இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கும்பம்

Published: 17 Nov 2025

(17-11-2025 முதல் 15-12-2025 வரை)

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குடும்பம்: ஜென்ம ராசியில், வக்கிர நிலையிலுள் சனி பகவானுடன், ராகு சேர்ந்திருப்பதும், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதும். வருமானக் குறைவை எடுத்துக்காட்டுகின்றன. வருமானத்திற்குள் குடும்பச் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது, மிகவும் கடினமாகவே இருக்கும். கூடிய வரையில், சிக்கனமாகவும், திட்டமிட்டு செலவு செய்வதும் உங்கள் எதிர்கால நலனிற்கு உகந்ததாக இருக்கும். இல்லாவிடில், பிறர் உதவியை நாடவேண்டிய அவசியம் ஏற்படக்கூடும். அதாவது, புதிய கடன்களை ஏற்கவேண்டிய கட்டாயம் உண்டாகும். ருண ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள குருவினால், பழைய கடன்கள் கவலையை அளிக்கும். வட்டியில் பணம் விரயமாகும். ஒரு சிலருக்கு, வைத்தியச் செலவுகளும், வெளியூர்ப் பயணங்களில் பண விரயமும் ஏற்படக்கூடும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவதில் வீண் அலைச்சலும், பண விரயமும் ஏற்படும். ஏமாற்றம், மனத்தை வருத்தும். ஆயினும், தீர விசாரிக்காமல், வரனை நிர்ணயித்துவிடக்கூடாது என கிரக நிலைகள் அறிவுறுத்துகின்றன. ஏனெனில், தவறான வரனை நிச்சயித்துவிடும் வாய்ப்பு உள்ளது.

உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சனி பகவான், வக்கிர கதியில் சஞ்சரிப்பதும், அவருடன் ராகு இணைந்திருப்பதும் வேலை பார்க்குமிடத்தில், பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலதிகாரிகளுடன் சற்று அனுசரித்து நடந்து கொள்வதும், உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் கும்ப ராசியினர், தங்கள் பணிகளில் அதிகக் கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், ராகுவின் கூட்டுச் சேர்க்கையினால், கடமைகளில் தவறுகள் ஏற்படக்கூடும். அவற்றின் விளைவு, சற்று கடுமையாக இருக்கும். ஆதலால்தான், இந்த எச்சரிக்கை!

தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் அடிக்கடி மாறுபடுவதால், உங்கள் விற்பனை விலைகளை நிர்ணயிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். நியாயமற்ற போட்டிகள் உங்கள் பொறுமைக்குச் சோதனையாக இருக்கும். இடைத் தரகர்களின் தலையீடு உங்கள் விற்பனையையும், லாபத்தையும் கடுமையாக பாதிக்கும். கூடியவரையில், முன்பணமில்லாமல், சரக்குகளை வினியோகிக்க வேண்டாம். ஏனெனில், விற்ற சரக்குகளுக்குப் பணத்தை வசூலிப்பதில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் சற்று குறையக்கூடும். ஆதலால், பண விஷயங்களில் சற்று கண்டிப்பாக இருத்தல் நல்லது.

கலைத் துறையினர்:இம்மாதம் முழுவதும், கலைத் துறைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து கிரகங்களும் ஓரளவே அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். ஆதலால், வாய்ப்புகள் குறையக்கூடும், அதன் விளைவாக, வருமானமும் குறையும். கையிலிருப்பதைக் கொண்டு, குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது நல்லது. எதிர்பார்த்திருந்த சில வாய்ப்புகள், கடைசி நிமிடத்தில் கைநழுவிப் போவது, ஏமாற்றத்தை அளிக்கும். சங்கீத சபா நிர்வாகத்துடன் சுமுகமாகப் பழகுவது, இத்தகைய சந்தர்ப்பங்களில் கைகொடுக்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையை நிர்ணயிக்கும் கிரகங்கள், உங்களுக்கு ஓரளவு தான் ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு அளவோடுதான் கிட்டும் எனவும் கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. கூடியவரையில், மேலிடத் தலைவர்களை அடிக்கடி சந்திக்காமலிருப்பது, நல்லது. இம்மாதம் முழுவதும் மௌனம் காத்தல் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது.

மாணவ - மாணவியர்: கல்வித்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள புதன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், ஓரளவுதான் அனுகூலமான பாதைகளில் சஞ்சரிக்கின்றனர். சற்று பாடுபட்டு, படித்தால்தான், உங்கள் கல்வி முன்னேற்றத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும், இம்மாதத்தில்! உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. ஆசிரியர்களுடன் நிலவும் அனுகூலமான தொடர்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விவசாயத் துறையினர்: விளைச்சலும் , வருமானமும் மனத்திற்கு நிறைவை ஏற்படுத்தும், தண்ணீர்ப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை. பழைய கடன்கள் நீடிக்கின்றன. கால்நடைகளின் பராமரிப்பில், செலவுகள் அதிகரிக்கும். விவசாயத்திற்கு அத்தியாவசியமான உரம் விதைகள் ஆகியவையும் சலுகை விலைகளில் கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெற அனுகூலமான மாதம் இது. தசா, புக்திகள் சுப பலம் பெற்று இருப்பின், அளவோடு புதிய விளைநிலம் மற்றும் கால்நடைகள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறனில்தான் உள்ளது! பழத் தோட்டங்களைக் குத்தகைக்கு எடுப்பது நல்ல லாபத்தைத் தரும்.

பெண்மணிகள்: சம்பந்தப்பட்ட கிரகங்கள், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், பெண்மணிகளுக்கு மன நிறைவையளிக்கக்கூடிய மாதம் ஆகும் இந்தக் கார்த்திகை! வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, மனத்திற்கு நிறைவைத் தரும் நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தற்காலிகப் பணிகளில் உள்ள மங்கையருக்கு, பணி நிரந்தரமாகும். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும் இந்த மாதத்தில்! கை-கால்களில் வலி, ஒற்றைத் தலை வலி, மயக்கம் ஆகியவற்றினால் வருந்தும் பெண்மணிகளுக்கு, வியக்கத்தக்க நிவாரணம் கிடைக்கும்.

அறிவுரை: கூடியவரையில், அதிக அலைச்சலையும், கற்பனையான கவலை களையும், சிறு விஷயங்களுக்குக்கூட உணர்ச்சிவசப்படுதலையும் , முன்கோபத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் தீபம் ஏற்றிவந்தால் அற்புதப் பலன்கள் கிட்டும். காலையில் ,சிறிது எள், நெய், பருப்பு சேர்த்த ஐந்து சாத உருண்டைகள் காகத்திற்கு வைத்து வந்தால் அற்புத பலன்கள் கிட்டும்.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:

த்ருஜ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:

இதன் பொருள்: இப்பூவுலகில் வாழும் அனைத்து வகை புழு-பூச்சிகள் பறவை, கொசு,மரம், நீர், நிலத்தில வாழும் உயிர்கள் எதுவானாலும், எவ்வகை மனிதராகிலும் இந்தத் தீபத்தைப் பார்க்கும் அனைவரும் பாபங்களிலிருந்து விலகட்டும், பிறவிப் பிணியிலிருந்து விடுபடட்டும். இன்பமாக வாழட்டும். தீபமேற்றும் புண்ணிய பலன்கள் அனைத்து ஜீவராசிகளையும் சென்றடையட்டும் என்பதே இந்த ஸ்லோகத்தின் உயர்ந்த அர்த்தம்.

அனுகூல தினங்கள்:

கார்த்திகை : 2-4, 8-10, 14-17, 21-25.

சந்திராஷ்டம தினங்கள்:

கார்த்திகை : 1-ந் தேதி மாலை வரை. மீண்டும் 26-ந் தேதி பிற்பகல் முதல், 28-ந் தேதி இரவு வரை.

பிறந்தநாள் பலன்கள்