(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
18-10-2025 முதல் 16-11-2025 வரை
குடும்பம்: லாப ஸ்தானத்தில், வக்கிர கதியில் சஞ்சரிக்கும் சனிபகவானுடன், ராகு இணைந்திருப்பதால், வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆயினும், அர்த்தாஷ்டக ராசியில் குரு சஞ்சரிப்பதால், வரவிற்கேற்ற செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். களத்திர ஸ்தானத்தில் சூரியன் - செவ்வாய் சேர்ந்திருப்பதால், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். சரும சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் பிரச்னைகள் ஏற்படும். வரன் அமைவதில் தடங்கல்கள் ஏற்படலாம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. கணவர் - மனைவியரிடையே கருத்துவேற்றுமையும் ஏற்படக்கூடும். ஒருவருக்கொருவர் சற்று அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும் நடந்துகொள்வது, குடும்ப நலனிற்கு உகந்ததாகும். வெளியூர்ப் பயணங்களின்போது, பணம் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், களவுபோக சாத்திக்கூறு உள்ளது.
உத்தியோகம்: உத்தியோகத்துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள சனி பகவான், லாப ஸ்தானத்தில் ராகுவுடன் சேர்ந்திருப்பதால், பொறுப்புகளும், பணிச் சுமையும் அதிகமாக இருக்கும். ஆயினும், நிர்வாகத்தினர், மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிட்டும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், அத்தகையோருக்கு, சிறு பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.
தொழில், வியாபாரம்: கொடுப்பதில் சனி பகவானுக்கும், ராகுவிற்கும் சமமான கிரகம் வேறு கிடையாது...." எனக் கூறுகிறது, "ஜோதிட அலங்காரம்" எனும் ஒப்புயரவற்ற, புராதன ஜோதிட கிரந்தம். அந்த உண்மையை இம்மாதம் நீங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். சந்தை நிலவரம் லாபகரமாக அமைந்துள்ளது. உங்கள் சரக்குகளுக்கு, நல்ல விலையும், லாபமும் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்பார்கள். தசா . புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின்,வியாபாரத்தை அபிவிருத்தி ெசய்யலாம். புதிய முயற்சிகளில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாதம் இது. வெளியூர்ப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். புதிய விற்பனைக்கிளைகள் திறப்பதற்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், சனி பகவானும், ராகுவும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு எளிதில் கிடைக்கும்.
கலைத் துறையினர்: கலைத் துறையை, தனது அதிகாரத்தின்கீழ் கொண்டுள்ள சுக்கிரன், இம்மாதம் முழுவதும் சுபபலத்துடன் வலம் வருவதால், கலைத் துறை அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும், வருமானம் மற்றும் மக்களிடையே செல்வாக்கு உயரும். உங்கள் பொருளாதார நிலையை சரிசெய்துகொள்ள ஏற்ற மாதம் இது! தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாட்டுப் பயணம் ஒன்றும் காத்துள்ளது, உங்களுக்காக!
அரசியல் துறையினர்: கட்சியில் ஆதரவு அதிகரிக்கும். அரசின் ஆதரவும், செல்வாக்கும் கொண்டுள்ள தலைவர் ஒருவரின் ஆதரவு, புதிய வாய்ப்புகளை உங்களுக்கு அளிக்கும். பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறமையில் உள்ளது. ஒருசிலருக்கு, கட்சிமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. மனக் குழப்பத்திற்கு இடங்கொடுக்காமல், உறுதியுடன் தீர்மானிக்கவும். உங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாதம் இது!!
மாணவ - மாணவியர்: வித்யாகாரகரான புதனும், கல்வித் துறையுடன் தொடர்புள்ள மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருவதால், மாணவ - மாணவியர் அனைவருக்கும் முன்னேற்றமான மாதமிது. கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும், தேர்வில் சரியான பதில்கள் அளித்து, மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கிரக நிலைகள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன.இந்த அரிய சந்தர்ப்பத்தை மாணவ - மாணவி மணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில விருப்பமிருப்பின், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
விவசாயத் துறையினர்: விளைச்சலுக்கு நேரடியான அனைத்து கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றன. போதுமான அளவிற்கு தண்ணீர் வசதி கிடைக்கும். இயற்கை சூழ்நிலை உதவிகரமாக நிலவும் என்பதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. விதைகள், உரங்கள் மற்றும் அத்தியாவசியமான வசதிகள் அனைத்தும் எளிதிலும், நியாயமான விலையிலும் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பது உறுதி. புதிய கால்நடைகள் வாங்குவதற்கும், வசதி ஏற்படும் இம்மாதம். கூடுதலாக விளைநிலம் வாங்குவதற்கும் யோகம் உள்ளது.
பெண்மணிகள்: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். அதிக அலைச்சல், உடல் உழைப்பு, குடும்பம் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் எதிர்காலம் பற்றிய கவலைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல் வேண்டும்.இம்மாதம் உங்கள் மனக்கவலைகளை, உங்களுக்கு எதிரியாகும். வாழ்க்கையில், கவலை அவசியம்தான்! ஆனால், கவலையே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாதல்லவா?
அறிவுரை: மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். கற்பனையான பயத்தையும், கவலைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை இனிக்கும்.
பரிகாரம்: தினமும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தரிசித்துவிட்டு வந்தால், உடனுக்குடன் பலன் கிட்டும். ஒவ்வொரு திருக்கோயிலிலும், சூட்சும யந்திிரங்கள் கருவறையில் மந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணம். அவற்றின் சக்தி அபரிமிதமானது என்பதை அனுபவத்தில் காணலாம்.
அனுகூல தினங்கள்
ஐப்பசி : 1-5, 10-12, 16-19, 24-26, 30.
சந்திராஷ்டம தினங்கள்
ஐப்பசி : 6 இரவு முதல், 9 காலை வரை.


