சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை
18-10-2025 முதல் 16-11-2025 வரை
குடும்பம்: ஜென்ம ராசியில், சூரியனும், செவ்வாயும் சேர்ந்துள்ளன! பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில், வக்கிர சனியும், ராகுவும் இணைந்துள்ளனர்!! ஜீவன ஸ்தானத்தில் உச்ச குரு அமர்ந்துள்ளார். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால், உடனுக்குடன் நிவாரணமும் கிட்டும். வரவிற்கு மீறிய செலவுகள் கவலையை அளிக்கும். திட்டமிட்டு செலவு செய்யாவிடில், புதிய கடன்களை ஏற்கவேண்டிய அவசியமும் உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்கிர சனியுடன் ராகு சேர்ந்திருப்பதால், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும், பரஸ்பர வாக்குவாதமும், வரவிற்கு அதிகமான செலவுகளும் ஏற்படும். தேவையற்ற வாக்கு வாதமும், கருத்துவேற்றுமையும் குடும்பத்தில் ஒற்றுமையை பாதிக்கும். கூடிய வரையில், வெளியூர்ப் பயணங்களை இம்மாதத்தில் தவிர்ப்பது நன்மை செய்யும். திருமண முயற்சிகளில், வரன் அமைவது சற்று கடினமே! மேலும், வரனைப் பற்றி தீர விசாரிக்காமல், வரனை நிர்ணயிப்பதைத் தவிர்ப்பது அவசியம். கூடியவரையில், திட்டமிட்டு செலவு செய்வது இம்மாதம் மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் துல்லிமாக எடுத்துக்கூறுகின்றன.
உத்தியோகம்: "பத்தில் குரு, பதவியைக் கெடுக்கும்...!" என்ெறாரு பழமொழியுண்டு!! அலுவலகப் பணிகளில், கவனமாக இருத்தல் அவசியம். மேலதிகாரிகள் நியாயமாக நடந்துகொள்ளாவிட்டாலும்கூட, அதனை வெளியே காட்டாமல், உங்கள் பணிகளில் கவனமாக இருத்தல், உங்கள் எதிர்காலத்்திற்கு நன்மை செய்யும். புதிதாக வேலைக்கு முயற்சிக்கும் துலாம் ராசியினருக்கு, வேலை கிடைக்கும். ஆயினும், அந்த வேலையில் பூரண திருப்தியிராது. இருப்பினும், ஒப்புக்கொள்வது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
தொழில், வியாபாரம்: சந்தையில், நியாயமற்ற போட்டிகள் சற்று கடினமாகவே இருக்கும். கடின உழைப்பினால், அவற்றை முறியடித்து லாபம் காண்பீர்கள். புதிய முதலீடுகளில் இம்மாதம் முயற்சிக்க வேண்டாம். நிதி நிறுவனங்களினால், சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, மன-நிம்மதியைப் பாதிக்கக் கூடும். பண விஷயங்களில் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பிறருக்கு, உதவுவதற்காக பணம் கொடுத்து, ஏமார்ந்து போவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. அத்தகைய தருணங்களில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே எடுத்துக் காட்டும் காலக் கண்ணாடியாக ஒப்பற்ற கலையாக ஜோதிடம் விளங்குகிறது.
கலைத் துறையினர்: வாய்ப்புகள் சற்று குறையக்கூடும் என்பதை கிரக சஞ்சார நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ஆதலால், கைப் பணத்தைச் சிக்கனமாக செலவு செய்தல் அவசியம். பிறர் உதவி எதுவும் கிடைக்காது என்பதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். ஜாக்கிரதையாக இருப்பது மிகவும் அவசியம். எதிர்பார்த்திருந்த நல்ல வாய்ப்புகள், கடைசி நிமிடத்தில் கைநழுவிப் போகும். கிடைக்கும் வாய்ப்புகளிலும், வருமானம் சொற்பமாக இருக்கும். ஆதலால், கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிப்பது, மாதக் கடைசியில் பிறரிடம் உதவிக்குச் செல்லாமலிருக்க உதவும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகங்கள் அனைத்தும் சாதகமாக இல்லை!
கட்சித் தலைவர்களுடன் பழகுவதில் ஜாக்கிரதையாக இருங்கள். மாற்றுக் கட்சித் தலைவர்களுடன் அடிக்கடி பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள புதன், சுப பலம் பெற்றிருக்கவில்லை! படிக்க உட்கார்ந்தால், சோர்வும், உறக்கமும் மேலிடும். கூடியவரையில், நண்பர்களைச் சந்திப்பதைக் குறைத்துக் கொள்வது, உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் பலம் குறைவாக சஞ்சரிப்பதால், வயல் பணிகள் சற்று கடினமாகவே இருக்கும். கூடியவரையில், இரவு நேரங்களில் வயல் பணிகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. காரணம், விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதேயாகும். பழைய கடன்களும் கவலையை அளிக்கும். கால்நடைகளின் பராமரிப்பில், பணம் விரயமாகும். மாதக் கடைசியில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படக்கூடும். ஆரம்பத்திலிருந்தே ஜாக்கிரதையாக செலவழித்தால், புதிய கடன்களைத் தவிர்க்க உதவும்.
பெண்மணிகள்: கூடியவரையில், கடின உழைப்பையும், எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான கவலைகளையும் குறைத்துக் கொள்வது, உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும். வேலை பார்க்கும் வனிதையர் அலுவலகத்தில், தங்கள், தங்கள் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. சிறு தவறும் பெரும் பிரச்னையில் கொண்டுவிடக் கூடும். திருமணத்திற்காகக் காத்துள்ள கன்னியருக்கு, வரன் அமைவது தாமதமாகும்.
அறிவுரை: எந்தக் காரியமானாலும், சற்று சிந்தித்து, அதன் பிறகு செயல்படுவது நன்மை செய்யும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில், பசுவிற்கோ அல்லது ஒரு ஏழைக்கோ உணவளிப்பது மகத்தான பரிகார பலனைத் தரவல்லது.
அனுகூல தினங்கள்:
ஐப்பசி : 1, 2, 7-9, 13-15, 17-19, 23-26, 30,
சந்திராஷ்டம தினங்கள்:
ஐப்பசி : 20 பிற்பகல் முதல், 22 மாலை வரை.


