மேஷம்
15-1-2023 முதல் 12-2-2023 வரை(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: 2023, பங்குனி 7ம் தேதி 21-3-2023) அன்று மேஷ ராசியில் பிரவேசித்த ராகு, அந்த ராசியின் பாதையில் பெரும்பான்மையான தூரத்தைக் கடந்துவிட்டதால், அதன் சாய்மானக் கோணத்திலும், மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. ராகுவினால் ஏற்பட்ட தோஷமும் குறைந்துள்ளது. உடல் உபாதைகள் நீங்கும். குடும்பத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த வீண் செலவுகளும் இனி படிப்படியாகக் குறையும். குரு பகவான், விரயத்தில் நீடிப்பதால், திருமண முயற்சிகளில் வரன் அமைவது தாமதமாகும். நெருங்கிய உறவினர் களிடையே சிறு சிறு கருத்துவேற்றுமைகள் ஏற்படக்கூடும். இருப்பினும், விபரீதப் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை! சூரியனின் நிலையினால், சரும சம்பந்தமாக ஏற்பட்டிருந்த பிரச்னைகள் தீர ஆரம்பிக்கும். மிக முக்கியமான குடும்ப விஷயம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களை ஏற்க நேரிடும். அம்முயற்சியில் வெற்றி கிட்டும். உங்கள் சிந்தனைத் திறனையும், விடாமுயற்சியையும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாதம் இந்தத் தை மாதம்!!
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான் பங்குனி மாதம் 15ஆம் தேதி (29-03-2023) அன்று லாப ஸ்தானத்திற்கு மாறுவதன் சுபபலனை இந்தத் தை மாதத்திலேயே ஓரளவு காண்பீர்கள்! இதுவரை, உங்களைக் கண்டாலே வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்ட மேலதிகாரிகளின் மனப்போக்கில் வியக்கத்தக்க மாறுதலைப் பார்க்க முடியும். இதுவரை உங்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு, சலுகைகள், காரணமின்றி மறுக்கப்பட்டிருக்கும். அவை உங்களுக்கு இப்போது அளிக்கப்படும் என சனி பகவானின் நிலை உறுதியளிக்கிறது. காலத்தின் சக்தியையும், கிரக நிலைகளின் வீரியத்தையும் ஜோதிடக் கலையைத் தவிர வேறு எவர்தான் துல்லியமாக எடுத்துக்காட்ட முடியும்? எந்த அளவிற்கு இந்தப் புத்தாண்டு, மேஷராசி அன்பர்களுக்கு நன்மை செய்யும் என்பதை அவரவரது தனிப்பட்ட ஜாதகத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், மிகத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையும் சனியின் ஆதிக்கத்தில்தான் வருகிறது. ஆதலால், உற்பத்தியை அதிகரிப்பதற்கு சந்தை நிலவரம் உதவிகரமாக அமையும். வியாபாரத் துறையினருக்கு, அன்றாட விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதித் துறை அன்பர்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து, புதிய தொடர்புகளும், ஆர்டர்களும் கிடைக்கும். புதனின் ஆதிக்கத்தினாலும், செவ்வாயின் நிலையினாலும், மருந்துகள், அறுவை சிகிச்சை சாதனங்கள், ஆயுர்வேதத் தைலங்கள், சூர்ணங்கள், லேகியங்கள் ஆகியவற்றிற்கு சந்தையில் நல்ல தேவை இருக்கும். அதனால், லாபம் பெருகும். புதிய கிளைகள் திறப்பதற்கு அனுகூலமாக உள்ளன கிரக நிலைகள். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள்.
கலைத் துறையினர்: கலைத் துறை அன்பர்களுக்கு, சமய சஞ்சீவினியாக அமைந்துள்ளது, இம்மாதம்! பல மாதங்களாகக் குறைந்த வருமானத்தில், மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த உங்களுக்கு நல்ல காலம் பிறக்கிறது, இப்போது!! திரைப்படத் துறையினர், நாதஸ்வரக் கலைஞர்கள், கர்நாடக சங்கீத வித்வான்கள், பஜனை கோஷ்டியினர், பரத நாட்டியத் துறையினர் ஆகியோருக்கு லாபகரமான வாய்ப்புகள் கிட்டும். மாநில அரசின் உதவி உற்சாகத்தையளிக்கும். ஆன்மிகத் துறை எழுத்தாளர்களுக்கு, நல்ல வாய்ப்பளிக்கும் மாதம் இது. ‘‘கார்ட்டூன்” மற்றும் சித்திரம் வரைபவர்களுக்கு, புதிய வாய்ப்புகள் கிட்டும். திறமை இருந்தும், வறுமையில் வாடும் கலைத் துறையினருக்கு, புத்துயிர் அளிக்கும் தை மாதம், இது! தமிழக அரசின் விசேஷ கவனமும், ஆதரவும் கலைத் துறையினருக்குக் கிடைக்கும். கவலையிலேயே காலங்கழித்துவந்த கலைத் துறையினருக்கு, கதிரவனைக் கண்ட கமலமென முகம் மலரும், இம்மாதத்தில்!! அனுபவத்தில் பார்க்கலாம்.
அரசியல் துறையினர்: மேஷ ராசி அரசியல் துறையினருக்கு, சுக்கிரன் அனுகூலமாக இல்லாவிடினும், மேஷ ராசியில் பெரும்பகுதியைக் கடந்துவிட்ட ராகுவினாலும், அனுகூலமாக மாறியுள்ள சனி பகவானாலும், செல்வாக்கு மிகுந்த கட்சி ஒன்றுடன் தொடர்பு ஏற்படும். அதுவே உங்கள் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பமாக அமையும். சென்ற காலத்தில் நீங்கள் எடுத்த தவறான முடிவுகளுக்குப் பரிகாரமாக அமையும் இம்மாதம்!! மனத்தை அரித்து வந்த கட்சிப் பிரச்னை ஒன்று நல்லபடி தீரும்.
மாணவ - மாணவியர்: ராசிக்கு, பாக்கியஸ்தானமும் வித்யாகாரகரான புதனுக்கு நட்பு வீடாகவும் அமைந்துள்ள தனுர் ராசியில் புதன் அமர்ந்திருப்பதால், மனத்தில் தெளிவும், நினைவாற்றலும், கிரகிப்புத் திறனும் ஓங்கும். தேர்வுகளில், மிகச் சரியான விடைகள் அளிக்கும் சக்தியும் கிட்டும். பலருக்குக் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. விடுதிகளில் தங்கிப் படித்துவரும் மாணவ, மாணவியருக்கு, நற்குணங்கள் அமைந்த சக மாணவர்கள் சேருவார்கள்.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், உழைப்பு கடுமையாக இருப்பினும், விளைச்சல் திருப்திகரமாகவே இருக்கும். சந்தையில் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் லாபம் பெருகும். தண்ணீர் வசதி குறைவின்றிக் கிடைக்கும். இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள் “ஆர்கானிக்,'' கனிகள் ஆகியவற்றிற்கு தேவை அதிகரிக்கும்.
பெண்மணிகள்: இம்மாதத்தின் மிக முக்கிய நன்மை, ராகு, மேஷத்தின் பாதி தூரத்தைக் கடந்து விட்டதேயாகும்! ஆதலால், உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாதவிடாய்ப் பிரச்னைகள், ஒற்றைத் தலைவலி, மூட்டுவலி, அசதி, காரணமற்ற பயம் ஆகியவை இனி இராது. குடும்பச் சூழ்நிலையும் திருப்திகரமாகவே இருக்கும், இம்மாதம் முழுவதும்.
அறிவுரை: செவ்வாய் அனுகூலமற்று இருப்பதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகளும், முன்கோபமும், பிடிவாதமும் இந்த ராசியினருக்குத் தேவையற்ற விரோதத்தைத் தேடிக் கொடுக்கும். தவிர்ப்பது மன நிம்மதியை அளிக்கும்.
பரிகாரம்: செவ்வாய் பரிகாரத் திருத்தலமான வைத்தீஸ்வரன் கோயில் சென்று, தீபமேற்றி வைத்து தரிசித்துவிட்டு வருவது இம்மாதத்திற்கான சிறந்த பரிகாரமாகும். வசதி இல்லாதவர்கள், வீட்டின் பூஜையறையிலேயே செவ்வாய்க்கிழமைகளில் தீபமேற்றி வந்தால் போதும். கைமேல் பலனளிக்கும்.
அனுகூல தினங்கள்: தை: 1-2, 6-8, 12-14, 19-21, 23-25, 29.
சந்திராஷ்டம தினங்கள்: தை: 3, 4, 5 பிற்பகல் வரை.