14-4-2024 முதல் 13-5-2024 வரை
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம்: சித்திரை 17-ம் தேதி வரை, குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டிருக்கிறார்! அதன் பிறகு, அவரால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. களத்திர ஸ்தானத்தில், செவ்வாய் மற்றும் சனி இணைந்திருப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியனும், அனுகூலமாக இல்லை! சுக்கிரன், இம்மாதம் முழுவதும் அனுகூலமாக உள்ளார். பண வசதி திருப்திகரமாக இருப்பினும், அதற்கேற்ற செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ள இயலாது. மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை. வயோதிகர்கள், குளியலறைக்குச் செல்லும்போது, மிகவும் அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், கிரகநிலைகளின்படி, கீழே விழுந்து, அடிபடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. இரவு நேரங்களில்தான், ராகுவின் தோஷம் அதிகரிக்கும் என ஜோதிடக் கிரந்தங்கள் விளக்கியுள்ளன. ஆதலால், இரவில் கண்விழித்து, கழிவறைக்குச் செல்லும்போது, தூக்கக் கலக்கத்தில், வழுக்கி விழுவதற்கு வாய்ப்புள்ளதை ராகுவின் நிலை எடுத்துக்காட்டுகிறது. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சித்திரை 17-ம் தேதி வரை திருமண முயற்சிகளுக்கு ஏற்ற காலகட்டமாகும். அதன் பிறகு, கிரக நிலைகள் மாறிவிடுகின்றன.
உத்தியோகம்: சித்திரை 17-ம் தேதி வரை பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டிருக்கும் குரு பகவான், ஜீவன ஸ்தானமாகிய ரிஷபத்திற்கு மாறிவிடுகிறார். ஜீவனகாரகரான சனி பகவான், செவ்வாயுடன் கூடி சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். மேலதிகாரிகளின் ஆதரவு, சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவை பணிகளில் உற்சாகத்தைத் தரும். ஆயினும், பொறுப்புகளும், வேலைச் சுமையும் சக்திக்கு மீறியதாக இருப்பதால், அடிக்கடி சோர்வும், அசதியும் ஏற்படும். சில தருணங்களில், “வேறு வேலைக்கு முயற்சிக்கலாமா?” என்ற எண்ணம் மேலோங்கும். அத்தகைய தவறான எண்ணங்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, வேலை கிடைக்கும். ஆயினும், அதில் திருப்தியிராது.
தொழில், வியாபாரம்: வியாபாரத்தில், போட்டிகள் கடினமாக இருக்கும். லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க நேரிடும். அடிக்கடி விற்பனை சம்பந்தமாக வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லவேண்டி வரும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். சகக் கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தற்போதைக்கு ஒத்திப்போடுவது அவசியம். சில்லரை வியாபாரிகள் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இல்லையெனில், எதிர்காலத்தில் வருந்தவேண்டி வரும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ஆபத்து வருமுன், எச்சரிக்கை செய்து நம்மைக் காப்பாற்றுவதில், ஜோதிடக் கலைக்கு நிகரான கலை வேறொன்றும் கிடையாது.
கலைத்துறையினர்: சித்திரை 11-ம் தேதி வரை சுக்கிரனின் பரிபூரண ஆதரவு கிடைக்கிறது. அதுவரை, வருமானம் திருப்திகரமாக இருக்கும். அதன் பிறகு கிரக நிலைகள் மாறுவதால், வருமானமும் சிறிது குறைந்துவிடும். இருப்பதை வைத்துச் சமாளிக்க நேரிடும். ஆயினும், மக்களிடையே செல்வாக்குக் குறையாது. திரைப்படத் துறையினருக்கு, முதல் இரண்டு வாரங்கள் லாபகரமாக இருக்கும். அதற்குப் பின்பு, பின்னடைவு ஏற்படும்.
அரசியல்துறையினர்: சித்திரை 11-ம் ேததி வரை, கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக உள்ளன. அதன் பிறகு, சிறிது பின்னடைவை நீங்கள் சந்திக்க நேரிடும். பிற கட்சியினருடன், நீங்கள் கொண்டுள்ள நட்பை விலக்கிக் கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. ஏனெனில், கிரக நிலைகளின்படி, மேலிடத் தலைவர்களுக்கு உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை சுக்கிரன் மற்றும் ராகுவின் சஞ்சார நிலைகள் சூட்சுமமாக எடுத்துக்காட்டுகின்றன.
மாணவ – மாணவியர்: கிரக நிலைகள், தொடர்ந்து உங்களுக்கு அனுகூலமாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. படிப்பில் முன்னேற்றம் எவ்வித பாதிப்புமின்றி நீடிக்கின்றன. கிரகிப்புத் திறன், நினைவாற்றல் ஆகியவை அதிகரிக்கும். பாடங்களில் மனம் பதியும். மாதத்தின் கடைசி வாரத்தில், சிறு உடல் நலக் குறைவு ஏற்படக்கூடும். இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது, நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பது, தேவையில்லாமல் ஊர் சுற்றுவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிபதியான செவ்வாய், சனியுடன் சேர்ந்திருப்பது நன்மை தராது. வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். கால்நடைகள் நோய்வாய்ப்படுவதால், மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், இரவு நேரங்களின்போது, வயற்பணிகளில், எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படக்கூடும். அண்டை நிலத்தாரோடு, வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.
பெண்மணிகள்: சித்திரை 17-ம் தேதி வரை குடும்ப நிர்வாகத்தில் எவ்விதப் பிரச்னையும் இராது. அதன் பிறகு, குரு பகவான், ரிஷப ராசிக்கு மாறிவிடுவதால், சிறு சிறு பிரச்னைகள் மனத்திற்கு வேதனையை அளிக்கும். உத்தியோகம் பார்க்கும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் சக்திக்கு மீறிய உழைப்பும், பொறுப்புகளும் உடல்நலனை வெகுவாக பாதிக்கும்.
அறிவுரை: கூடியவரையில், தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்பது, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும். அஷ்டம ஸ்தானத்தில், ராகு நீடிப்பதால், முன்கோபத்தையும், பிறருடன் வாக்குவாதம் செய்வதையும் தவிர்த்தல் மிகவும் அவசியம்.
பரிகாரம்: சோளிங்கபுரம் யோக நரசிம்மரின் தரிசனம், தோஷங்களை உடனடியாகப் போக்கி, பாதுகாப்பளிக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் செல்வது, அதிக பலனைத் தரும். செல்லும்போது தூங்கா விளக்கில் நெய் சேர்க்க மறந்துவிடவேண்டாம்.மறவாமல் மூன்று மண் அகல் விளக்குகளைக் கொண்டு சென்று நெய் தீபம் ஏற்றி, தரிசித்துவிட்டு வந்தால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷமாய் மாறும் உங்கள் வாழ்க்கையில்.
அனுகூல தினங்கள்
சித்திரை: 1-3, 8-11, 15-19, 25-27, 30.
சந்திராஷ்டம தினங்கள்
சித்திரை: 21 பிற்பகல் முதல், 23 மாலை வரை.