(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
18-10-2025 முதல் 16-11-2025 வரை
குடும்பம்: திருதீய குருவின் காலத்தில், ஜீவநதியும் வற்றும் எனக் கூறுகின்றன, புராதன ஜோதிட நூல்கள். வருமானம் திருப்திகரமாக இருந்தாலும், கைப் பணம் எங்்கே போயிற்று? எவ்விதம் போயிற்று என்று உங்களை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு செலவுகள் ஏற்படும். எந்தச் செலவையும் உங்களால் தவிர்க்க இயலாது. அதற்கேற்ப, தொடர்ந்து பண்டிகைகளும் வருகின்றன. அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். குடும்பப் பிரச்னைகள் கவலையளிக்கும். திருமண முயற்சிகளில், தடங்கல்களும், தாமதமும் ஏற்படும். என்றோ பட்ட கடன்கள் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான் வக்கிர கதியில் ராகுவுடன் இணைந்திருப்பதால், பணிச் சுமையும், பொறுப்புகளும் அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளின் கண்டிப்பு, வேலையில் வெறுப்பை ஏற்படுத்தும். ஆயினும், உழைப்பிற்கேற்ற ஊதியம் தருபவர் சனி பகவான்! உங்கள் உண்மையான உழைப்பிற்குப் பாராட்டுதல்களும், அங்கீகாரமும் கிடைக்கும். சிறு பதவியுயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். ஒரு சிலருக்கு இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்படக்கூடும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்: அலைச்சலும், உழைப்பும், வெளியூர்ப் பயணங்களும் அசதியை ஏற்படுத்தினாலும், லாபம் எதிர்பார்ப்பைவிட சற்று அதிகமாகவே இருப்பதால், மனத்திற்கு உற்சாகத்தையளிக்கும். புதிய முதலீடுகளில் அளவோடு ஈடுபடலாம். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதி நிறுவனங்களின் ஆதரவு தக்க தருணங்களில் உதவும்.
கலைத் துறையினர்: கலைத் துறை, சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளது! அவர் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். வருமானம் போதிய அளவு இருக்கும். கிரக நிலைகளின்படி, சேமிப்பிற்கு வாய்ப்பு உள்ளது. பற்றாக்குறை இராது. ஒருசிலருக்கு வெளிநாடு சென்று, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாத்தியக்கூறு உள்ளதையும், சுக்கிரனின் சஞ்சார நிலை குறிப்பிடுகிறது. ரசிகர்களிடையே புகழ் ஓங்கும். சங்கீத சபாக்களின் ஆதரவு உங்களைத் தேடி வரும். ஆதலால், வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.
அரசியல் துறையினர்: சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருவதால், கட்சியில் ஆதரவு பெருகும். மனத்தை வருத்தி வந்த முக்கிய பிரச்னை ஒன்று நல்லபடி தீரும். மத்திய அரசில் செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர் ஒருவரின் நட்பு தக்க தருணத்தில் கை கொடுக்கும். உயர்மட்டத் தலைவர்களுக்கு, உங்கள் மீதுள்ள நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள புதன், இம்மாதம் முழுவதும் ஓரளவு சுபபலம் பெற்று வலம் வருகிறார். பாடங்களில் மனம் உற்சாகத்துடன் ஈடுபடும். கிரகிப்புத் திறன் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், வழிகாட்டுதல்களும் உதவும். முயற்சித்தால், உயர் கல்விக்கு பண உதவி கிடைக்கும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், இம்மாதம் முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும்.
விவசாயத் துறையினர்: பூமிகாரகரான செவ்வாய், நீச்சம் பெற்று சஞ்சரிக்கும் சூரியனுடன் இணைந்திருப்பதால், விளைச்சலும், வருமானமும் எதிர்பார்க்கும் அளவிற்கு இராது. கடும் வெயிலில் உழைக்க நேரிடும். பருவமழை ஏமாற்றத்தையளிக்கும். தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. கால்நடைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால், எதிர்பாராத செலவுகளையும் சமாளிக்க வேண்டிவரும்.
பெண்மணிகள்: உஷ்ண சம்பந்தமான, உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும். நெருங்கிய உறவினர்களுடன் கருத்து வேற்றுமையும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படக்கூடும். சற்று அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும் நடந்து கொண்டால், தேவையற்ற மனஸ்தாபங்களைத் தவிர்த்துவிடலாம்.
அறிவுரை: நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல் வேண்டும். உங்கள் சொந்தப் பிரச்னைகளை பிறருடன் விவாதிக்க வேண்டாம். பிறருக்கு "ஜாமீன் கேரண்டி" கையெழுத்து போடக் கூடாது.
பரிகாரம்: அருகிலுள்ள திருக் கோயில் ஒன்றில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தீபத்தில் சிறிதளவு பசு நெய் சேர்த்து வந்தால், அளவற்ற நற்பலன்கள் கிட்டும். ஒவ்வொரு துளி நெய்யும் சக்திவாய்ந்தது. இதை அனுபவத்தில் தெரிந்துகொள்ளலாம்.பாழடைந்த கோயிலில் உழவாரப் பணிகளைச் செய்வது மிகச் சிறந்த பரிகார பலனை அள்ளித் தரவல்லது. அவ்வாறு உங்களால் முடியாவிட்டாலும். உழவாரப் பணிகள் செய்வோருக்கு ஏதாவதொரு வகையில் பொருளாகவோ அல்லது சிறு சிறு உதவிகள் செய்யலாம் உதாரணமாக, உழவாரப் பணி செய்வோருக்கு தண்ணீர் அல்லது நீர்மோர், பானகம் தருவது, உணவு அளிப்பது, சிறு பண உதவி செய்வது போன்றவற்றைச் செய்தால் மகத்தான புண்ணிய பலன்களைப் பெற்று உங்கள் சந்ததியினருக்கும் புண்ணியத்தைச் சேர்த்துவைப்பீர்கள். குறைந்தபட்சமாக, கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களைச் சாப்பிட்டுவிட்டு, இலைகளை அங்கேயே போடுவது, கைகளில் உள்ள உணவுத் துகள்களைக் கோயில் தூண்களிலேயே தடவுவது போன்றவற்றையாவது தவிர்ப்பது. இவைகள் - புண்ணியங்களைச் சேர்க்காவிட்டாலும்கூட பரவாயில்லை! பாபங்களைச் சேர்த்துவிடக் கூடாதல்லவா? கோசாலைக்குச் சென்று, கன்றுடன்கூடிய - பசுக்களுக்கு பசும் புல் அளிப்பது, கோசாலை நடத்துபவர்களுக்கு ஏதேனும் பொருளுதவி அளிப்பது, கோ சாலையில் அமர்ந்து சிறிது நேரம் ராம நாமம் ஜெபிப்பது போன்றவற்றைச் செய்தாலும் மகத்தான புண்ணிய பலன்களைப் பெறுவீர்கள் என்பது திண்ணம்.
ஏழை ஒருவருக்கு அன்னதானம் அளிப்பது.
அனுகூல தினங்கள்
ஐப்பசி : 3-5, 8, 12-14, 17-19, 23-26, 30.
சந்திராஷ்டம தினங்கள்
ஐப்பசி : 9 காலை முதல், 10, 11 இரவு வரை.


