ரிஷபம்
சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் வசீகரமாக பேசுவதில் வல்லவர். ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது பாக்கிய ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய ராசி - ஏழாம் பார்வை உங்களுடைய தைரிய வீர்ய ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
குரு பகவான் உங்களின் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பொதுவாக குரு பகவான் பாக்கிய ராசியில் சஞ்சரிப்பது சிறப்பு என்பதே பொது விதி. அதுவே இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம். இந்த குரு பெயர்ச்சியால் உங்களின் செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வ வளம் பெருகும். உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் பெயரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள்.
வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வீர்கள். பெரியோரிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். உங்களின் எண்ணங்களில் ஏற்பட்ட தடுமாற்றம் நீங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உங்களின் தேகத்தில் புதிய பொலிவு உண்டாகும்.
உங்களின் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். விலகிச் சென்றிருந்த உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். வருமானம் இரட்டிப்பாகும். பழைய கடன்களை வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் பாகப்பிரிவினை உண்டாகி உங்களுக்குரிய பங்கு கிடைத்துவிடும்.
அதோடு கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றி புகழடையும் காலகட்டம் இதுவென்றால் மிகையில்லை. நண்பர்களுடன் இணக்கமாகச் செயல்படுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கைக்கு வந்து சேரும். உங்களுக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் நஷ்டங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வீர்கள்.
குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செய்தொழிலில் மாற்றம் செய்ய நினைக்கும்போது முன் கூட்டியே கூட்டாளிகளுடன் விவாதித்து சுமுகமான நிலைமையை ஏற்படுத்திக்கொள்வீர்கள் இந்தக் காலகட்டத்தில் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதூர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டிவரும். எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது. நன்கு ஆலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். நெல் விளைச்சல் சாதகமாக இருக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும். சச்சரவுகள் ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் பலனடைவீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். சக கலைஞர்களும் உங்களை அனுசரித்து
நடந்துகொள்வார்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள்.மாணவமணிகள் கல்வியிலும் உள்ளரங்கு விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சி தேவை.
சிறப்பு பரிகாரம்: மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.