search-icon-img
featured-img

துலாம்

Published :

6.03.2026

சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை

குடும்பம்: ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய மீன ராசிக்கு சனி பகவான் மாறுவது, அனுகூலமான கிரக மாறுதலாகும். வியாதி, கடன், எதிரி ஆகிய மூன்று அம்சங்களையும் நிர்ணயிக்கும் ராசி, மீனமாகும் - துலாம் ராசியினருக்கு! இம்மூன்று துன்ப அனுபவங்களிலிருந்தும், ஓரளவு நிவாரணம் கிடைக்கும், துலாம் ராசி அன்பர்களுக்கு, இந்தச் சனி ராசி மாறுதலினால்!! பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற வழி பிறக்கும். நீடித்த உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்போது, நல்ல மருத்துவ சிகிச்சையும், வசதியும், குணமும் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வருமானமும் சிறிதளவு உயரும். செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, வரன் அமையும். குடும்பத்தில் பரஸ்பர அந்நியோன்யம் நிலவும். பல தம்பதியினருக்கு, புத்திர பாக்கியம் கிட்டும். ஜோதிடக் கலையின் விதிகளின்படி, சனி பகவான்தான் ஜீவன காரகராவார். ஆதலால், வேலைக்கு முயற்சித்துவரும் இளைஞர்களுக்கு, மனத்திற்கு நிறைவையளிக்கும் வேலை கிடைக்கும். ஒருசிலருக்கு, வெளிநாடு சென்றுவரும் யோகமும் அமைந்துள்ளது. வெளிநாட்டில் பணியாற்றிவரும் உறவினர் ஒருவரைப் பார்த்துவிட்டு வரும் யோகமும் அமைந்துள்ளது. சிலருக்கு, திருமண யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. சிலருக்கு சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளதை செவ்வாயின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது.

உத்தியோகம்: சனி பகவான்தான் உத்தியோகத் துறைக்கும், காரகத்துவம் (அதிகாரம்) வாய்ந்தவர் ஆவார். அவர் தற்போது அனுகூலமாக மாறியுள்ளதால், வேலைக்கு முயற்சித்துவரும் துலாம் ராசியினருக்கு, முயற்சியில் வெற்றி கிட்டும். மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில், வேலை கிடைக்கும். தாற்காலிகப் பணியிலுள்ளவர்களுக்கு, பணி நிரந்தரமாகும். மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு பதவியுயர்வு அல்லது ஊதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

தொழில், வியாபாரம்: சனிபகவான் அனுகூலமாக வலம் வருவதால், தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். ஆயினும், அலைச்சலும், உழைப்பும் கடுமையாக இருக்கும். சந்தையில் உங்கள் பொருட்களுக்கு போட்டிகள் அதிகரிப்பதால், கவலைகள் மேலிடும். புதிய முதலீடுகளில் இப்போது இறங்க வேண்டாம். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். நிதி நிறுவனங்களின் கண்டிப்பும், புதிய நிபந்தனைகளும் கவலையை அளிக்கும். விஸ்தரிப்புத் திட்டங்களை தள்ளிப்போடுவது நல்லது! விற்பனை அபிவிருத்தி சம்பந்தமாக, அடிக்கடி வெளியூர் அல்லது வெளிமாநிலம் சென்று வரவேண்டிய அவசியமும் ஏற்படும்.

கலைத் துறையினர்: வாய்ப்புகளுக்கு, அலையவேண்டிவரும். கிடைக்கும் நிகழ்ச்சிகளுக்கும், எதிர்பார்த்திருந்த வருமானம் கிடைப்பது கடினமே! "நிச்சயமாகக் கிடைக்கும்" என்றிருந்த வெளிநாட்டுப் பயணங்கள், கடைசி நேரத்தில் கை நழுவிப் போகும். உள்ளுர் சபாக்களின் ஆதரவும் குறைவதால், சற்று கடினமான வருமானக் குறைவை நீங்கள் சமாளிக்க வேண்டி வரும்.

அரசியல் துறையினர்: மக்களிடையே ஆதரவு பெருகும். பிற அரசியல் கட்சிகள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். செல்வாக்கு மிகுந்த பிரமுகர் ஒருவர். உங்களைத் தேடி வருவார். அரிய இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அரசியல் வாழ்க்கை மீண்டும் மலரும். வளைந்து கொடுத்து, அவ்வப்போது உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்பவர்களே அரசியலில் வெற்றியாளர்களாக வலம் வருவார்கள் என்பது சாணக்கியரின் வாக்கு.

மாணவ - மாணவியர்: சனி பகவானின் சஞ்சார நிலையினால், இரவு நேரங்களில்கூட கண்விழித்துப் படிக்க வேண்டிவரும். உழைப்பு கடினமாகும். "வித்யா காரகர்" எனப்போற்றப்படும் புதன் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்விக்கு பண உதவி கிடைக்கும். ஆசிரியை - ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களும், ஆதரவும் படிப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பலருக்கு நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறை, பெரும்பாலும், செவ்வாய், சூரியன் ஆகிய இரு கிரகங்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக "சூரிய சித்தாந்தம்" எனும் நூல் விவரிக்கிறது. ஆயினும், விளைச்சலும், வருமானமும், உழைப்பும் சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அந்தச் சனி பகவானின் சஞ்சார நிலையினால், வயல் பணிகளில் உழைப்பு சற்று கடினமாக இருக்கும். கால்நடைகளின் பராமரிப்பில் பணம் செலவழியும். இருப்பினும், உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் சனி பகவானால் குறைவின்றிக் கிடைக்கும். தண்ணீர்க் குறைபாடு அறவே இராது. கால்நடைகளும் நல்ல அபிவிருத்தியை அடையும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், புதிய கால்நடைகள் மற்றும் விளைநிலங்கள் வாங்கும் யோகமும் உள்ளதை கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

பெண்மணிகள்: இக்கால கட்டம் முழுவதுமாக பெண்மணிகளுக்கு, கிரகங்கள் ஆதரவாக சஞ்சரிக்கின்றன. மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடிய தருணமிது!! வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, நல்ல வேலை கிடைக்கும். திருமண மாலைக்குக் காத்திருக்கும் கன்னியருக்கு நல்ல வரன் அமையும்.

அறிவுரை: பல்வேறு அம்சங்களிலும், லாபகரமான தருணம் இது எனக் கொள்ளலாம். இதனைப் பயன்படுத்திக் கொள்வது, உங்கள் திறனில்தான் உள்ளது.

பரிகாரம்: சனி பகவானுக்கு மட்டும் பரிகாரம் செய்வது மிக நல்லது. குச்சனூர் (தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது), மயிலாடுதுறையில் உள்ள புனுகீசுவரர் கோயிலில், விலையுயர்ந்த செந்நிறத் திருமேனியாக வடிவமைக்கப்பட்டுள்ள சனிபகவான். தெய்வீக இன்னருளைப் பொழிபவராக, தனிச்சந்நதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். ஒருமுறை சென்று, மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, தரிசித்துவிட்டு வந்தால் போதும். திருக்கோயிலுக்குச் செல்லும்போது, நல்லெண்ணெய், திரி, அகல் விளக்கு எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம்.