(30.10.2025 முதல் 5.11.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு 5ல் இருந்த சுக்கிரன், 3ம் தேதி முதல் ஆறாம் இடத்தில் வந்து அமர்கின்றார். சத்ரு ஸ்தானம் என்று நினைக்க வேண்டாம். அது அவருடைய சொந்த ராசி என்பதால், எந்தத் தீமையையும் செய்யமாட்டார். ஆறாம் இடத்தில், சூரியனும் புதனும் இணைந்து இருப்பதால், அரசு உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு. மனக்கவலைகள் நீங்கும். புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் யோகமும் உண்டு. புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். அதன் மூலம் பதவி உயர்வும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். சனி வக்ரம் பெற்று இருப்பதால், தொழில் வளர்ச்சி உண்டு. லாபம் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும்.
கவனம் தேவை: ஏழாம் இடத்தில் விரையாதிபதியான செவ்வாய் அமர்ந்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நண்பர்களுக்காகவும் சகோதர உறவுகளுக்காகவும் கணவன் அல்லது மனைவிக்காகவும் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். பொதுவாகவே வருமானம் ஒரு வழியில் வந்தால், செலவு இன்னொரு வழியில் அதிகரித்து சற்று கவலையைத் தரும். கடன் பிரச்னையில் கசப்பான அனுபவம் ஏற்படும்.
பரிகாரம்: சிவபெருமானை பிரதோஷ காலத்தில் வழிபடுங்கள். சீர் மிகு வாழ்க்கை கிடைக்கும்.


