search-icon-img
featured-img

கடகம்

Published :

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

18-10-2025 முதல் 16-11-2025 வரை

குடும்பம்: ஜென்ம ராசியில் குரு பகவான் அமர்ந்துள்ள நிலையில், அர்த்தாஷ்டக ராசியான துலாம் ராசியில் சூரியன் - செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர, அஷ்டம ராசியில் வக்கிர சனியும், ராகுவும் சேர்ந்து சஞ்சரிக்கிறார்கள்! உடல் ஆரோக்கியத்தில் அதி-ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை இத்தகைய கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. வரவிற்குமீறிய செலவுகளையும் இம்மாதம் நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். திருமண முயற்சிகளில். வீண் அலைச்சல்கள் ஏற்படுமே தவிர, எவ்வித வரனும் அமையப் பெறாது.

உத்தியோகம்: அஷ்டம ராசியாகிய கும்பத்தில், வக்கிர சனி பகவானும், ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால், வேலைச் சுமையும், பொறுப்புகளும், மேலதிகாரிகளின் கண்டிப்பும் கவலையை அளிக்கும். இருப்பினும் உங்கள் எதிர்கால முன்னேற்றத்தை அவை எதுவும் பாதிக்காது. தசா - புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு பதவிஉயர்வையும், ஊதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம். தற்காலிகப் பணிகளிலுள்ள அன்பர்கள், அவரவர்களின் பதவிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள். புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்குத் திருப்தியை அளிக்கும் பணி கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: தற்போது பார்த்துவரும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு, இம்மாதம் மிகவும் ஏற்றது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நிதிநிறுவனங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சகக் கூட்டாளிகள் ஆதரவு தருவார்கள். அளவோடு புதிய விற்பனை நிறுவனங்களைத் திறக்கலாம். ஏற்றுமதித் துறை அன்பர்களுக்கு, வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் உருவாகும். சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புகளும், வருமானமும் அடிக்கடி மாறிக்கொண்டேயிருப்பவை! கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, நம் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவை.

கலைத் துறையினர்: கிரக நிலைகள் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால், வருமானம் திருப்திகரமாக இருக்கும். மக்களிடையே செல்வாக்கும், ஆதரவும் பெருகும். சங்கீத சபாக்களில், வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் பொருளாதாரத்தை சரிசெய்துகொள்ள ஏற்ற மாதமிது! தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று-வரும் வாய்ப்பும், அங்கு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாத்தியக்கூறும் உருவாகும். அவற்றின் மூலம், உங்கள் பொருளாதார நிலையும் உயரும்.

அரசியல் துறையினர்: இம்மாதம் முழுவதும், சுக்கிரன் சிறந்த சுப பலம் பெற்று வலம் வருவதால், கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருங்கிய பிரமுகர் ஒருவரின் நட்பு, உங்கள் அரசியல் வாழ்க்கையையே மாற்றியமைக்க உள்ளது, இம்மாதம். இந்த உண்மையை அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

மாணவ - மாணவியர்: புதனும், கல்வித் துறைக்குத் தொடர்புள்ள பிற கிரகங்களும் சுபத்துவப் பாதைகளில் சஞ்சரிப்பதால், படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆதரவும் வழிகாட்டுதல்களும், கூடுதல் உற்சாகத்தைத் தரும். ஒருசிலருக்கு அமெரிக்க நாட்டின் பிரசித்திப் பெற்ற கலாசாலை ஒன்றில் உயர் கல்விக்கு இடமும், உதவித் தொகையும் கிடைக்கும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறை, பெரும்பாலும் செவ்வாய் மற்றும் சூரியனின் ஆதிக்கத்தில் உள்ளது! இவற்றில், செவ்வாய் மட்டும் ஓரளவு உங்களுக்குச் சாதகமாக உள்ளது. வயல் பணிகள் கடினமாக இருப்பினும், விளைச்சலும், வருமானமும் மன நிறைவைத் தரும். கால்நடைகள் அபிவிருத்தியை அடையும். சந்தையில் உங்கள் விளைபொருட்களுக்கு, லாபகரமான விலை கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற கிரக நிலைகள் உதவிகரமாக அமைந்துள்ளன, இம்மாதத்தில்!

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும், விருத்தி செய்வதிலும் பெரும் பங்கு கொண்டவை குருவும், சுக்கிரனும். இவர்களில், சுக்கிரன் ஒருவர் மட்டும் உங்களுக்கு உதவிகரமாக சஞ்சரிப்பதால், அவரால் ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம். முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெற சுக்கிரன் கைகொடுப்பார். கூடியவரையில், குடும்பப் பிரச்ைனகளின் கடுமையையும் குறைத்துவிடுகிறார், சுக்கிரன்.

அறிவுரை: "முயற்சி திருவினையாக்கும்...!" -என்பது ஆன்றோர் வாக்காகும். ஆதலால், விடாமுயற்சி மிகவும் அவசியம், ஒரே முயற்சியில் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் தவறாகும். "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்....!" என்பதே பெரியோர் கூறியுள்ள அறிவுரையாகும்.

பரிகாரம்: சனிக்கிழமைகள்தோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தரிசித்துவிட்டு வந்தால் கைமேல் பலன் கிட்டும். வேண்டுவது, பக்தியுடன் கூடிய நம்பிக்கை ஒன்றே....!!தினமும் சாப்பிட அமர்வதற்கு முன், காகத்திற்கு மூன்று சாதவுருண்டை-(எள்-நெய்-பருப்பு கலந்த) வைப்பது உங்கள் குடும்பத்திற்கு செய்வினை - தோஷங்கள் இருந்தாலும் விலகிடும்.3. பசு மாட்டிற்கு பசும் புல் கொடுப்பது மற்றும் அகத்திக் கீரை கொடுப்பதும் மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது, இதனை அனைத்துவித கோசாலைகளிலும் செய்யலாம்.

அனுகூல தினங்கள்

ஐப்பசி : 1-4, 9, 17-19, 23-26, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி : 13 அதிகாலை முதல், 16 காலை வரை.