2, 11, 20, 29
19.12.2017 முதல் 28.03.2020 வரை
அனைவரையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான காரியங்களையும் திட்டமிட்டு வெற்றியாக முடிக்கும் சக்தி கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே, நீங்கள் யாரையும் சாராமல் சுயஉழைப்பால் முன்னேறும் திறமை உள்ளவர்கள். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும் மனஉறுதி உடையவர். இந்த சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்து, வழக்குகளை முடித்துக் கொள்ளவும். பிடிவாதங்களைத் தளர்த்தி, அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தினர்கூட உங்கள் பெருந்தன்மையை உணராமல், உங்களுடன் வழக்குத் தொடுக்கலாம். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். இந்தக் காலகட்டத்தில் புதியவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சில தடைகள் ஏற்பட்டாலும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிவாகை சூடும். கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல்நலம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு இந்தப் பெயர்ச்சியின் மூலம் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் சாதகமாக நடந்துகொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய பிரயத்தனப்படுவீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்க கடுமையாக முயற்சி செய்யவேண்டியதிருக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து குறையலாம். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும்போது நிதானம் தேவை. பொறுப்புகள் கூடும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். செல்வாக்கு உயரும். பணவரவு அமோகமாக இருக்கும். ஆனாலும் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரித்துச் செல்வார்கள். பணவரவு சீராக இருக்கும். உடல்நலம் கெடலாம். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். எங்கும், எப்போதும் பேச்சில் நிதானம் தேவை. மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆனாலும் ஒருமுறைக்கு இருமுறை படிக்கவும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனங்களை கவனமாக இயக்குங்கள். அமிலம் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
பரிகாரம்:
திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வரவும்.
சிறப்பு பரிகாரம்:
மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 6, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.