search-icon-img
featured-img

சிம்மம்

Published :

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

18-10-2025 முதல் 16-11-2025 வரை

குடும்பம்: தன ஸ்தானத்தில், சுக்கிரனும், திருதீய ஸ்தானத்தில் (3-ம் இடம்) சூரியன் - செவ்வாய் சேர்க்கையும் ஏற்பட்டுள்ளதால், வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். ஆதலால், மாதம் இறுதிவரை பணப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை! சப்தம ஸ்தானத்தில், வக்கிர சனியும், ராகுவும் இணைந்திருப்பதால், கணவர் - மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் பாதிக்கப்படக்கூடும். கருத்துவேற்றுமை காரணமாக, அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால், அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். அதன் காரணமாக, மருத்துவச் செலவுகளில் பணம் விரயமாகும். ஜென்ம ராசியில், கேது சஞ்சரிப்பதால், தீர்த்த, தல யாத்திரை சென்றுவருவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வெளிநாட்டில் பணியாற்றிவரும் நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகைக்கும் சாத்தியக்கூறு உள்ளது. லக்னாதிபதி சூரியன், துலாம் ராசியில் செவ்வாயுடன் கூடி சஞ்சரிப்பதால், சிறு சிறு உஷ்ண சம்பந்தமான சரும உபாதைகள் ஏற்படக்கூடும். வரவைவிட, செலவுகளே அதிகமாக இருப்பதால், சேமிப்பிற்கு இம்மாதம் சாத்தியக்கூறு இல்லை! வெளியூர்ப் பயணங்களின்போது, பணம் மற்றும் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வரன் அமைவது சற்று கடினமே! களத்திர ஸ்தானத்திற்கு வக்கிர சனியினாலும், ராகுவினாலும் பாதிப்பு உள்ளதால், கணவர் - மனைவியரிடையே ஒற்றுமை குறையும். அலுலகப் பொறுப்புகள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கணவர் மனைவியரிடையே தற்காலிகமாக பிரிவு ஏற்படக்கூடும். வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்கூறுகின்றன.

உத்தியோகம்: அலுவலகத்தில் பணிச் சுமையும் பொறுப்புகளும் அதிகரிக்கும். சூரியன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவு பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், சலுகைகள் அதிகரிப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. புதிதாக வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். ஆரம்பச் சம்பளமே உற்சாகத்தை அதிகப்படுத்தும். ஒருசிலருக்கு பணி நிமித்தம் காரணமாக, வெளியூர் அல்லது வெளி மாநிலத்திற்கு மாற்றம் ஏற்படக்கூடும். தயங்காமல் ஒப்புக் கொள்வது, எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.

தொழில், வியாபாரம்: சந்தையில் போட்டிகள் அதிகமாக இருப்பினும், அவற்றைச் சமாளித்து, லாபத்தைப் பெற்றுத் தரும் திறனை ராசியாதிபதியான சூரியன் தந்தருள்கிறார். நிதி நிறுவனங்களின் உதவியும், ஆதரவும் கிட்டும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். புதிதாக விற்பனைக் கிளைகள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இது. வெளியூர்ப் பயணங்கள் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு ஆதரவாக கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.

கலைத் துறையினர்: இம்மாதம் முழுவதும் கலைத் துறையை தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் சுபத்துவப் பாதைகளில் வலம் வருவதால், லாபகரமான வாய்ப்புகள் வருமானத்தை உயர்த்தும். சங்கீத சபாக்கள் உங்கள் நிகழ்ச்சிகளை வரவேற்பார்கள். திரைப்படத் துறையினருக்கு, சுக்கிரன் லாபகரமாக சஞ்சரிப்பதால், புதிய தயாரிப்புகளை வெளியிடலாம். நல்ல லாபம் கிட்டும்.

அரசியல் துறையினர்: சென்ற சில மாதங்களாக, மந்த நிலையில் இருந்துவந்த கட்சிப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, சாதகமாக அமைந்துள்ளன, சம்பந்தப்பட்ட கிரகங்களின் சஞ்சார நிலைகள்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தனது ஆதிக்கத்தில் கொண்டுள்ள புதன்,

27-ம் தேதி வக்கிர கதியில் செல்வதால், அந்தத் தேதியிலிருந்து படிப்பில் கவனம் குறையக்கூடும். புத்தகத்தைக் கையில் எடுத்தாலே, உறக்கம் மேலிடும். ஒரு சிலருக்கு, தகாத நண்பர்களுடன் நட்பு ஏற்படக்கூடும் என்பதையும், அதுவே உங்கள் கல்வி முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடும் என்பதையும், கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ஆதலால், பிறருடன் பழகுவதில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

விவசாயத் துறையினர்: கடின உழைப்பும், விளைச்சல் பற்றிய கவலையும் மனத்தை அரிக்கும். கால்நடைகளின் பராமரிப்பில், பணம் விரயமாகும். பழைய கடன்களும், தொல்லை தரும். கூடியவரையில், இரவு நேரங்களில் விவசாயப் பணிகளைத் தவிர்ப்பது நன்மை செய்யும் என்பதையும், கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். விழிப்புடன் செயல்படுவது, அவசியம்.

பெண்மணிகள்: சப்தம ஸ்தானத்தில், சனி, ராகு இணைந்திருப்பதால், அன்றாடப் பணிகளில் அதி ஜாக்கிரதையாகச் செயல்படுவது அவசியம். விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது, எத்தகைய தருணங்களில், நாம் எந்தெந்த விஷயங்களில் எவ்விதம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே நமக்கு தெரியப்படுத்தி, ஆபத்துகளிலிருந்து நம்மை காத்திடும் ஒரே கலை ஜோதிடக்கலையாகும். மேலும், இரவு நேரங்களில் தனியே செல்வதைத் தவிர்ப்பதும் அவசியம்.

அறிவுரை: சப்தம (7) ஸ்தானத்தில் சனி - ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும், பரஸ்பர வாக்குவாதமும் ஏற்படக்கூடும். ஒருவருக்கொருவர் அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொள்வது நல்லது.

பரிகாரம்: தினமும் ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்து வந்தால் போதும். அற்புதப் பலன் கிட்டும்.

அனுகூல தினங்கள்

ஐப்பசி : 3-5, 9-12, 15, 19-21, 23-25, 29.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி : 16 காலை முதல், 18 முற்பகல் வரை.