இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

மகரம்

Published: 16 Sep 2025

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

18-10-2025 முதல் 16-11-2025 வரை

குடும்பம்: தன ஸ்தானத்தில், வக்கிர கதியில் சனி பகவானும், ராகுவும் சேர்ந்திருப்பதால், கைப் பணம் எங்கு போயிற்று? எப்படிப் போயிற்று? என்று வியக்கும் அளவிற்கு செலவுகள் சக்திக்கு மீறியதாக இருக்கும். விவாக முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில், சுபச் செலவுகள் உண்டாகும். கணவர் - மனைவியரிடையே, பரஸ்பர அந்நியோன்யம் அதிகரிக்கும். இம்மாதத்தின் கடைசி வாரத்தில், மருத்துவச் செலவுகளிலும் பணம் விரயமாகும், விவாக முயற்சிகளில் நல்ல வரன் அமைவது, உள்ளத்தில் உற்சாகத்தை அளிக்கும். பொறுமை, நிதானம் அவசியம். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. கணவர் - மனைவியரிடையே ஒற்றுமைக் குறைவும், தேவையற்ற வாக்குவாதங்களும் ஏற்படக்கூடும். குழந்தைகளினால், சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு, சுகப் பிரசவம் கிட்டும். ஸப்தம ஸ்தானத்தில் (7-ம் இடம்) குரு பகவான் உச்சத்திலிருப்பதால், இப்போது பிறக்கும் குழந்தைகளில், பெரும்பான்மையான குழந்தைகள் ஆண் சிசுவாகவே இருக்கும் எனக் கூறுகிறது, "ஜோதிட பாரிஜதம்" மற்றும் "பூர்வ பாராசர்யம்" எனும் மிகப் புராதன ஜோதிடக் கிரந்தங்கள்.

உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சனி பகவான், வக்கிர கதியில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால், நல்ல யோக பலன்களை இப்போது எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு, சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவை அன்றாடக் கடமைகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலைக்குப் பாடுபட்டுவரும் அன்பர்களுக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்கு நிறைவைத் தரும் சம்பளத்தில் வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று பணியாற்ற ஆர்வமிருப்பின், அந்த ஆசை நிறைவேறும். ஏற்கனவே வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அன்பர்களுக்கு, நிறுவன மாற்றமும் அதன் காரணமாக கூடுதல் வருமானமும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், இம்மாதம் முயற்சிக்கலாம். வெற்றி காத்துள்ளது.

தொழில், வியாபாரம்: சிறந்த முன்னேற்றத்தையும், லாபத்தையும் சற்று தாராளமாகவே உங்களுக்குப் பெற்றுத் தரும் அளவிற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற மாதம் இது. புதிய கிளை நிறுவனங்கள் திறப்பதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் எளிதில் கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளில் புதிய தொடர்புகள் லாபகரமாக அமையும்.

கலைத் துறையினர்: மக்களிடையே புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். சினிப் படத் தயாரிப்பாளர்களுக்கு, புதிய படங்கள் லாபத்தைப் பெற்றுத் தரும். புதிய திரைப்பட அரங்குகள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இது. பண உதவி எளிதில் கிட்டும். நாடகங்களுக்குக்கூட மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும். சில நடிகர் மற்றும் நடிகைகளுக்குத் திருமண யோகமும் அமைந்துள்ளது.

அரசியல் துறையினர்: சுக்கிரனும் மற்றும் அரசியல் துறையுடன் தொடர்புள்ள மற்ற கிரகங்களும் சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் உயரும். உயர்மட்டத் தலைவர்களுக்கு உங்கள் மீது பூரண நம்பிக்கை இருக்கும். உங்கள் அரசியல் வாழ்க்கையில் இம்மாதம் ஓர் முக்கிய திருப்பமாக அமையவுள்ள கிரக நிலைகள் தெளிவாகவும், உறுதியாகவும் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. சிலருக்கு, கட்சியில் முக்கிய பதவியொன்றும் கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. இது ஓர் அரிய சந்தர்ப்பம். தயங்காமல், பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்பினைக் கைப்பற்றுவதே அரசியல் திறமையாகும்!

மாணவ - மாணவியர்: வித்யா காரகர் என ஜோதிடக் கலை புகழும் புதன், இம்மாதம்

முழுவதும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிப்பதால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள். பலருக்கு, வெளிநாடுகளில் உள்ள பிரபல கலாசாலைகளில், உயர்கல்விக்கு இடம் கிடைக்கும்.

விவசாயத் துறையினர்: செவ்வாய் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், சுபபலம் பெற்று வலம்வருவதால், தேவையான அளவிற்கு தண்ணீர் வசதியும், இதர வசதிகளும் கிடைக்கும். அரசாங்கச் சலுகைகள் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. பயிர்கள் செழித்து வளரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம் இம்மாதத்தில்!

பெண்மணிகள்: திருமணமான பெண்களுக்கு, குடும்ப வாழ்க்கை இனிக்கும்! கணவரின் அன்பும், அக்கம்பக்கத்தினரின் ஆதரவும் மனத்திற்கு நிறைவைத் தரும். திருமணமான பெண்மணிகள் கருத்தரிப்பதற்கு சுபபலம் பெற்றுள்ளன, சம்பந்தப்பட்ட கிரகங்கள். கல்யாண மாலைக்குக் காத்திருக்கும் கன்னியருக்கு நல்ல வரன் அமையும்.

அறிவுரை: எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான கவலைகளையும், பயத்தையும் தவிர்த்தல் அவசியம்.

பரிகாரம்: திங்கள்கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றின் தரிசனம் தன்னிகரற்ற பரிகார பலனை அள்ளித்தரும்.

அனுகூல தினங்கள்

ஐப்பசி : 3-6, 10-12, 16-19. 23-25, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி :01 பின்னிரவு வரை. மீண்டும், 26 பின்னிரவு முதல், 29 காலை வரை.

பிறந்தநாள் பலன்கள்