(17-11-2025 முதல் 15-12-2025 வரை)
(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: "திருதீய குரு வனத்திலே....!" என்றொரு மூதுரை உண்டு!! ராமபிரான், தேவி சீதை, தம்பி இலக்குவன் ஆகியோருடன் வனவாசம் சென்றபோது, குரு பகவான், அவரது ஜாதகத்தில் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரித்ததால், இத்தகைய மூதுரை ஒன்று வழக்கத்தில் ஏற்பட்டுவிட்டது. அதே தருணத்தில், சுக ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதும், குடும்பத்தில் நிம்மதி குறைந்த சூழ்நிலை நிலவும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. வருமானத்திற்கு மீறிய செலவுகளும், கணவர் - மனைவியரிடையே உருவாகும் கருத்துவேற்றுமையும் நெருங்கிய உறவினர்களிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவும் மன நிம்மதியைப் பாதிக்கும். களத்திர ஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள சூரியன் - செவ்வாய் சேர்க்கையினால், உஷ்ண சம்பந்தமான உபாதைகளினால், மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். குடும்பப் பிரச்னைகளும், பழைய கடன்களும் கவலையை அளிக்கும். விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவதில் தடங்கல்களும், தாமதங்களும் ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர விரோத மனப்பான்மை உருவாகும். இவை போதாதென்று, பழைய கடன்களும் கவலையை அளிக்கும்.
உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில் வக்கிர கதியில் சனி பகவானும், பாபக் கிரகமான ராகுவும் சேர்ந்திருப்பது, வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் பல பிரச்னைகளைக் குறிக்கிறது.மேலதிகாரிகளின் அளவிற்கு மீறிய கண்டிப்பும், சக-ஊழியர்களின் மறைமுகப் பேச்சுக்களும், அன்றாடப் பொறுப்புகளிலும், கடமைகளிலும் மனத்தை ஊன்றிச் செலுத்த முடியாத அளவிற்கு மன அமைதி பாதிக்கப்படும். சில தருணங்களில், "வேலையை விட்டுவிடலாமா...?" என எண்ணத் தோன்றும் அளவிற்கு சூழ்நிலையில் வெறுப்பு உண்டாகும். கூடிய வரையில், அவசர முடிவுகளையும், உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்க்க வேண்டும். பல சமயங்களில் சக-ஊழியர்களினாலும், பிரச்னைகள் ஏற்படக்கூடும். நீங்கள் செய்யாத தவறுக்கு, உங்கள் மீது வீண் பழி உண்டாகக்கூடும். மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். அவசர முடிவுகள் உங்கள் எதிர்கால நலன்களைப் பாதிக்கும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. தாற்காலிகப் பணியாளர்கள், அவரவர்களது பணிகளில் நிரந்தரம் செய்யப்படுவது, ஒத்திப்போடப்படும். புதிதாக வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்கள் இடைத்தரகர்களை நம்பி பணத்தை இழந்துவிடக்கூடும். இத்தகைய தருணங்களில்தான், ஜோதிடம் என்னும் ஒப்புயர்வற்ற தெய்வீகக் கலை நமக்கு எச்சரிக்கை செய்து நம்மைக் காத்தருள் புரிகிறது.
தொழில், வியாபாரம்: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய மாதம் இந்தக் கார்த்திகை. ஏனெனில், சந்தை நிலவரம் அடிக்கடி மாறக்கூடும் என கிரக நிலைகள் முன்கூட்டியே எடுத்துக்காட்டுகின்றன. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதை, சுக்கிரனின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. மொத்த வியாபாரிகள் மட்டுமின்றி, சில்லறை விற்பனையாளர்களும் நல்ல லாபம் அடைவார்கள். இத்தருணத்தைப் பயன்படுத்திக்ெகாண்டு, பழைய கடன்களை அடைத்து, உங்கள் நிதி நிலைமையை சரி செய்துகொள்ள உதவிகரமான மாதம்.
கலைத் துறையினர்: எதிர்பார்க்கும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைப்பது, சற்று கடினமே! ஆதலால், வருமானமும் எதிர்பார்ப்பை விட, சற்று குறைவாகவேதான் இருக்கும். பல தருணங்களில், "நிச்சயமாகக் கிடைக்கும்..." என உறுதியுடன் எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கைநழுவிப் போகக் கூடும். சங்கீத சபாக்களின் ஆதரவு எதிர்பார்க்கும் அளவிற்கு இராது.
அரசியல் துறையினர்: அரசியல் துறையின் பெரும்பகுதி, சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. அந்தச் சுக்கிரன், இம்மாதம் முழுவதும் ஓரளவு உங்களுக்குச் சாதகமாகவே வலம் வருகிறார். அரசியல் துறையுடன் தொடர்பு கொண்டுள்ள மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லை. கட்சியில் மறைமுக அதிருப்தியும், எதிர்ப்பும் உருவாகிக் கொண்டுள்ளன. உயர்மட்டத் தலைவர்களும், தொடர்ந்து உங்களைப் புறக்கணிப்பதையும் நீங்கள் உணர்வீர்கள். பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டிய தருணமிது.
மாணவ - மாணவியர்: கல்வி முன்னேற்றம் ஒரே சீராக இருக்கும். சக-மாணவ, மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. நீங்களுண்டு, உங்கள் படிப்புண்டு என்றிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். மறந்துவிடாதீர்கள்!
விவசாயத் துறையினர்: சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் விவசாயத் துறையுடன் நேரிடையாகத் தொடர்புள்ளவையாகும். இவையனைத்தும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், தண்ணீர் மற்றும் வயல் பணிகளுக்கு அத்தியாவசியமான அனைத்து வசதிகளும் போதிய அளவிற்குக் கிடைப்பதால், விளைச்சலும், எதிர்பார்க்கும் அளவிற்குக் குறைவில்லாது கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையை சரிசெய்து ெகாள்ள ஏற்ற மாதம் இது, புதிய கால்நடைகளும், சேரும், நவீன விவசாய வசதிகள் கிடைக்கும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ள குரு, சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் ராசிக்கு சுபப் பலன்களை அளிக்கும் நிலைகளில் வலம் வந்துகொண்டிருப்பதால், மனக் கவலைகள் நீங்கி, நிம்மதி பெறுவீர்கள்.குழந்தைகள் நன்றாக படிப்பதால், மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். இருப்பினும், பணப் பிரச்னை இருப்பதற்கான வாய்ப்பில்லை, திருமண மாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் அமையும், வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு, ஓரளவு திருப்திதரும் நிறுவனத்தில் பணி உத்தரவு கிடைக்கும்.
அறிவுரை: ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில், வக்கிர சனியும் ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால், உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம், மேலதிகாரிகளுடன் பழகுவதிலும், ஜாக்கிரதையாகவும், அளவோடும் இருத்தல் மிகவும் முக்கியம். சக-ஊழியர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வதும், அவசியம். நிர்வாகத்தினதைப் பற்றி, சக-ஊழியர்களுடன் தவறாகப் பேசாமலிருத்தல் உங்கள் எதிர்கால நலனிற்கு உகந்ததாக இருக்கும். சிலருக்கு, இடமாற்றம் அல்லது பணிகள் மாற்றம் ஏற்படக்கூடும். ஒப்புக் கொள்வது நல்லது.
பரிகாரம்: சனி பகவான் மற்றும் ராகுவிற்கு பரிகாரம் செய்வது, மிகவும் அவசியம். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு மற்றும் திருநாகேஸ்வரம் திருக்கோயில் தரிசனம் உதவும். கோயில்களுக்குச் செல்லும்போது, தீபத்தில் சேர்க்க நல்லெண்ணெய் அல்லது பசு நெய் எடுத்துச் செல்லத் தவறாதீர்கள்!
அனுகூல தினங்கள்:
கார்த்திகை : 1-3, 9-12, 15-17, 21-24, 27, 28.
சந்திராஷ்டம தினங்கள்:
கார்த்திகை : 6-ந்தேதி மாலை முதல், 8-ந் தேதி வரை.


