(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
17-9-2025 முதல் 17-10-2025 வரை
குடும்பம்: ஜென்ம ராசியில் வலம் வரும் சனி மற்றும் ராகுவினால் உங்கள் ராசிக்கு ஏற்படும் தோஷத்தை தனாதிபதியும், லாபாதிபதியுமான குரு பகவான், தனது சுபப் பார்வையினால் குறைத்துவிடுகிறார். அஷ்டம ராசியில் நிலைகொண்டுள்ள சூரிய பகவானால், சரும சம்பந்தமான உபாதைகள் உடலை வருத்தும். ஔஷதகாரகரான புதன், இணைந்திருப்பதால், எளிய சிகிச்சை மூலம், குணம் கிட்டும். பண வசதி போதிய அளவு இருக்கும். குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது, உற்சாகத்தையளிக்கும். உத்தியோகம் சம்பந்தமாகவோ அல்லது குடும்பப் பிரச்னைகள் காரணமாகவோ வெளியூர் சென்றுவர நேரிடும். சுக்கிரன் சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், திருமண முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பிள்ளை, அல்லது பெண் அல்லது மாப்பிள்ளையின் வரவு மகிழ்ச்சி தரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற முடியும். ராசிக்கு, பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால், திருமணமான பெண்கள் கருத்தரிப்பார்கள். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், சொந்த வீட்டிற்குக் குடிபோகும் யோகமும் அமைந்துள்ளது. புகழ்பெற்ற, புராதனத் திருத்தலம் ஒன்றிற்குச் சென்று, தரிசித்துவிட்டுவரும் பாக்கியமும் கிட்டும். சிலருக்கு, கங்கா புண்ணிய நதி ஸ்நான பாக்கியமும் கிட்டும் என புராதன ஜோதிட நூல்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளன.
உத்தியோகம்: உழைப்பும், பொறுப்புகளும் கடினமாக இருக்கும். ஆயினும், நிர்வாகத்தினர், உயரதிகாரிகள் ஆகியோரின் ஆதரவும், பாராட்டுதல்களும் பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். தற்காலிகப் பணியிலுள்ள கும்ப ராசியினர், தங்கள் பணிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள். வேலையில்லாமல் துன்பப்படும் கும்ப ராசியினருக்கு, நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகப் பொறுப்புகள் சம்பந்தமாக, இதுவரை பிரிந்திருந்த கணவர் - மனைவியர் ஒன்றுசேர்வர்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைக்கு அதிகாரம் படைத்த சனி பகவான், வக்கிரகதியில் தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் சஞ்சரிப்பதும், அவருக்கு மிதுன ராசியில் நிலைகொண்டுள்ள குரு பகவானின் பார்வை கிடைப்பதும், வியாபாரத்தில் நல்ல லாபம் காத்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. சந்தை நிலவரம் சாதகமாக உள்ளது. நிதி நிறுவனங்கள் ஒத்துழைக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக, வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் கிட்டும். அதன் மூலம், வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
கலைத் துறையினர்: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். மக்களிடையே புகழ் ஓங்கும். வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும். ஒருசிலர், வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும், அங்கு நிகழும் கலைநிகழ்ச்சிகள் பங்கேற்கும் சாத்தியக்கூறும் ஏற்படும். இதன் மூலம், அந்நிய நாடுகளில் உங்கள் புகழ் பரவும். ஒருசிலரை வெளிநாட்டின் படத் தயாரிப்பாளர் ஒருவர் உங்களைத் தேடி வருவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் பெற்றுள்ள கிரகங்கள், உங்களுக்கு சாதகமாகவே, சுபபலம் பெற்று சஞ்சரிக்கின்றன. கட்சித் தலைவர்களின் ஆதரவு நீடிக்கிறது. கட்சித் தொண்டர்களின் ஆதரவு, மனத்திற்கு உற்சாகத்தைத் தரும். உயர் பதவியிலுள்ள அதிகாரி ஒருவரின் தொடர்பு, உங்கள் அரசியல் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்பதும் தெரிகிறது.
மாணவ - மாணவியர்: புரட்டாசி 12-ம் தேதி வரை வித்யா காரகரான புதனும், கல்வித் துறைக்கு சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்களும் உங்களுக்கு அனுகூலமாகக் கை கொடுத்து வலம் வருகின்றனர். அதன் பிறகு, ஒவ்வொருவராக விலகிச் சென்றுவிடுகின்றனர். முதல் இரண்டு வாரங்கள் படிப்பில் மனம் தீவிரமாக ஈடுபடும். அதன் பிறகு, படிப்படியாக பாடங்களில் கவனம் குறையக்கூடும். தேவையற்ற விஷயங்களில் மனம் ஈடுபடும். கூடியவரையில், பிற மாணவர்களுடன் அளவிற்கு மீறி பழக வேண்டாம்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையுடன் தொடர்புள்ள சூரியன், செவ்வாய் மற்றும் இதர கிரகங்கள் சுபபலம் பெற்று வலம் வருகின்றனர். ஆதலால், வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருப்பினும், செவ்வாய் மற்றும் சூரியனின் நிலைகளினால், உஷ்ணம் அதிகமாக இருந்தாலும், விளைச்சலும் வருமானமும் இம்மாதம் எதிர்பார்த்ததைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும் என உறுதியாகக் கூற முடியும். விளைச்சலும், திருப்தி தரும்.
பெண்மணிகள்: குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இருவரும் உங்களுக்குத் துணை நிற்கிறார்கள். எண்ணங்கள் நிறைவேறும்! மனத்தில் அமைதி பிறக்கும்!! நெருங்கிய உறவினர்களுடன் சுமுகமான உறவு மன அமைதியைத் தரும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். வேலையில்லாத பெண்மணிகளுக்கு, மனத்திற்கு நிறைவையளிக்கும் நல்ல வேலை அமையும்.
அறிவுரை: ஜென்ம ராசியில், சனி பகவானும். ராகுவும், அஷ்டம ராசியில் சூரியனும் சஞ்சரிப்பதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகளும், சோர்வும் ஏற்படக்கூடும். கூடியவரையில், ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். சக்திக்கு மீறிய உடல் உழைப்பைத் தவிர்ப்பதும் அவசியம்.
பரிகாரம்: ஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளில் பசுவிற்கு உணவளிப்பது நல்ல பலனையளிக்கும். அந்த இரு தினங்களிலும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபம் ஒன்றை ஏற்றி தரிசித்துவிட்டு வந்தால் போதும்.
அனுகூல தினங்கள்
புரட்டாசி : 1-3, 8-10, 16-19, 23-25, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி : 5 மாலை முதல், 7 வரை.