(17-11-2025 முதல் 15-12-2025 வரை)
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம்: ராசிக்கு விரய ஸ்தானத்தில், குரு பகவான் உச்ச கதியில் சஞ்சரிப்பதால், வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். அர்த்தாஷ்டக ராசியில், சூரியன், ெசவ்வாய் இணைந்திருப்பதாலும், சப்தம ஸ்தானத்தில், சனி - ராகு அமர்ந்திருப்பதாலும், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். உஷ்ண சம்பந்தமான சரும உபாதைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில், பரஸ்பர ஒற்றுமைக் குறைவு ஏற்படுவது கவலையை அளிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தடங்கல்களும், தாமதங்களும், பண விரயமும் ஏற்படும். ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை.வெளிநாடு ஒன்றில் பணியாற்றிவரும் சிம்ம ராசி அன்பர்கள், குடும்பப் பிரச்னை சம்பந்தமாக தாய் நாடு வந்து போகும் சாத்தியக்கூறும் உள்ளது. திருமண முயற்சிகளில் ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தாமதங்களினால் மன-உளைச்சலுக்குள்ளாவீர்கள்.
உத்தியோகம்: ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் (7-ம் இடம்) சனியும், ராகுவும் இணைந்திருப்பது, நன்மை தராது! பணிச் சுமை, ஓய்வில்லாத உழைப்பு, உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காதது ஆகியவற்றினால் பார்த்துவரும் பணியில் அதிருப்தியும், வெறுப்பும் உண்டாகும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும் குறையும். வேறு வேலைக்குச் சென்றுவிடலாமா? என்ற அலுப்பு மேலிடும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது! தற்காலிகப் பணியாளர்களுக்கு,வேலை நிரந்தரம் ஆவது, தள்ளிப்போகும். குறிப்பாக, அர்த்தாஷ்டக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதால், உத்தியோகஸ்தர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் கவனமாக இருத்தல் மிக, மிக அவசியம். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சக-ஊ ழியர்களுடன் நிர்வாகம் மற்றும் உயரதிகாரிகளைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம். அன்றாடப் பணிகளிலும், பொறுப்புகளிலும் கவனமாக இருத்தலும் அவசியமாகும். சிறு தவறும், நிர்வாகத்தினரிடம் பெருங்குற்றமாகக் கொண்டு செல்லப்படும். எச்சரிக்கையாக இருத்தல் அவசியம் என்பதை கிரகங்களின் சஞ்சார நிலைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: பாடுபட்டு உழைத்தும், வியாபார அபிவிருத்தி மிகவும் குறைவாகவே இருக்கும். லாபம் குறையும். சந்தையில் உங்கள் பொருட்களுக்கு, நல்ல வரவேற்பு கிடைக்காது. அதனால், விற்பனையும் லாபமும் மிகவும் குறைவாகவே இருக்கும். சகக் கூட்டாளிகள் ஏதோ ஒரு காரணம் சொல்லி, விலகிவிடுவார்கள். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் குறையும்.
கலைத்துறையினர்: கலைத்துறையுடன் தொடர்புள்ள கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லை! நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். வருமானமும் குறையும், எதிர்பார்த்திருந்த பல வாய்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும். ெவளிமாநில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தும், எதிர்பார்த்திருந்த அளவிற்கு வருமானம் கிடைப்பது கடினமே!
அரசியல் துறையினர்: கிரக நிலைகள், இம்மாதம் முழுவதும், அனுகூலமாக இல்லை. பொது நிகழ்்ச்சிகள் மிகவும் குறையும்.உயர்மட்டத் தலைவர்களின் போக்கு மனத்திற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். கட்சியிலும், செல்வாக்கு குறையும். பிரபல பிரமுகர்கள், கட்சியை விட்டு விலகிவிடுவார்கள். நாமும் விலகிவிடலாமா என்கிற எண்ணம் மேலோங்கும். அவசரம் வேண்டாம்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் பலம் குறைந்து, சஞ்சரிக்கின்றனர். பாடங்களில் ஈடுபாடு குறையக்கூடும். படிக்க உட்கார்ந்தால், உறக்கம் மேலிடும். விடுதிகளில் தங்கிப் படித்துவரும் மாணவ - மாணவியருக்கு, பணப் பற்றாக்குறை கவலையை அளிக்கும்.
விவசாயத் துறையினர்: வயல் பணிகள் சற்று கடுமையாக இருக்கக்கூடும் என்பதை பூமி காரகரான செவ்வாயின் சஞ்்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், விளைச்சலும், வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். விவசாய வசதிகளுக்குக் குறைவிராது. விவசாய இடுபொருட்களாகிய, விதை, உரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாநிலை போன்றவை, வயல் பணிகளில் அலுப்படையச் செய்யாது. மாறாக, புது உற்சாகத்துடனும், அதிக உழைப்பையும் செலுத்த வைக்கும். அதன் காரணமாக, கணிசமான லாபத்தையும் ஈட்டிவிடுவீர்கள். குறித்த காலத்தில், மழை பெய்வது சமய சஞ்ஜீவியாகக் கைகொடுக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். சூரியனின் நிலை அனுகூலமாக இருப்பதால், அரசாங்க ஒத்துழைப்பும், சலுகைகளும் வயல் பணிகளில் உற்சாகத்தை மேம்படுத்தும், பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற ஏற்ற மாதம் இது.
பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகள், பெண்மணிகளின் நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ள குரு, சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் ராசிக்கு சுபப் பலன்களை அளிக்கும் நிலைகளில் வலம் வந்துகொண்டிருப்பதால், மனக் கவலைகள் நீங்கி, நிம்மதி பெறுவீர்கள்.குழந்தைகள் நன்றாக படிப்பதால், மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வேலை பார்க்கும் சிம்ம ராசி வனிதையருக்கு. அலுவலகச் சூழ்நிலை, பணிகளில் உற்சாகத்தைத் தரும். ஒரு சிலருக்கு பதவியுயர்வு அல்லது ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றமும் ஏற்பட்டு, அதன் காரணமாக மட்டற்ற மகிழ்ச்சிப் பெருக்கில் உலா வருவீர்கள் கிரக சஞ்சார நிலைகளின்படி!
அறிவுரை: சப்தம ஸ்தானமாகிய கும்ப ராசியில், சனி - ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், கணவர் - மனைவியரிடையே ஒற்றுமைக் குறைவும், பரஸ்பர வாக்குவாதமும் ஏற்படக்கூடும். அதன் காரணமாக, குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்பட்டு, ஆதலால், ராகு - சனி சேர்க்கைக்கு பரிகாரம் செய்வது மிகவும் அவசியம்.
பரிகாரம்: ஜோதிடக் கலையில், இத்தகைய தோஷத்திற்கு பல பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில், மிகவும் சக்திவாய்ந்த பரிகாரம் தினமும் கந்தர் சஷ்டி கவசம் மற்றும், மத் சுந்தர காண்டம் படித்து வருதல் ஆகியவை நல்ல பலனைத் தரும்.மேலும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் சனி்க்கிழமைதோறும் மாலையில், மண் அகல் விளக்கில் எள் எண்ணெய் தீபம் ஏற்றிவருதல் கைமேல் பலன் தரும்்்.
ஆதாரம் :"கிரகப் பரிகார ரத்தினம்" எனும் புராதன ஜோதிட நூல். கோசாலை ஒன்றிலும், தினமும் மாலையில் தீபமேற்றி வருவது அபரிமிதமான பலன்களைத் தரவல்லது. எத்தகைய கொடிய தோஷமானாலும், உடனுக்குடன் போக்கும் சக்திவாய்ந்தது இப் பரிகாரம். கோசாலையில் முப்பத்து முக்கோடி தேவர்களும், தெய்வங்களும் எழுந்தருளியிருப்பதாக புராதன நூல்கள் கூறுகின்றன. பல திருத்தலங்களின் தெய்வீக சக்தியை தன்னிடத்தே கொண்டுள்ளது கோசாலையாகும். ஓரிரவு கோசாலையில் தங்கிப் படுத்து உறங்குவது, சகல பாபங்களையும் போக்கிவிடும் அபார சக்திவாய்ந்தது.
அனுகூல தினங்கள்:
கார்த்திகை : 1-3, 7-11, 16-18, 22-24, 29.
சந்திராஷ்டம தினங்கள்:
கார்த்திகை : 13-ந் தேதி மாலை முதல், 15-ந் தேதி இரவு வரை.


