இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

மீனம்

Published: 16 Sep 2025

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

17-9-2025 முதல் 17-10-2025 வரை

குடும்பம்: அர்த்தாஷ்டக ராசியில் குரு பகவான், விரயத்தில் வக்கிர சனி - ராகுக் கூட்டணி, அஷ்டம ராசியில் செவ்வாய் ஆகி கிரக நிலைகளில், இம்மாதம் செல்கிறது. ஏழரைச் சனியின் ஆரம்பப் பகுதியில், அவருடன் ராகு இணைவது ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இருப்பிலும் சனி - ராகுவை உங்கள் ராசி நாதன் பார்ப்பது, சமயசஞ்ஜீவினி போல் நல்ல கிரக நிலையாகும். உடல் ஆரோக்கியத்தை சற்று குரு பகவான் பாதுகாக்கிறார். வரவைவிட செலவுகளே அதிகமாக இருக்கும். வீரிய சூரியனும், அஷ்டமத்தில் செவ்வாயும் அனுகூலமாக இல்லை! மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கற்பனையான கவலைகள் மனத்தை அரிக்கும். விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவதில் தடங்கல்களும், தாமதமும் ஏற்பட்டு, கவலையளிக்கும். சில தருணங்களில் தவறான வரனை நிச்சயித்துவிடும் சூழ்நிலையும் உருவாகிவிடும். எதையும் தீர விசாரித்து, ஆராய்ந்து, சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. கணவர் - மனைவியரிடையே ஒற்றுமையும், பரஸ்பர அந்நியோன்யமும் ஓங்கும்.

உத்தியோகம்: வக்கிர கதியிலுள்ள சனி பகவானையும், ராகுவையும் குரு பகவான் தனது சுபப் பார்வையினால் தூய்மைப் படுத்துவதால், அலுவலகத்தில் நிர்வாகத்தினரின் நற்பெயரும், சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். ஒருசிலருக்கு, ஊதிய உயர்வும், பதவியுயர்வும் கிடைப்பதற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன. வேலையில்லாத மீன ராசியினருக்கு, சிறு முயற்சியில் நல்ல வேலை கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: சனி பகவானின் ஆட்சிவீடான கும்ப ராசியில், ராகு சேர்ந்து, ராசி நாதனாகிய குரு பகவானின் சுபப் பார்வை பெறுவது, வர்த்தகத்தில் சிறந்த முன்னேற்றம் ஏற்படவிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம். சந்தை நிலவரம் தொடர்ந்து சாதகமாக நீடிக்கும். ஆயினும், மிகக் கடினமான நிதிநிலைமையை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். ஏழரைச் சனியின் விளைவாக, கூட்டாளிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். லாபத்தைப் பங்கிட்டுக் கொள்வதில், வாக்குவாதமும், மனஸ்தாபமும் ஏற்பட்டு, சில பாகஸ்தர்கள் விலக நேரிடும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பது, மிகவும் சிரமமாக இருக்கும்.

கலைத் துறையினர்: கிரக நிலைகள் ஓரளவே உங்களுக்கு அனுகூலமாக உள்ளனர், இம்மாதம் முழுவதும்! வருமானம் சிறிது குறையும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள், கடைசி நேரத்தில் கைநழுவிப் போகும். கையிலிருப்பதைக் கொண்டு, சமாளிப்பதே விவேகமாகும். ஒருசிலருக்கு, வெளிநாடு சென்றுவரும் வாய்ப்புகளும், அங்கு நிகழும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆயினும், அவற்றாலும் எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் இராது. "வெளிநாடுகளுக்குச் சென்று வந்தோம்...!" என்று சொல்லிக் கொள்ளலாம் - அவ்வளவுதான்!! வேறு எந்தப் பிரயோஜனமும் இராது.

அரசியல் துறையினர்: சுக்கிரன் மட்டுமல்லாது, அரசியல் துறையுடன் தொடர்புள்ள மற்ற கிரகங்களும்கூட, உங்களுக்கு அனுகூலமாக இல்லை! உயர்மட்டத் தலைவர்களுக்கு, உங்கள் மீதுள்ள நம்பிக்கை குறைந்து வருவதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மேடைப் பேச்சுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மாணவ - மாணவியர்: வித்யா காரகரும், அவருக்குத் துணை நிற்கும் இதர கிரகங்களும், அனுகூல நிலைகளில் சங்சரிக்கவில்லை! தேர்வுகளின்போது, படித்தவை மறந்து போகக் கூடும். புத்தகத்தைக் கையிலெடுத்தாலே சோர்வும், உறக்கமும் மேலிடும்.

விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் கடுமையாக உழைத்தும்கூட, விளைச்சல் எதிர்பார்த் திருந்ததைவிடச் சற்று குறைவாகத்தான் இருக்கும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. விரயத்தில் சனி - ராகுவின் கூட்டணி, மற்றும் அஷ்டம ராசியில், பூமி காரகரான செவ்வாய் ஆகிய கிரக நிலைகள் நன்மை தராது. உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பது கடினமே! கால் நடைகளின் பராமரிப்பிலும், அதிக பணம் செலவழியும். அடைபடாமல் நீடிக்கும் பழைய கடன்கள் கவலையை அளிக்கும். இவையனைத்தும், ஏழரைச் சனியின் விளைவுகளாகும். பரிகாரம் மிகவும் அவசியம். எளிய பரிகாரங்களைக் கீழே தந்திருக்கின்றோம்.

பெண்மணிகள்: உங்களுக்கு இம்மாத கிரக நிலைகள் உணர்த்துவது, உடல் ஆரோக்கியத்தைக் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்பதே! ஏற்கெனவே கூறியுள்ளபடி, ஏழரைச் சனியின் முதல் பகுதியில் சிக்கியுள்ள உங்கள் ராசிக்கு, ராகுவின் தோஷமும் ஏற்பட்டுள்ளதால், பரிகாரம் மிகவும் அவசியம். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள் அன்றாடப் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம். அடிக்கடி விடுப்பில் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும். உடல் நலனிலும் கவனம் வேண்டும். குடும்பத்தில், அனைத்து உறவினருடனும் சற்று அனுசரித்து, நடந்துகொண்டால், நிம்மதி பெற முடியும். கைப் பணத்தையும் எண்ணி, எண்ணிச் செலவழியுங்கள்.

அறிவுரை : ஏழரைச் சனி நடப்பதால், அன்றாடப் பணிகளில் நிதானம், பொறுமை அவசியம். பிறருடன் பழகுவதில் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். இம்மூன்றையும் கடைப்பிடித்தால் போதும்.

பரிகாரம்: தினமும் ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சொல்லி வந்தால் போதும்.

அனுகூல தினங்கள்

புரட்டாசி : 4-7, 11-15, 19-22, 26-28.

சந்திராஷ்டம தினங்கள்

புரட்டாசி : 8 முதல், 10 பிற்பகல் வரை.

பிறந்தநாள் பலன்கள்