search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

18-10-2025 முதல் 16-11-2025 வரை

குடும்பம்: பாக்கிய ஸ்தானத்தில், உச்ச ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால், வருமானத்திற்குக் குறைவிராது. வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். அர்த்தாஷ்டக ராசியில் சனியும் ராகுவும் இணைந்திருப்பதால், உடல் நலனில் கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற அலைச்சல்கள், வெயிலில் வெளிச் செல்வது, கண்ட இடங்களிலும் உணவருந்துவது ஆகியவற்றைத் தவிர்த்தல் அவசியம். வெளியூர்ப் பயணங்களின்போது, பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். களவுபோகக் கூடும் எனவேதான் இந்த எச்சரிக்கை! நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக கடனாக பணம் கொடுக்க வேண்டாம். திரும்பக் கிடைப்பது கடினமானதாகும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும். தசா, புக்திகளுக்கேற்ப பாடல் பெற்ற திருத்தல தரிசனம் ஒன்று கிட்டும். கூடியவரையில் வெளியூர்ப் பயணங்களை ஒத்திப்போடுவது நல்லது!

உத்தியோகம்: அர்த்தாஷ்டக ராசியில் வக்கிர சனியும், ராகுவும் இணைந்திருப்பதால், மேலதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோருடன் சற்று அனுசரித்தும், வளைந்துகொடுத்தும் நடந்து கொள்வது மிகவும் அவசியம். புதிதாக வேலைக்கு முயற்சிக்கும் அன்பர்கள். இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்து, ஏமாந்துவிட வேண்டாம். சக-ஊழியர்கள் எவரிடமும் நிர்வாகத்தினரைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்ப்பது அவசியம். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் விருச்சிக ராசி அன்பர்கள், "தாங்களுண்டு, தங்கள் பணிகள் உண்டு...!" என்று தங்கள் அன்றாடக் கடமைகளிலேயே கவனமாக இருத்தல் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவும்.

தொழில், வியாபாரம்: சந்தை நிலவரத்தில் மிகக் கடினமான போட்டிகளை நீங்கள் இம்மாதம் சமாளிக்க வேண்டியிருக்கும்! போலி பொருட்கள், அதிக அளவில் விற்பனைக்கு வருவதால், அன்றாட விற்பனையில் போராடவேண்டியிருக்கும். இடை-இடையே பண நெருக்கடியையும் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். முன்பணம் இல்லாமல், சரக்குகள் அனுப்புவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். குறிப்பாக, ஏற்றுமதித் துறையினர் இவ்விஷயத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம். நிதி நிறுவனங்களின் கண்டிப்பையும் நீங்கள் சமாளிக்க வேண்டி வரும் இம்மாதத்தில்! புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது அவசியம். கூட்டாளிகளினாலும் பிரச்னைகள் உண்டாகும்.

கலைத் துறையினர்: வாய்ப்புகளும், வருமானமும் குறைவின்றி கிடைக்கும், சினிமாத் துறையினருக்கு, புதிய படங்கள் அமோக வெற்றியையும், லாபத்தையும் பெற்றுத் தரும். அரசாங்க ஆதரவு, தக்க தருணங்களில் கைகொடுக்கும். மக்களிடையே செல்வாக்கு உயரும். நீங்கள் நடித்த படங்களினால், நல்ல வசூல் கிடைக்கும்.புதிதாக கலைத் துறையில் கால்பதிக்கும் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை கொடுத்து, உற்சாகத்தை ஏற்படுத்தும்.

அரசியல் துறையினர்: சுக்கிரன், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கிறார். கட்சியில், ஆதரவு பெருகும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். உயர்மட்டத் தலைவர்கள் உங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிலருக்கு, கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டிவரும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள புதனும், இதர கிரகங்களும் சுப-பலத்துடன் வலம் வருவதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் உதவிகரமாக அமையும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பயில்வதற்கும் வாய்ப்புகள் கிட்டும். கல்வி உதவித் தொகை கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. இது ஓர் அரிய சந்தர்ப்பம்! பயன் படுத்திக் கொள்வது உங்கள் திறமையில் மட்டுமே உள்ளது!!

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள அனைத்து கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருவதால், விளைச்சலும், வருமானமும் மனத்திற்கு நிறைவைத் தரும். விவசாய வெற்றிக்கு அத்தியாவசியமான தண்ணீர் வசதி, குறைவின்றிக் கிடைக்கும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெற ஏற்ற மாதம் இந்த ஐப்பசி!

பெண்மணிகள்: பெண்மணிகள் நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ள சுக்கிரன் மற்றும் குரு ஆகிய இரு கிரகங்களும் உங்கள் ராசிக்கு, அனுகூலமான பாதைகளில் சஞ்சரிப்பதால், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் குறைவில்லாது அள்ளித்தரு மாம் இந்த ஐப்பசி! எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்!!

அறிவுரை: பெரும்பான்மையான கிரகங்கள், உங்களுக்கு அனுகூலமாக, சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். உங்கள் பொருளாதாரத்தையும் ஓரளவு சீர்செய்துகொள்ள ஏற்ற மாதம் இது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில், கன்றுடன்கூடிய பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பசும்புல் கொடுத்தாலும், ஏழைஒருவருக்கு அன்னதானம் அளித்தலும் மிகச் சிறந்த பரிகார பலனை அள்ளித் தரும். தேவை பக்தியுடன்கூடிய நம்பிக்கை!

அனுகூல தினங்கள்

ஐப்பசி : 3-6, 10-12, 16-20. 25-27, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஐப்பசி : 22 மாலை முதல், 24 இரவு வரை.