(17-11-2025 முதல் 15-12-2025 வரை)
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் சம், ஆயில்யம் வரை)
குடும்பம்: ஜென்ம ராசியில், குரு பகவான் உச்ச கதியில் சஞ்சரிக்கும் இம்மாதத்தில், "அஷ்டம ஸ்தானம்" எனப்படும் கும்ப ராசியில், சனி - ராகு கூட்டுச் சேர்க்ைக ஏற்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். வெளியிடங்களில், தரக்குறைவான உணவகங்களில் உண்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். வெளியூர்ப் பயணங்களின்போது, விலையுயர்ந்த பொருட்கள், பணம், அலுவலக ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிக, மிக அவசியம். ஏனெனில், களவுபோக வாய்ப்புள்ளது. "ஜென்ம குரு வனத்திலே...!" என் கூறுவர், பெரியோர்! அதாவது, ராமபிரன், 14 ஆண்டுகள் வனவாழ்க்கையை ஏற்றபோது, அவரது ஜாதகப்படி, அவருக்கு ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரித்தார்!! அப்போது அவர் பட்ட துன்பங்களை மத் வால்மீகி ராமாயணம் விவரித்துள்ளது. ஆதலால், கோள்சாரத்தில், குரு பகவான் சஞ்சரிக்கும்போது, பரிகாரம் செய்துகொள்வது மிகவும் அவசியம். வருமானத்திற்கு மீறிய செலவுகளும், நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர வாக்குவாதங்களும், தேவையற்ற அலைச்சல்களினால், உடல் ஆரோக்கியக் குறைவும் ஏற்படக்கூடும். அத்தகைய தருணங்களில், பெரியோர்கள் அறிவுறுத்தியுள்ள பரிகாரங்களைச் செய்தால், சிரமங்கள் அனைத்தும், பெருமளவில் குறையும். சிறு சிறு உடற்கோளாறுகளால் உங்கள் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும் சிறு உடல் உபாதையானாலும், உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி, மருந்து மாத்திரைகளைக் குறிப்பிட்ட காலத்தில் நேரத்தில் சாப்பிட வேண்டும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறையைத் தனது பிடியில் வைத்துக் கொண்டுள்ள சனி பகவான், வக்கிர கதியில் ராகுவுடன் இணைந்து, கும்ப ராசியில் சஞ்சரிப்பது, அலுவலகத்தில் நீங்கள், அன்றாடக் கடமைகளிலும், பொறுப்புகளிலும் அதிஜாக்கிரதையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது, மேலதிகாரிகளின் நியாயமற்ற போக்கு, வெறுப்பை ஏற்படுத்தும். பல தருணங்களில், "வேறு வேலைக்குச் சென்றுவிடலாம்" என்ற எண்ணம் தலைதூக்கும். உணர்ச்சிவசப்படும்போதுதான், நாம் தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறோம். அதன் விளைவுகள், நம் எதிர்காலத்தைப் பல தருணங்களில் கடினமாக பாதித்துவிடுகின்றன. ஆதலால், உணர்ச்சிவசப்படுவதையும், அவசர முடிவுகளையும் நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லாவிடில், எதிர்காலத்தில் வருத்தப்படவேண்டியிருக்கும்!
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரத்தை முன்கூட்டியே கேட்டறிந்து கொண்டு, உங்கள் சரக்குகளைச் சந்தைக்கு அனுப்புவதைத் திட்டமிட்டு தீர்மானிப்பது மிகவும் அவசியம். சகக்-கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், குறைவது உங்கள் பிரச்னைகளை மேலும் அதிகரிக்கும். மேலும், வங்கி போன்ற நிதிநிறுவனங்களும் அவ்வப்போது பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். முன்பணம் இல்லாமல், சரக்குகள் அனுப்புவதைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.
கலைத்துறையினர்: சற்று பொறுமையாக இருக்கவேண்டிய மாதம் இது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. "நிச்சயமாக நமக்குதான் கிடைக்கும்...!" என்றிருந்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பணப் பிரச்னையும், சற்று கடினமாகவே இருக்கும். அடிக்கடி பணப் பிரச்னை கவலையை அளிக்கும்.
அரசியல் துறையினர்: கார்த்திகை 10-ம் தேதிவரை கிரகநிலைகள் அனுகூலமாக இல்லை. அதன் பிறகு, உதவிகரமாக மாறுகின்றன. மாதத்தின் முதல் வாரம், நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். அடுத்து வரும் மூன்று வாரங்கள் அனுகூலமாக உள்ளன. உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு குறையும். இதுவே மன நிம்மதியைப் பாதிக்கும். பிற அரசியல் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பதைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில், உங்கள் தலைவர்களில் சிலர் உங்களைச் சந்தேகிக்கிறார்கள். இதனை சனி - ராகு கூட்டுச் சேர்க்கை எடுத்துக்காட்டுகிறது.
மாணவ - மாணவியர்: கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடங்கலுமின்றி நீடிக்கிறது. படித்தவை நினைவில் நிற்கும். தேர்வுகளில் மிகச் சரியான விடையளிக்க புதனின் நிலை உதவிகரமாக உள்ளது. ஆசிரியர்களின் ஆதரவையும், வழிகாட்டுதல்களையும் பெற்றுத் தருகிறார் உயர் கல்விக்கு மனம் விழையும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.கல்வி முன்னேற்றம் ஒரே சீராக இருக்கும். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். ஆசிரியர்களின் ஆதரவு கல்வியில் உற்சாகத்தையளிக்கும். உயர் கல்விக்கு உங்கள் விருப்பப்படி இடம் கிடைக்கும். வெளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பெற ஆர்வமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும். தேவையான நிதியுதவியும், சிபாரிசும் கிடைக்கும்.
விவசாயத் துறையினர்: சூரியன், செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும், விவசாயத் துறையுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளவைகளாகும். அவ்விரண்டு கிரகங்களும் ஓரளவு அனுகூலமாகவும், சுப பலம் பெற்றும் திகழ்வதால், விவசாயிகளுக்கு லாபகரமான மாதமாகும். சூரியனின் நிலை சாதகமாக இருப்பதால், அரசாங்க ஆதரவும், சலுகைகளும் தக்க தருணத்தில் கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. வங்கிகள் ஒத்துழைப்பார்கள்.
பெண்மணிகள்: இம்மாதம் முழுவதும், சுக்கிரன் ஓரளவு ஆதரவாகவே சஞ்சரிப்பதால், பெண்மணிகளுக்கு, நன்மைகளும், கடைசி வாரத்தில், கசப்பான குடும்பப் பிரச்னைகளும்ஏற்படும். சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்துவரும் பெண்மணிகளுக்கு, உழைப்பிற்கேற்ற நல்ல லாபம் கிடைக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு, அலுவலகச் சூழ்நிலை திருப்தியை அளிக்கும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, நல்ல வேலை கிடைக்கும். தற்காலிகப் பணிகளில் உள்ள கன்னியருக்கு வேலை நிரந்தரமாகும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும் என்பதை சுக்கிரனின் சஞ்சார நிலை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
அறிவுரை: கைப் பணத்தைச் சிக்கனமாக செலவு செய்யுங்கள். பிறருக்குக் கடன் கொடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். கொடுத்தால், திரும்பி வராது.
பரிகாரம்: ஒருமுறை திருநள்ளாறு மற்றும் திருக்கொள்ளிக்காடு ஆகிய திருத்தலங்களை, குடும்பத்தினருடன் சென்று, தரிசித்துவிட்டு வரவும். கோயில்களுக்குச் செல்லும்போது, எள் எண்ெணய் எடுத்துச் சென்று, அங்குள்ள தீபத்தில் சேர்க்கத் தவறாதீர்கள்! திருக்கோயில்களுக்குச் செல்ல இயலாதவர்கள், இப்பரிகாரத்தை உங்கள் வீட்டுப் பூஜையறையிலே செய்தாலும், அதே பலன்களைப் பெறுவீர்கள்.
அனுகூல தினங்கள்:
கார்த்திகை : 4-6, 9-11, 14-17, 21-24, 28.
சந்திராஷ்டம தினங்கள்:
கார்த்திகை : 11-ந் தேதி முற்பகல் முதல், 13-ந் தேதி மாலை வரை.


