search-icon-img
featured-img

தனுசு

Published :

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

17-8-2025 முதல் 16-9-2025 வரை

குடும்பம்: குரு, சனி மற்றும் ராகு ஆகிய மூவரும் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை! வருமானம் தேவையான அளவிற்கு இருக்கும். குடும்பத்தில், அமைதியும், ஒற்றுமையும் நிலவும். கணவர் - மனைவியரிடையே பரஸ்பர அன்பும், அந்நியோன்யமும் மகிழ்ச்சியை அளிக்கும். சப்தம ஸ்தானத்தில், குரு- சுக்கிரன் இணைந்திருப்பதால், திருமண முயற்சிகளில் நல்ல வரன் அமையும். குடும்பத்தில், நிச்சய தார்த்தம், திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறத்தல் ேபான்ற சுப நிகழ்ச்சிகள் நிகழும். சிலருக்கு, சொந்த வீடு அமையும் பாக்கியமும் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமணமான பெண்மணிகள், கருத்தரிப்பதற்கு ஏற்ற மாதம் இது!

உத்தியோகம்: பொறுப்புகளும், பணிச் சுமையும் அதிகரிக்கும். ஓய்வில்லாத உழைப்பு, பணிகளில் வெறுப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தும். மேலதிகாரிகளின் ஆதரவும், நிர்வாகத்தினரின் பாராட்டுதல்களும் ஓரளவு மனத்திற்கு இதமாக அமையும். ஒரு சிலருக்கு, ஊதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம். இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வெளிநாடு சென்று பணியாற்றும் ஆர்வமிருப்பின், முயற்சியில் வெற்றி கிட்டும்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைக்கு அதிகாரம் கொண்ட அனைத்து கிரகங்களும், சுப பலம் பெற்று வலம் வருவதால், நல்ல முன்னேற்றத்தையும், விற்பனையையும், லாபத்தையும் எதிர்பார்க்கலாம். புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு ஏற்ற மாதம் இந்த ஆவணி! வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்கள் ஆதரவு தந்து, ஒத்துழைப்பார்கள். சந்தை நிலவரம் ஆதரவாக அமையும். உங்கள் சரக்குகளுக்கு, நல்ல விலை கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, லாபகரமான மாதமாகும். வெளிநாடுகளிலுள்ள பிரபல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு, வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் உருவாகும். வெளிமாநிலங்களில் கிளை நிறுவனங்கள் திறப்பதற்கு உதவிகரமாக வலம் வருகின்றன, கிரகங்கள்!

கலைத்துறையினர்: குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூவரும் உங்களுக்கு ஆதரவாக சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், நல்ல வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். பலர் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு நிகழும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாத்தியக்கூறும் உள்ளது. இதன் காரணமாக, வருமானமும் அதிகரிக்கும். செல்வாக்கு நிறைந்த பெரிய மனிதர்களுடன் தொடர்பும், நட்பும் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமையை சரிசெய்து கொள்ள ஏற்ற மாதம் இது!

அரசியல் துறையினர்: அரசியல் துறையை தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள, சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், சுப பலம் பெற்றுத் திகழ்வதால், கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் திகழும். கட்சித் தலைவரின் வலது கரமாக செயல்படுவீர்கள்! செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர் ஒருவருடன் தொடர்பும், நட்பும் ஏற்படும். இந்தத் தொடர்பு, எதிர்காலத்தில் உங்கள் அரசியல் வாழ்க்கையில் முக்கிய மாறுதல் ஒன்றை ஏற்படுத்தும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள புதன் மற்றும் இதர க்ிரகங்கள் அனைத்தும், சுபத்துவப் பாதையில் வலம் வருகின்றன. இதன் காரணமாக, கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில், வினாக்களுக்கு சரியான பதிலளித்து, வெற்றி பெற இது உதவும். உயர் கல்விக்கு நிதியுதவி எளிதில் கிட்டும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாடு சென்று சிறப்பு உயர் கல்வி பெறுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன.

விவசாயத் துறையினர்: செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளன. உங்கள் நிலத்தைப் பார்த்தாலே, இதைப் புரிந்து கொள்ளலாம். பயிர்கள் செழித்து வளரும். தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. விவசாயத் துறைக்கு அவசியமான அடிப்படை வசதிகளும் எளிதில் கிடைக்கும். திட்டமிட்டு செலவு செய்தால், பழைய கடன்களையும் அடைத்து நிம்மதி பெறலாம். அந்த அளவிற்கு, கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாப்பதில், குருவும், சுக்கிரனும் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்விரு கிரகங்களும், மிகவும் அனுகூலமாக நிலைகொண்டுள்ளன இம்மாதம் முழுவதும். திருமணமான பெண்களுக்கு, மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கும்படி குடும்பச் சூழ்நிலை அமையும். வேலை பார்க்கும் வனிதையருக்கு, அலுவலகச் சூழ்நிலை அனுகூலமாக இருக்கும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் பெண்களுக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில், நல்ல வேலை கிடைக்கும்.

அறிவுரை: ஜீவன ஸ்தானத்தில், செவ்வாய் சஞ்சரிப்பதால், வேலைக்குச் சென்று வரும் தனுர் ராசியினருக்கு, அதிகாரிகளின் கண்டிப்பு, கவலை தரும். பணிச் சுமை, அன்றாடக் கடமைகளில் வெறுப்பை ஏற்படுத்தும். பொறுமை, சாதுர்யம் மிக மிக அவசியம்.

பரிகாரம்: செவ்வாய்க்குப் பரிகாரம் செய்வது, சிரமங்களைக் கணிசமாகக் குறைக்கும். வைத்தீசுவரர் கோயில் தரிசனம் நல்ல பலனையளிக்கும். இயலாதவர்கள், அவரவர்கள் வீட்டிற்கு அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் செவ்வாய்க் கிழமைதோறும் தீபத்தில் சிறிது நெய் சேர்த்து வந்தால் போதும்.

2. கோயிலைச் சுற்றி வெளிப் பிராகாரத்தில் அரிசிமாவுடன் சர்க்கரைப் பொடியையும் கலந்து, கோயில் மதிள் சுவரைச் சுற்றிலும் தூவிவிடவேண்டும். மகத்தான பரிகாரப் பலன்களை உங்களுக்குக் கொண்டுவந்து சேர்க்கும்.

அனுகூல தினங்கள்

ஆவணி : 1-3, 7, 8, 12-14, 19-21, 26-29.

சந்திராஷ்டம தினங்கள்

ஆவணி 4 இரவு முதல், 6 பின்னிரவு வரை.