search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

(17-11-2025 முதல் 15-12-2025 வரை)

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்: ஜென்ம ராசியில் சூரியனும் செவ்வாயும் இணைந்திருப்பதும், அர்த்தாஷ்டக ராசியான கும்ப ராசியில் வக்கிர சனியும், ராகுவும் சேர்ந்திருப்பதும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ரவில் நெடுநேரமாகக் கண்விழிப்பது, தேவையற்ற வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வது, நேரங்கெட்ட நேரங்களில் உணவருந்துவது, தரக்குறைவான உணவகங்களில் உண்பதுஆகியவற்றைக் கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உண்ணுவதும், உறங்கச் செல்வதும் அவசியமாகும்.ஜென்ம ராசியில், அதிஉக்கிரமான சூரியனும், செவ்வாயும் இணைந்திருக்கும்போது, உடல் அதி உஷ்ணத்தைத் தாங்கவேண்டியிருக்கும் என "அஷ்டாங்க ஹிருதயம்", "ஆயுர்வேத ரத்னாவளி" போன்ற பிரசித்திப் பெற்ற வைத்திய நூல்கள் விவரித்துள்ளன. இத்தகைய கிரகநிலைகள் அமையும்போது, சம்பந்தப்பட்ட அன்பர்கள், வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து கொள்வது அவசியமென ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. ஆயுர்வேதமும், ஜோதிடமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த கலைகளாகும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, நுங்கு, கிருணிப் பழம் ஆகியவற்றை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது. மேலும், நீர் அருந்துவதும், சரீரத்திற்கு நன்மைகளைச் செய்யும் என்பதையும் ஆயுர்வேத நூல்கள் விளக்கியுள்ளன. கூடியவரையில், தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக் கொள்வதும், ஓய்வெடுப்பதும் அவசியமாகும்.

உத்தியோகம்: ஜீவனகாரகரான சனி பகவான், ராகுவுடன் இணைந்து, அர்த்தாஷ்டக ராசியான கும்பத்தில் சஞ்சரிப்பதால், வேலைபார்க்கும் இடத்தில்,பேச்சிலும், செயலிலும் நீங்கள் அதி ஜாக்கிரதையாகவும், கட்டுப்பாட்டுடனும் செயல்படுவதும் பல தருணங்களில், மேலதிகாரிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். சிலருக்கு, இடமாற்றம் அல்லது பதவிமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. அந்த மாற்றத்தினால், மன நிம்மதி பாதிக்கப்படும். அது பெரும்பாலும், உங்கள் விருப்பத்திற்கு மாறாகவே இருக்கும். கூடியவரையில், வளைந்து கொடுப்பது புதுப் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

தொழில், வியாபாரம்: கிரக நிலைகள் இம்மாதம் முழுவதும், வர்த்தகத் துறையினருக்கு சாதகமாக இல்லை. கூடியவரையில், புதிய முதலீடுகளையும், விஸ்தரிப்புத் திட்டங்களையும் இம்மாதம் தவிர்ப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நலன் பயக்கும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும் குறையும். ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலுள்ள வர்த்தக நிறுவனங்களினால், புதிய பிரச்னைகள் ஏற்படும். முக்கிய பிரச்ைனகள் அனைத்திலும் தீர ஆராய்ந்து பார்த்து, அதன் பின்பே முடிவெடுப்பது, எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.

கலைத் துறையினர்: வாய்ப்புகள் குறையாது. ஆயினும், வருமானம் மட்டும் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது என கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. கையிலிருப்பதைக் கொண்டே சமாளிக்க வேண்டிய மாதமாகும் இந்தக் கார்த்திகை. மக்களிடையே செல்வாக்கும், புகழும் குறையக்கூடும். இதுவே வாய்ப்புகளையும், வருமானத்தையும் பாதிக்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் கொண்ட கிரகங்கள் சிறிய அளவிலேயே சுப பலம் பெற்றுள்ளதால், இம்மாதம் முழுவதும் அரசியல் துறையினருக்கு, ஓரளவே நன்மைகள் ஏற்படும். மக்களிடையே செல்வாக்குக் குறையும், கட்சியினரின் திட்டமிட்ட பிரச்சாரம் உங்கள் செல்வாக்கை பாதிக்கக்கூடும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள புதன் மற்றும் குரு ஆகிய இரு கிரகங்களும் அனுகூலமாக இல்லை. அதன் காரணமாக, பாடங்களில் கவனச் சிதைவு உண்டாகும். படிக்க உட்கார்ந்தால், உறக்கமும், சோம்பலும், அசதியும் மேலிடும். சிலருக்கு, குடும்பச் சூழ்நிலையும், பிரச்னைகளும் மனத்தை அரிக்கும், இதுவே படிப்பில் சிரத்தைக் குறைய வழிவகுக்கும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிபதிக் கிரகம் செவ்வாய் ஆவார். அவர் சூரியனுடன் சேர்ந்து, விருச்சிக ராசியில் சஞ்சரிப்பது, நன்மை தராது. வயல் பணிகளில் உழைப்பு கடினமாகும். அண்டை நிலத்தவரோடு பகையுணர்ச்சி மேலிடும். விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் தாமதப்படும். அதனால், பணப் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

பெண்மணிகள்: ஜென்ம ராசியில் இணைந்து சஞ்சரிக்கும் சூரியன் - செவ்வாயினாலும், அர்த்தாஷ்டக ராசியில் நிலைகொண்டுள்ள சனி - ராகுவின் கூட்டுச் சேர்க்கையினாலும் அடிக்கடி உடல் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, அன்றாடப் பணிகளைக்கூட கவனிக்க இயலாத நிலை ஏற்படும். மருத்துவச் செலவுகளும் கவலையளிக்கும்.

அறிவுரை: உடல் நலனில் கவனம் வேண்டும், மருத்துவச் செலவுகள் காரணமாக, மற்ற செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பரிகாரம்: செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் ஓர் ஏழைக்கு உணவளிப்பது மிகச் சிறந்த பரிகார பலனை அளிக்கும். மாலையில் அருகிலுள்ள திருக்கோயி்ல் ஒன்றில் தீபத்தில் சிறிது எள் எண்ணெய் அல்லது பசு நெய் சேர்த்துவருவதும் நல்ல பலனை அளிக்கவல்லவை.

அனுகூல தினங்கள்:

கார்த்திகை : 4-6, 10-13, 17, 18, 22-24, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்:

கார்த்திகை : 19-ந் தேதி இரவு முதல், 21-ந் தேதி வரை.