது நல்லது. சகக்-கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்பட்டு, சிலர் விலகிவிடக்கூடும் என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.
கலைத் துறையினர்: ஐப்பசி முதல் வாரம் வரை, வாய்ப்புகளும், வருமானமும் ஓரளவு திருப்திகரமாகவே இருக்கும். ஐப்பசி 2-ம் வாரத்திலிருந்து, புத்தாண்டு முடியும் வரையில், சற்று சிரமமான காலகட்டமாகவே இருக்கும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. வருமானம் வரும்போது, சிக்கனமாக இருந்து, சேர்த்துவைத்துக் கொள்வது, எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். எதிர்பார்த்திருந்த வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். கலைத் துறையினருக்கு, இப்புத்தாண்டு ஓரளவே நன்மை செய்யும்.
அரசியல் துறையினர்: விசுவாவசு தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, ஐப்பசி மாதம் முடியும் வரையில், அரசியல் துறையுடன் தொடர்புள்ள கிரகங்கள் சுப பலத்துடன் சஞ்சரிப்பதால், கட்சியில் செல்வாக்கும், ஆதரவும் அதிகரிக்கும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவும், நம்பிக்கையும் உற்சாகத்தை அளிக்கும். புதன் சுப பலம் பெற்று விளங்குவதால், பத்திரிகைகளின் ஆதரவு பக்க பலமாக நிற்கும். கார்த்திகை மாதத்திலிருந்து, கட்சித் தொண்டர்களிடையே ஏற்படும் உட்கட்சிப் பூசல்களினால், உங்களுக்கு ஆதரவு குறையும். உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு, மன நிம்மதி குறையும். சில தருணங்களில், கட்சி மாற்றத்திற்கு மனம் விழையும்!
மாணவ – மாணவியர்: விசுவாவசு தமிழ் புத்தாண்டில், புரட்டாசி முடியும் வரையில், கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. படிப்பில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்விக்கு, உங்கள் விருப்பம் போல், இடம் கிடைக்கும். ஐப்பசி மாதத்திலிருந்து, படிப்பில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும் என்பதை கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தேவையற்ற விஷயங்களில், உங்கள் மனதைச் செலுத்துவதினால், உங்கள் கல்வி முன்னேற்றம் பாதிக்கப்படும். பிற மாணவ – மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பதும் அவசியம். விடுதிகளில் தங்கிப் படித்துவரும் இளைஞர்கள், தாங்களுண்டு; தங்கள் படிப்புண்டு என்றிருப்பது அவர்கள் எத்ிர்காலத்திற்கு நன்மை செய்யும்.
விவசாயத் துறையினர்: ஐப்பசி மாதம் முடியும் வரையில் கிரக நிலைகள் உங்களுக்கு அனுகூலமாகவே உள்ளதால், பயிர்கள் செழித்து வளரும். தண்ணீர்ப் பற்றாக்குறை இராது. கால் நடைகள் அபிவிருத்தியை அடையும். நவீன விவசாய வசதிகள் ஏற்படுவதால், உடல் உழைப்பும் குறையும். கார்த்திகை மாதம் முதல் பங்குனி முடியும் வரையில் எதிர்பாராத செலவுகளினாலும், இயற்கையின் சீற்றத்தினாலும், கால்நடைகள் நோய்வாய்ப்படுவதினாலும், பணம் விரயமாகும். கூடியவரையில், கடன் வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம். ஏனெனில், இத்தகைய கிரக நிலைகள் அமையும் போது, வாங்கும் கடன் வளரும் எனவும், அவற்றிலிருந்து மீண்டு வருவதும் கடினம் எனவும் புராதன ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன.
பெண்மணிகள்: ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள சனி பகவானுடன் சித்திரை 13-ல் (26-4-2025) ராகுவும் சேர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். திருமணமான பெண்மணிகளுக்கு, குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். வேலைக்குச் சென்றுவரும் கன்னியருக்கு, அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் கண்டிப்பு கவலையை அளிக்கும். இரவு நேரப் பயணங்களையும், வாகனங்களை ஓட்டுவதையும் தவிர்ப்பது அவசியம். மணமாலைக்குக் காத்திருக்கும் கன்னியருக்கு, வரன் அமைவதில் தடங்கல்கள் உண்டாகும்.
அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். தரக் குறைவான உணவகங்களில் உண்ண வேண்டாம். தேவையற்ற பிரயாணங்களையும், வெயிலில் அலைவதையும் தவிர்ப்பது அவசியம். பிறருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
பரிகாரம்: சனி, ராகு இருவருமே தோஷத்தை ஏற்படுத்துவதால் திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, திருநாகேசுவரம், நாக மங்களா (கர்நாடகம்்) திருத்தல தரிசனம் சக்திவாய்ந்தவை. இப்புத்தாண்டு முடியும் வரை உங்களைப் பாதுகாக்கும்.