(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
18-10-2025 முதல் 16-11-2025 வரை
குடும்பம்: ராசிக்கு தன பாக்கியாதிபதியான குரு பகவான், ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய கடக ராசியில் சஞ்சரிப்பது, வருமானம் போதுமான அளவிற்கு இருந்தும்கூட, பல வழிகளிலும் பணம் விரயமாகும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. கைப்பணம் எப்படிப் போயிற்று? என்று வியக்குமளவிற்கு செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும், பெரும்பான்மையான செலவுகள் சுபச் செலவுகளாகவே இருப்பது மனத்திற்கு சற்று ஆறுதலைத் தரும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இராது. ஆயினும், சேமித்து வைத்தது கரையும். கூடியவரையில் திட்டமிட்டு செலவு செய்வது, எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். "6-ல் குரு, ஜீவ நதியும் வற்றும்...!" என்றொரு பழமொழியே உள்ளது. ஆதலால், மாத ஆரம்பத்திலிருந்தே அவசியமில்லாத செலவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கணவர்-மனைவியரிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகளும், வாக்குவாதமும் அந்நியோன்யக் குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. குடும்பத்தில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பதும், தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் குடும்ப நலனிற்கு உகந்ததாகும். திருமண முயற்சிகளில் அவசர முடிவுகளைத் தவிர்த்தல் வேண்டும். தீர விசாரித்த பின்பே வரனை நிச்சயிக்க வேண்டும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சனி பகவான், வக்கிர கதியில் ராகுவுடன் இணைந்து, ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், அன்றாடப் பொறுப்புகளிலும், பணிகளிலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். தவறுகள் ஏற்படுவதற்கு, சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருவார்கள், ஜென்ம ராசியில் நிலைகொண்டுள்ள வக்கிர சனியும், ராகுவும்! மேலும், நிர்வாகத்தைப் பற்றியும், மேலதிகாரிகளைப் பற்றியும் சக-ஊழியர்களுடன் விவாதிக்க வேண்டாம். "தானுண்டு, தன் பணியுண்டு...!" என்றிருப்பது, தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். பல தருணங்களில், நமக்கு நாமே எதிரியாகப் போய்விடக்கூடும் என்பதை ஜோதிடக் கலை எடுத்துக்காட்டுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சித்துவரும், அன்பர்கள் இடைத்தரகர்களை நம்பி, ஏமாந்துவிடாமலிருக்கவும்.
தொழில், வியாபாரம்: வியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை வக்கிர சனியும், ராகுவும் எடுத்துக்காட்டுகின்றன. சந்தை நிலவரம், அடிக்கடி மாறுவதால், உங்கள் சரக்குகளின் விலைகளை நிர்ணயிப்பதில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். கூடியவரையில் புதிய முதலீடுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
கலைத் துறையினர்: கலைத் துறை அன்பர்களுக்கு, இம்மாதம் வாய்ப்புகள் அளவோடுதான் கிடைக்கும் என கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. ஆதலால், வருமானமும், சற்று குறைவாகத்தான் இருக்கும். மாத ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்தால், மாதக் கடைசியில் கஷ்டப்படாமலிருக்கலாம். கிரக நிலைகளின்படி, உறவினர்கள், நண்பர்கள் எவரும் உதவிக்கு வரமாட்டார்கள். "தன் கையே தனக்கு உதவி...!" என்பதுபோல், உங்கள் முயற்சியில் சம்பாதிப்பதைக் கொண்டு, சமாளிக்க வேண்டிய மாதம், இந்த ஐப்பசி!! இத்தகைய தருணங்களில்தான், இருட்டில் ஓர் கைவிளக்காக நமக்கு வழிகாட்டி உதவுகிறது ஜோதிடம் எனும் தெய்வீக வானியல் கலை!
அரசியல் துறையினர்: ஐப்பசி 17-ம் தேதியிலிருந்து, கிரக நிலைகள் அரசியல் துறையினருக்கு, அனுகூலமாக மாறுவதால், அந்தத் தேதியிலிருந்து, பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் மனத்தை வருத்திவந்த பல பிரச்னைகள் நல்லபடியே தீர ஆரம்பிக்கும். மாநில அரசின் ஆதரவும், உதவியும் கிட்டும். கட்சியில் ஆதரவு பெருகும். மக்களிடையே செல்வாக்கும் உயர ஆரம்பிக்கும்.
மாணவ - மாணவியர்: அக்டோபர் 26-ம் தேதி வரை கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக உள்ளன. அதன் பிறகு, வித்யா காரகரான (கல்விக்கு அதிபதி) புதன் வக்கிர கதி அடைவதால், கல்வி முன்னேற்றத்தில், தடங்கல்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற பல பிரச்னைகள் மனத்தில் கவலையை ஏற்படுத்தும்.தினமும் மாலையில் சுமார் அரை மணி நேரம் இறைத் தியானத்தில் ஈடுபட்டிருந்தால், மனதில் நல்ல தெளிவும், பாடங்களை கிரகிப்புத் திறனும் நினைவாற்றலும் அதிகரிக்கும் என திருப்புராய்த் துறை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராகத் திகழ்ந்த ஸ்வாமிஜி சித்பவானந்த மகராஜ் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
விவசாயத் துறையினர்: துலாம் ராசியில், சூரியனும் செவ்வாயும் இணைந்திருப்பதால், உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் கிட்டும். ஆயினும், துலாம் ராசி, சூரிய பகவானுக்கு நீச்ச வீடாக அமைந்திருப்பதால், வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். பழைய கடன்கள் தொல்லை தரும். இருப்பினும், விவசாய வசதிகள் தடையின்றி கிடைக்கும்.
பெண்மணிகள்: ஜென்ம ராசியில் வக்கிர சனி, ராகுவுடன் இணைந்திருப்பதும், குரு பகவான் ருண ரோக, சத்ரு ஸ்தானத்தில் வலம் வருவதும், இம்மாதம் பெண்மணிகள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியமென்பதை வற்புறுத்துகிறது. திருமணமாகியுள்ள பெண்களுக்கு, குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். மாதவிடாய் சம்பந்தமான உபாதைகள், தலைச்சுற்றல், தலைவலி, மூட்டுவலி, உடல் அசதி ஆகியவை உடலை வருத்தும். கூடியவரையில், அதிக உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அறிவுரை: கடின உழைப்பையும், அலைச்சலையும் குறைத்துக் கொள்வது உடல் நலனிற்கு உகந்தது.
பரிகாரம்: வியாழக்கிழைமைகள் தோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ மாலையில் வழக்கமாக ஏற்றிவரும் தீபத்துடன், மேலும் ஒரு பரிகாரம் தீபமாக நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருவது கைமேல் பலனளிக்கும்.
அனுகூல தினங்கள்
ஐப்பசி 5-8, 13-15, 20-22, 26-28.
சந்திராஷ்டம தினங்கள்
ஐப்பசி : 30 காலை முதல்,4 இரவு வரை.