search-icon-img
featured-img

கன்னி

Published :

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

17-9-2025 முதல் 17-10-2025 வரை

குடும்பம்: சனி பகவான், ராகுவுடன் இணைந்து அனுகூலமாகக் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். செலவினங்கள் அதிகமாக இருப்பினும், சமாளிப்பதில் பிரச்னை ஏதும் இராது. குடும்பச் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். ஜீவன ஸ்தானத்தில், குரு சஞ்சரிப்பதால், உத்தியோகப் பொறுப்புகள் காரணமாக, வௌியூர்களுக்குச் சென்றுவரும், வாய்ப்புகள் உள்ளது. ஜென்ம ராசியில் சூரியன் நிலைகொண்டுள்ளதால், அதிக உஷ்ணம் அல்லது "அலர்ஜி" காரணமாக, சரும உபாதைகள் ஏற்படக்கூடும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், இழுபறி நிலை நீடிக்கும். சுக்கிர பகவான், கேதுவுடன் சேர்ந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வெளிநாட்டில் பணியாற்றிவரும் நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகை, குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சனி பகவான், ராகுவை இருவரையும் குரு பகவான் பார்ப்பதால், பழைய கடன்கள் இருப்பின், அவை பூரணமாக அடைபடும். திருமண முயற்சிகளில் சிறிது தடங்கலும், குழப்பமும் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் அமையும்.

உத்தியோகம்: "10-ல் குரு, பதவியைக் கெடுப்பார்...!" என்றொரு மூதுரை, ஜோதிடக் கலையில் உள்ளது. அதாவது, குரு பகவான், ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது, உத்தியோகஸ்தர்கள், தங்கள் பொறுப்புகளிலும் மேலதிகாரிகளுடன் பழகுவதிலும், சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதேயாகும்!! அன்றாடப் பணிகளில், கவனமாக இருத்தல் அவசியம். புதிய வேலைக்கு முயற்சிக்கும் கன்னி ராசி அன்பர்களுக்கு, வேலை கிடைக்கும் ஆனால், அதில் திருப்தியிராது. சிலருக்கு, விருப்பத்திற்கு மாறான இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் ஏற்படும். இம்மாதம் முழுவதும் அந்நிய நாடுகளில் பணியாற்றிவரும் கன்னி ராசி அன்பர்கள், தங்கள் பொறுப்புகளிலும், மேலதிகாரிகளுடன் பழகுவதிலும் அதிஜாக்கிரதையாக இருப்பது, மிகவும் அவசியம்.

தொழில், வியாபாரம்: தொழில் துறை அன்பர்களுக்கு, உற்பத்திக்கு அவசியமான மூலப் பொருட்களின் விலை திடீரென்று பல மடங்கு உயர்வதால், கவலை ஏற்படும். சந்தை நிலவரத்தைக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்து, அதற்கேற்ப உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது, அவசியமாகும். சில தருணங்களில் கூட்டாளிகளினால், பிரச்னைகள் ஏற்படலாம். விற்பனை விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப்போடுவது அவசியம் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. நிதி நிறுவனங்களினாலும், சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, கவலையை அளிக்கும். கூடிய வரையில், முன்பணமில்லாமல், சரக்குகள் அனுப்புவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.

கலைத்துறையினர்: கலைத்துறைக்குச் சம்பந்தப்பட்ட கிரகங்களின் சஞ்சார நிலைகள் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், இத்துறை அன்பர்களுக்கு, வாய்ப்புகள் அதிகரிக்கும், வருமானம் உயரும். புதிதாகக் கலைத் துறையில் கால்பதிக்க விருப்பமிருப்பின், உங்களுக்குத் துணை இருக்கிறார், சுக்கிர பகவான்! ஆதலால், முயற்சிக்கலாம். திரைப்படத் தயாரிப்பாளர்கள் அளவோடு முதலீடு செய்து, புதிய படங்களை எடுக்கலாம். அவை மகத்தான வெற்றிபெற்று, லாபத்தைப் பெற்றுத் தரும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்குத் தொடர்புள்ள கிரகங்களில் சுக்கிரன் ஒருவர் மட்டுமே உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கிறார், இந்தப் புரட்டாசி மாதத்தில்! பேச்சில், நிதானம் வேண்டும். உணர்ச்சிவயப்பட்டு, தரக் குறைவாகப் பேசி, அதன்காரணமாக, பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. எத்தகைய தருணங்களில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே எடுத்துக் காட்டி, வழிநடத்தும் உன்னதக் கலை என ஜோதிடத்தைப் புகழ்கிறது, சாணக்கியரின் "அர்த்த சாஸ்திரம்".

மாணவ - மாணவியர்: கிரக நிலைகள் உங்களுக்கு அனுகூலமாக நிலைகொண்டுள்ளனர், இம்மாதத்தில்! பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். குறிப்பாக, தொழிற் கல்விகளில் பயின்றுவரும் மாணவ - மாணவியருக்கு, சிறந்த முன்னேற்றத்தை இம்மாதத்தில் எதிர்பார்க்கலாம். உயர் கல்விக்கு, உதவிப் பணம் (ஸ்காலர்ஷிப்) பலருக்குக் கிடைக்கும். அன்னதானத்திற்கு அடுத்தபடியாக, உயர்ந்து நிற்கிறது, கல்வி தானம்! ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது, பரம புண்ணியமாகும். பல பிறவிகளில் நமக்கு இப்புண்ணியப் பலன் நம்மைத் தேடிவரும்.

விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், உழைப்பு கடினமாக இருப்பினும், விளைச்சலும், வருமானமும் ஓரளவு திருப்திகரமாகவே இருக்கும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. தண்ணீர்ப் பற்றாக்குறை இராது. போதிய அளவிற்குக் கிடைக்கும். நிதி நிறுவனங்கள் ஒத்துழைக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். நிதி நிலைமை சீரடையும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்குத் தொடர்புடைய கிரகங்கள் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், இம்மாதம் நன்மைகளே அதிகமாக இருக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள், தங்கள் அன்றாடப் பணிகளில் சற்று அதிகக் கவனமாக இருந்தால் போதும். பிற ஊழியர்களின் சொந்தப் பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்பது, உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை தரும்.

அறிவுரை: நண்பர்கள், சக-ஊழியர்கள் ஆகியோருடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது அவசியம்.

பரிகாரம்: அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் வியாழக்கிழமைதோறும், பிரதோஷகாலமாகிய மாலை நேரத்தில், தீபத்தில் சிறிது பசு நெய் அல்லது எள் எண்ணெய் சேர்த்து வருவது மிகச் சிறந்த பரிகாரமாகும். ஒவ்வொரு துளிக்கும், அளவற்ற தோஷ நிவாரண சக்தி உள்ளது.

அனுகூல தினங்கள்

புரட்டாசி : 1-3, 6-8, 13-16, 20, 25, 26, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்

புரட்டாசி : 21 பின்னிரவு முதல், 24 காலை வரை.