மேஷம்
17-7-2022 முதல் 16-8-2022 வரை(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: சுக்கிரன், சனி ஆகிய இருவராலும் நன்மைகள் ஏற்படும். மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. 4, 6, 8ம் இடங்களுக்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதும் நன்மையே! வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். மாதத்தின் கடைசி வாரத்தில் பண நெருக்கடியும் ஏற்படக்கூடும். மாத ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்தல் நல்லது. அர்த்தாஷ்டக நிலையில் சஞ்சரிககும் சூரியனால், உஷ்ண சம்பந்தமான உடல் பாதிப்பு ஏற்படக்கூடும். காரணமில்லாமல் அசதியும், சோர்வும் ஏற்படும். வெயிலில் அலைவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மேஷ ராசியினர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டமிது. குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும், சுக்கிரனின் நிலையினால்!! கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால், திருமணம் சம்பந்தமான முயற்சிகளை ஒத்திப்போடவும். சுக்கிரன் அனுகூலமாக உள்ளதால், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வெளியூர்ப் பயணங்களைக் குறைத்துக் கொள்வதும் அவசியம் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
உத்தியோகம்: அலுவலகப் பொறுப்புகளிலும், அன்றாடப் பணிகளிலும் கவனமாக இருத்தல் வேண்டும். கிரக நிலைகளின்படி, உங்கள் அன்றாட கடமைகளில் கவனக் குறைவும், அதன் காரணமாக தவறுகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். நிர்வாகத்தினரைப் பற்றி சக ஊழியர்களிடம் குறை கூற வேண்டாம். ஜென்ம ராசியில் ராகுவும், உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியான சனி பகவான் வக்கிர கதியில் பின்நோக்கிச் செல்வதையும் மறந்துவிடாதீர்கள்! உங்கள் ராசிக்கு சனி யோக காரகர் என்பதால் உங்கள் பதவிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. புதிய வேலைக்கு முயற்சிப்பதற்கு ஏற்ற மாதமில்லை, இந்த ஆடி!! தவறான இடைத்தரகர்கள் (புரோக்கர்கள்) மூலம் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. மேலதிகாரிகளுடன் சற்று அனுசரித்தும், சாதுர்யமாகவும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதும் எதிர்கால நன்மைக்கு உகந்தவை!
தொழில், வியாபாரம்: இந்த மாதம் முழுவதுமே பிரதான கிரகநிலைகள் உங்களுக்குச் சாதகமாக இல்லை. சந்தை நிலவரம் அடிக்கடி மாறிக்கொண்டேயிருப்பதால், பல எதிர்பாராத விளைவுகளை நீங்கள் சமாளிக்க நேரிடும். ரஷ்யா - உக்ரைன் போரினால், உலகளவில் ஏற்பட்டு வரும் மாறுதல்களும் இதற்கு ஓர் காரணமாகும். உற்பத்தித் துறையினர், தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அளவோடு நிறுத்திக்கொள்வது, நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். புதிய முயற்சிகளில் இம்மாதம் இறங்கவேண்டாம். ஏற்றுமதித் துறையினருக்கு சற்று சிரமமான மாதமாகும்.
கலைத்துறையினர்: திரைப்படத் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுளார் சுக்கிரன். தொழில்காரகரான சனி பகவானுக்கும் சினிமாத் துறையிடம் தொடர்பு உண்டு. சுக்கிரன் அனுகூலமாகவும், சனி அனுகூலமற்றும் இருப்பதால், உழைப்பிற்கு ஏற்ற வருமானமோ அல்லது, லாபமோ கிடைப்பது மிகவும் கடினம். அளவோடு முதலீடு செய்து, படங்களைத் தயாரிப்பது விவேகமான செயலாகும்! சங்கீத வித்வான்கள், பின்னணிப் பாடகர்கள், நடன ஆசிரியைகள் ஆகியோருக்கும் வாய்ப்புகள் அளவோடு நிற்கும். வருமானமும் குறையும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன், சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்வதால், இந்த ஆடி மாதத்தில் நல்ல சுப பலன்களை உங்களுக்குச் சற்று தாராளமாகவே வழங்கவுள்ளார், குருவிற்கு அடுத்த சுபக் கிரகமாவார், சுக்கிரன்!! கட்சியில் மதிப்பும், மரியாதையும் உயரும். உங்கள் கருத்துக்களைக் கேட்பதற்குக் கூட்டம் வரும். ஆதரவு பெருகும். உட்கட்சிப் பூசல்களில், எந்த அணியில் சேர்வது - எதில் சேர்ந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பது பற்றிய குழப்பம் மேலிடும்! இரு பக்கத்து நெருக்கடியும் மனநிம்மதியைப் பாதிக்கும்.
மாணவ - மாணவியர்: புதன் அனுகூலமற்ற நிலைக்கு மாறியிருப்பதால், படிப்பில் கவனம் குறையும் சோர்வும், உறக்கமும் மேலிடும். உங்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத, தவறான விஷயங்களில் மனம் செல்லக்கூடும். ஒழுக்கக் குறைவான சக மாணவர்களுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தல் மிகவும் அவசியம். பரிகாரம் கீழே கூறியுள்ளோம். செய்வதற்கு எளியது. பலனோ அளவற்றது - நம் முன்னோர்கள் அருளியது.
விவசாயத்துறையினர்: சென்ற மாதத்தைப் போன்றே, இந்த ஆடி மாதத்திலும், விவசாயத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள கிரகங்களின் சஞ்சார நிலைகள் உதவிகரமாக இல்லை. வயல் பணிகளில் உழைப்பு கடினமாகும். அதிக சூரிய வெப்பத்தினால், சோர்வும், அசதியும் மேலிடும். ஜென்ம ராசியில் ராகு அமர்ந்திருப்பதால், ஆரோக்கியமும் சற்று பாதிக்கப்படும்.
பெண்மணிகள்: வருமானத்திற்குள் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது பிரச்னையாக இருக்கும். உடல் நலனிலும் சற்று கவனமாக இருத்தல் அவசியம். சிறுநீரகத் தொற்றினால் (Infection of the urinary track), பாதிப்பு ஏற்படக்கூடும். மறக்காமல் அடிக்கடி தண்ணீரைப் பருகுதல் அவசியம். (ஆதாரம்: மகரிஷி சரகர் ஸம்ஹிதை -பாகம் 1, அத்தியாயம் 7)
அறிவுரை: 1. சிக்கனம் அவசியம். திட்ட மிட்டுச் செலவு செய்யவும். 2. வெயிலில் வெளிச் செல்வதைத் தவிர்க்கவும். 3. இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்லவும்.
பரிகாரம்: 1. தினமும் உங்கள் வீட்டின் பூஜையறையில் மாலை நேரத்தில் 5.30 மணிக்கு மேலாக 7.30க்குள்ளாக, 4 பசு நெய் தீபமும், 2 நல்லெண்ணெய் தீபமும் 15 நாட்கள் செய்து வந்தாலே போதும். முடிந்தால், அருகிலுள்ள திருக்கோயிலொன்றிலும் ஏற்றி வரலாம். அபரிமிதமான பலன்களை அள்ளித் தரக்கூடிய பரிகாரமாகும்.
அனுகூல தினங்கள்: ஆடி: 1-4, 8-12, 16-19, 24, 25, 29.
சந்திராஷ்டம தினங்கள்: 21 காலை முதல் 22, 23 முற்பகல் வரை.