(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
17-9-2025 முதல் 17-10-2025 வரை
குடும்பம்: பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஜென்ம ராசியையும், பூர்வ புண்ணிய ராசியையும் பார்வையிடுவது, பல நன்மைகளை அளிக்கவுள்ளது. இருப்பினும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், வக்கிர சனியும், ராகுவும் இணைந்திருப்பது நன்மை தராது. வருமானம் திருப்திகரமாக இருப்பினும், செலவுகளும் அதற்கேற்றவாறு இருப்பதால், சேமிப்பிற்குச் சாத்தியமில்லை! உஷ்ண சம்பந்தமான உபாதைகளினால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தசா புக்திகள் அனுகூலமற்று இருப்பின், மருத்துவமனையில் தங்கியிருந்து, சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால், திருமண முயற்சிகள் கைகூடும். கணவர் - மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சனி பகவான் வக்கிர கதியில், ராகுவுடன் இணைந்திருப்பதால், குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் தடைப்படக்கூடும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் நல்லது. வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். பல குடும்பப் பிரச்னைகளினால், மன நிம்மதி பாதிக்கப்படக்கூடும். பழைய கடன்கள் இருப்பின், தொல்லை தரும். குரு பகவானின் சுபப் பார்வை, ராசிக்குக் கிடைப்பதால், சிரமங்கள் அனைத்தும் கட்டுக்கடங்கியே இருக்கும். "குரு பார்வை, கோடி தோஷங்களைப் போக்கும்...!" என்ற மூதுரை ஒன்றுண்டு, காலங்காலமாக!! ஜீவன காரகரான சனி பகவான் வக்கிர கதியில் ராகுவுடன் இணைந்து, ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய கும்ப ராசியில் சஞ்சரிப்பது நன்மை தராது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் நல்லது. முன்கூட்டியே பரிகாரம் செய்து கொள்வது மிகவும் அவசியம். எத்தகைய தருணங்களில், என்ன பரிகாரம் செய்தால், தோஷம் விலகும்? என்பதை ஜோதிடக் கலை விளக்கியுள்ளது. இதுபற்றி, "பூர்வ பாராசர்யம்" எனும் புகழ்பெற்ற, புராதன ஜோதிட நூல் விவரிக்கிறது.
உத்தியோகம்: கும்ப ராசியில், வக்கிர சனியும், ராகுவும் சேர்ந்திருப்பது, உங்கள் அன்றாடப் பணிகளில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆயினும், குரு பகவானின் சுபப் பார்வை தோஷத்தைப் பெருமளவில் குறைத்துவிடுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்யும் துலாம் ராசி அன்பர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். கிடைக்கும் வேலை பூரண திருப்தியைத் தராது. ஆயினும், ஒப்புக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது. இந்த வேலையில் இருப்பதால்தான், வேறு நல்ல வேலை கிடைக்கும் என்பதை கிரக நிலைகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அன்பர்கள், அன்றாடப் பொறுப்புகளில் கவனமாக இருத்தல் அவசியம்.
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் அடிக்கடி மாறவிருப்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்கின்றன. ஆதலால், தினமும் சந்தை நிலவரத்தை முன்னதாகவே கேட்டறிந்து, அதற்கேற்றாற்போல் உங்கள் விற்பனையைத் திட்டமிட்டால், நல்ல லாபம் கிடைக்கும். இல்லாவிடில், உங்கள் உழைப்பும், முயற்சிகளும் வீணாகும். மாதக் கடைசியில், நிதிப் பற்றாக்குறையையும், சமாளிக்க நேரிடும். ஆதலால், மாத ஆரம்பத்திலிருந்தே சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். புதிய திட்டங்களையும், முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது.
கலைத்துறையினர்: வாய்ப்புகளும், வருமானமும் ஒரே சீராக இருக்கும். சிக்கனமாகச் செலவு செய்தல் வேண்டும். "நிச்சயம் நமக்குத்தான்...!" என்று எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள், கைநழுவிப் போகும்! மக்களிடையே செல்வாக்கு குறையக்கூடும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையைப் பெரும்பாலும் கட்டுப்படுத்தும்் சுக்கிரன், சனி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய நால்வரின் முதல் இருவர் மட்டுமே உங்களுக்கு ஓரளவு அனுகூலமாக உள்ளனர். அவர்களாலும், அதிக நன்மைகளை எதிர்பார்ப்பதில் பயனில்லை. மேல்மட்டத் தலைவர்களுடன் பழகுவதில் சற்று ஜாக்கிரதையாக இருங்கள். கூடியவரையில், அவர்களை அடிக்கடி சந்திப்பதைத் தவிர்த்தல் உங்களுக்கு நன்ைம செய்யும். இருட்டில் வழி தெரியாமல் தவிக்கும் வழிப் போக்கருக்கு, செல்ல வேண்டிய பாதையைத் தெளிவாக எடுத்துக் காட்டும் ஒளி விளக்கு "ஜோதிடக் கலை" என விவரித்துள்ளது, புகழ்பெற்ற அரசியல் நிபுணரான, சாணக்கியர்!
மாணவ - மாணவியர்: கல்வியை, தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள கிரகங்கள் சுபத்துவப் பாதைகளில் சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! நினைவாற்றலும், கிரகிப்பு சக்தியும் அதிகரிக்கும். நல்ல சக-மாணவர்களின் சேர்க்கையும் கிடைக்கும் என்பதை குரு மற்றும் புதன் ஆகிய இரு கிரகங்களின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாய், ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது, வயல் பணிகளில் கடின உழைப்பு இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. சிறிது நேரம் வேலை செய்தாலே, அலுப்பும் சோர்வும் மேலிடும். ஆயினும், விளைச்சலும் வருமானமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கால்நடைகள் விருத்தியடையும்.
பெண்மணிகள்: குடும்பச் சூழ்நிலை, நிம்மதியை அளிக்கும். புத்திர ஸ்தானத்தை, குரு பகவான், தனது சுபப் பார்வையினால் பலப்படுத்துவதால், குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். அவர்களின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், தீர்த்த - தல யாத்திரை சென்றுவரும் பாக்கியமும் கிட்டும்.
அறிவுரை: புத்திர ஸ்தானத்தில் வக்கிர சனி - ராகு இணைந்திருப்பதால், குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுதல், அவசியம். வெளியூர்ப் பயணங்களின்போது, ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.
பரிகாரம்: திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, திருநாகேஸ்வரம், வைதீஸ்வரன் கோயில் -இவற்றில் ஏதாவது ஒரு திருத்தலம் சென்று எள் எண்ணெய் தீபம் ஏற்றிவைத்து, தரிசித்துவிட்டு வந்தால் போதும்.
அனுகூல தினங்கள்
புரட்டாசி : 1-3, 9-12, 16-18, 22, 23, 27-29.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி : 24 காலை முதல், 26 பிற்பகல் வரை.