search-icon-img
featured-img

கன்னி

Published :

(17-11-2025 முதல் 15-12-2025 வரை)

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: லாப ஸ்தானத்தில் குரு பகவான், அவரது உச்சகதியில் சஞ்சரிப்பது, நல்ல பண வரவைக் குறிக்கிறது. குடும்பச் சூழ்நிலை மன நிறைவையளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளான நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறத்தல் போன்றவை நிகழும். அவற்றின் காரணமாக, குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். நிரந்தர நோய்களுக்கு, சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்குக்கூட, உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நீம்மதி பெற முடியும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சிக்கும் கன்னி ராசி அன்பர்களுக்கு, வெற்றி உறுதி!! தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சொந்த வீடு அமையும் பாக்கியமும் உள்ளது.

உத்தியோகம்: உத்தியோகத்திற்கு அதிகாரம் படைத்த சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து கும்ப ராசியில் அனுகூலமாக சஞ்சரிப்பதால், வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில் பணி உத்தரவு கிடைக்கப் பெறுவர். தற்காலிகப் பணிகளில் உள்ளவர்களுக்கு, பணி நிரந்தரம் ஆகும். வெளிநாடுகளில் பணியாற்ற ஆர்வமிருப்பின், அந்த ஆசை நிறைவேறும். பதவி மாற்றம் மற்றும் நிறுவன மாற்றத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு, வெற்றி கிட்டும்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையினருக்கு, மிகவும் அனுகூலமான மாதமிது. புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கும், கையிலுள்ள வியாபாரத்தை அபிவிருத்தி செய்துகொள்வதற்கும் கிரக நிலைகள் அனுகூலமாக சஞ்சரிப்பதால், விஸ்தரிப்புத் திட்டங்களை இம்மாதத்தில் ஆரம்பிக்கலாம். நிதி நிறுவனங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிட்டும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொழில் கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறும் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. புதிய முதலீடுகளில், திட்டமிட்டு இறங்கலாம். புதிய கிளை நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கும் ஏற்ற மாதம் இந்தக் கார்த்திகை!

கலைத் துறையினர்: லைச்சலும், உழைப்பும் சற்று அதிகமாகவே இருப்பினும், நல்ல வாய்ப்புகள் எளிதில் கிட்டும். அதன் காரணமாக, வருமானம் உயரும். உங்கள் பொருளாதார நிலையை சரிசெய்துகொள்ள ஏற்ற மாதம் இது!! தற்போது நடைபெறும் தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், வெளிநாடு சென்று-வரும் வாய்ப்பும் உருவாகும். செல்வாக்கு அதிகரிக்கும். கர்நாடக சங்கீத வித்வான்கள், பரதநாட்டியக் கலைஞர்கள், ஆன்மிக உபன்யாசகர்கள் ஆகியோருக்கு அதிர்ஷ்டகரமான மாதமாகும். ஒருசிலருக்கு, வெளிநாட்டில் நிகழும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் கிட்டும். வருமானமும் உயரும். செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகங்களில், சுக்கிரனும், சனி பகவானும் பிரதானமானவர்கள்! இவ்விரு கிரகங்களும், தற்போது அரசியல் துறை அன்பர்களுக்கு, மிகவும் சாதகமாக வலம் வருகின்றனர். கட்சியில், ஆதரவு பெருகும். உயர்மட்டத் தலைவர்களுடன் நேரிடைத் தொடர்பு ஏற்படும். அதனால், எதிர்கால நலனிற்குக் கைகொடுக்கும். ஒருசிலருக்கு, கட்சிமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள கிரகம் புதனாவார்! ஆதலால்தான், அவரை "வித்யா காரகர்" எனப் போற்றுகிறது ஜோதிடக் கலை! எவரது ஜனனகால ஜாதகத்தில், புதன் பலத்துடன் இருக்கிறாரோ, அத்தகைய அன்பர்களுக்கு, கல்வியே செல்வமாகும். இதனை மகாகவி காளிதாஸரின், ஜோதிட நூலாகிய "உத்தரகாலாம்ருதம்" எனும் நூல் விவரித்துள்ளது. "நோபல் பரிசு" பெற்ற பல அறிஞர்களின் ஜாதகங்களில், புதனும் சந்திரனும் உச்சகதியில் இருப்பதைக் காணமுடியும்.

விவசாயத் துறையினர்: இம்மாதம் முழுவதும் செவ்வாய், பூரண பலம் பெற்றுத் திகழ்வதால், பயிர்கள் செழித்து வளரும். விவசாயத்திற்கு அத்தியாவசியமான தண்ணீர் வசதியும், மற்ற வசதிகளும் குறைவின்றிக் கிடைக்கும். புதிய கால்நடைகள் சேரும். அவற்றின் பராமரிப்பில் பிரச்னை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை - கிரக நிலைகளின்படி!

பெண்மணிகள்: பெரும்பான்மையான கிரகங்கள் அனைத்தும், உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிப்பதால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வக்கிர சனி பகவானும், ராகுவும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, அலுவலகச் சூழ்நிலை திருப்திகரமாகவே இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும் அன்றாடப் பணிகளில், ஆர்வத்தை மேம்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் கன்னி ராசி அன்பர்களுக்கு வெற்றி கிட்டும். விவாகத்தை எதிர்நோக்கியிருக்கும் கன்னியருக்கு, நல்ல வரன் அமைந்து, திருமணமும் நடைபெறும். ஏற்கனவே திருமணமாகி, கருத்தரித்துள்ள பெண்மணிகளுக்கு சுக பிரசவம் நிச்சயம்! வயோகத்தினால் வருந்தும் பெண்மணிகளுக்கு, மூட்டுவலி, கை - கால் குடைச்சல், முதுகு வலி ஆகியவை வெகுவாகக் குறையும். மருத்துவச் சிகிச்சை நல்ல பலனையளிக்கும்.

அறிவுரை: "கொடுப்பதில், சனி பகவானும் ராகுவும் ஈடிணையற்றவர்கள்". அதே போன்று, "கெடுப்பதிலும், தன்னிகரற்றவர்கள்...!" அவர்கள் இருவரும் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால், அவர்கள் கொடுப்பதை எதிர்காலத்திற்கென்று, சிறிது சேமித்து வைத்துக் கொள்ளவும். சாதாரண எறும்புகள் கூட, மழைக் காலத்திற்கென்று இன்றே சேமித்து வைத்துக் கொள்கின்றன!! ஆகவேதான், இந்தக் கருத்தை ஊன்றிச் சொல்கிறோம்.

பரிகாரம்: வைதீஸ்வரர் கோயில் தரிசனம், செவ்வாயினால் ஏற்படும் தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும். சென்று - வர இயலாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில், ஓர் ஏழைக்கோ அல்லது ஒரு பசுவிற்கோ உணவளித்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.

2. தந்வந்த்ரி சநந்தியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் தீபத்தில் சிறிது நெய் சேர்த்துவந்தாலும், உடலுபாதைகள் கணிசமாகக் குறையும்.

3.பரிகார ரத்தினம் எனப் போற்றிக் கொண்டாடப்படும் நூலிலும், மத் சுந்தரகாண்டம் தினமும் இரு சர்க்கங்களாவது பாராயணம் செய்வது, நல்ல பலனையளிக்கும் என விவரிக்கப்பட்டுள்ளது. நமக்குத் தேவை பக்தியுடன் கூடிய நம்பிக்கை மட்டுமே!

4. அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலை நேரத்தில், தீபத்தில் சிறிது பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துவந்தாலும்கூட போதும். நல்ல பலன்கள் கிடைக்கும். தீபத்தில் சேர்க்கும் ஒவ்வொரு துளி நெய்க்கும் அல்லது எண்ணெய்க்கும் அளவற்ற பரிகார சக்தி உள்ளதை மிகப் பழமையான ஜோதிடக் கிரந்தங்கள் விளக்கியுள்ளன.

அனுகூல தினங்கள்:

கார்த்திகை : 4-7, 11-14, 18-20, 25-27.

சந்திராஷ்டம தினங்கள்:

கார்த்திகை : 15-ந் தேதி இரவு முதல், 17-ந்தேதி இரவு வரை.