14-4-2024 முதல் 13-5-2024 வரை
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குடும்பம்: சுக்கிரன், செவ்வாய், சனி மற்றும் புதன் ஆகிய நான்கு கிரகங்களும் இம்மாதம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். சித்திரை 17-ம் தேதி வரை குரு பகவானும், சாதகமாக உள்ளார். சித்திரை 18-ம் தேதியிலிருந்து அனுகூலமற்ற நிலைக்கு, குரு மாறிவிடுகிறார். சூரியன், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களினால் எவ்வித நற்பயனையும் எதிர்பார்க்க முடியாது! நன்மை செய்யும் கிரகங்களே அதிக சுப பலம் பெற்றுள்ளதால், பண வசதி ஓரளவு திருப்திகரமாக உள்ளது. முயன்றால், சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. முதல் இரண்டு வாரங்கள் திருமணம் சம்பந்தமான முயற்சிகளுக்கு, ஏற்றவை. அர்த்தாஷ்டக ராசியில் ராகு சஞ்சரிப்பதால், சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜீவன ஸ்தானத்தில், கேது நிலைகொண்டுள்ளதால், வேலை பார்க்கும் இடத்தில் சக-ஊழியர்களுடன் பகை ஏற்படக்கூடும். எத்தகைய நிலையிலும், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்துவிடுங்கள். மனிதப் பிறவியின் மிகப் பெரிய எதிரி முன்கோபமே!! முதல் இரண்டு வாரங்களில், மிக முக்கிய திருத்தல தரிசனம் ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், சுப பலம் பெற்றுத் திகழ்கிறார். மேலதிகாரிகள், நிர்வாகத்தினர் ஆகியோரின் ஆதரவு பணிகளில் உற்சாகத்தைத் தரும். சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். ராகுவின் நிலையினால், ெபாறுப்புகளும், வேலைச்சுமையும் உங்கள் பொறுமைக்குச் சோதனையாக அமையும். அலுவலகக் கடமைகள் காரணமாக, வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமிருப்பின், பணம் மற்றும், முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். புதிய வேலைக்கு முயற்சிக்கும் தனுர் ராசி அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். செவ்வாய், சனி இணைந்திருப்பதால், சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும். தற்கால தசா, புக்திகளை ஆராய்ந்து பார்த்தால், இது துல்லிமாகத் தெரியும். அந்நிய நாடுகளில் வேலை பார்க்க ஆர்வமிருப்பின், இம்மாதம் முயற்சிக்கலாம். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தொழில், வியாபாரம்: சம்பந்தப்பட்ட கிரகங்கள், அனுகூலமாக உள்ளன. உற்பத்தியை ஓரளவு அதிகரித்துக் கொள்ளலாம். சந்தை நிலவரம் உங்களுக்குச் சாதகமாக உள்ளது. சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். சிறு அளவில் முதலீடுகள் செய்து தொழிலை விருத்தி செய்து கொள்ளலாம். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும் என்பதையும் கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சில்லரை வியாபாரிகள், நடைபாதை விற்பனையாளர்கள் ஆகியோருக்குக்கூட, நல்ல லாபத்தைப் பெற்றுத் தருவார், சனி, செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூவரும்!! கூடியவரையில், கடன் வாங்காமல் செய்வது நல்லது. இம்மாதம் கடன் வாங்கவேண்டிய அவசியமும் இராது. வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக, பிற மாநிலங்களுக்குச் சென்று வரவேண்டிய அவசியமும் உருவாகும்.
கலைத்துறையினர்: சென்ற மாதம் ஏற்பட்ட நன்மைகள் நீடிக்கின்றன. நல்ல வாய்ப்புகள் வருமானத்தை உயர்த்தும். மக்களிடையே செல்வாக்கு உயரும். திரைப்படத் துறையினருக்கு, மிக நல்ல மாதம் இது! தயாரிப்பாளர்கள், புது திரைப்படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்தலாம். நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக திரைப்படத் துறையில் அடியெடுத்து வைக்க ஏற்ற நேரமிது!! அவரவர்களது ஜனனகால ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால், சினிமாத் துறை ஏற்றதா? இல்லையா? என்பதை மிகத் துல்லிமாக அறிந்துகொள்ளலாம். அதன்படி, முடிவெடுப்பது மிகவும் நல்லது. ஏனெனில், வெளிப் பார்வைக்குப் பகட்டாகத் தெரிந்தாலும், சினிமாத் துறையில் வெற்றிபெற பல மேடு-பள்ளங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்!!
அரசியல்துறையினர்: சென்ற மாதம் போலவே, இம்மாதத்திலும் அரசியல் துறைக்கு அதிகாரம் பெற்ற கிரகங்கள் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், நல்ல முன்னேற்றம் ஏற்படுவது நிச்சயம்! செவ்வாயும், சுக்கிரனும். மக்கள் ஆதரவு வெள்ளமெனப் பெருகிவரும். வெற்றி உறுதி. பின்பு பொறுப்புள்ள பதவியொன்று வகிப்பதற்கும் கிரக நிலைகள் சுபபலம் பெற்றுத் திகழ்கின்றன.
மாணவ – மாணவியர்: வித்யா காரகரான புதன் மற்றும் கல்வித் துறைக்குத் தொடர்புள்ள இதர கிரகங்களும், அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! படிப்பில் ஆர்வம் மிகும். தேர்வில், தெளிவாக பதில் எழுதும் திறமை ஓங்கும். நினைவாற்றல் தக்க தருணங்களில் கைகொடுக்கும். நேர்முகத் தேர்வுகளில், உடனுக்குடன் மிகச் சரியான பதிலளிக்கும் சாதுர்யத்தை புதன் தந்தருள்கிறார். பல்கலைக் கழக உச்ச நிலை முனைவர் பட்டம் (doctorate) பெற்றுத் தரும் அளவிற்கு கிரக நிலைகள் உச்சபலம் பெற்றுள்ளதால், முயற்சிக்கவும்.
விவசாயத் துறையினர்: பூமி – விவசாய காரகரான செவ்வாய், ஜீவன காரகரான சனி பகவானுடன், சனியின் ஆட்சிப்பீடமான கும்ப ராசியில் இணைந்திருப்பது உயர்ந்த யோக பலன்களைக் குறிக்கிறது. விளை நிலத்தைப் பார்த்தாலே தெரியும், உங்களின் உழைப்பினால்பூமியெங்கும் பசும் புல்லைப் பாயாக விரித்ததுபோன்ற நிலையைக் காணலாம். உடலும் உள்ளமும் மகிழ்ச்சியில் பூரிக்கும். சந்தையில் உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும் என்பதையும் கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. விளை நிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. வாய்ப்பினைத் தவறவிடாதீர்கள்!
பெண்மணிகள்: சித்திரை 18-ம் தேதி குரு ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுவதால், குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, மனம் வேதனைப்படும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம்.
அறிவுரை: அர்த்தாஷ்டக ராசியில், ராகு அமர்ந்திருக்கும் நிலையில், சித்திரை 18-ம் தேதி குருவும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு மாறுவதால், ஆேராக்கியத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களுடன் வாக்குவாதம் வேண்டாம்.
பரிகாரம்: ராகுவிற்காக, சனிக்கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் தீபத்தில் சிறிது நல்லெண்ணெயும், குருவிற்காக சிறிது பசு நெய்யும் சேர்த்துவரவும்.
அனுகூல தினங்கள்
சித்திரை: 1, 6-11, 15-18, 22-25, 30.
சந்திராஷ்டம தினங்கள்
சித்திரை: 2 நள்ளிரவு முதல், 5 காலை வரை.