(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: ஜென்மச் சனி தோஷத்திலிருந்து விடுபட்டுள்ள நிலையில், உங்களுக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பது, பல நன்மைகள் காத்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. திரிதீய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள ராகுவினாலும், யோக பலன்களே கிட்டும்!! அர்த்தாஷ்டகத்தில் நிலைகொண்டுள்ள குரு பகவான், மே 1-ம் தேதி ரிஷபத்திற்கு மாறுவதும், யோக பலன்களையே அளிக்கவுள்ள கிரக மாறுதல்களாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பிறர் உதவியை நாட வேண்டிய அவசியம் இராது! குடும்பத்தில், பல சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதால், சுப விரயம் ஏற்படும். ஆயினும், பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு, சாத்தியக்கூறு இல்லை. திருமண முயற்சிகளுக்கு மிகவும் ஏற்ற புத்தாண்டு இது!! நல்ல வரன் அமைந்து, மன நிறைவான இல்லற வாழ்க்கை அமையும். ராகுவின் நிலையினால், முயற்சிகள் அனைத்தும் பயனளிக்கும். பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கேதுவினால், ஆன்மிகக் காரியங்களில் பணம் செலவழியும். பலருக்கு, புத்திர பாக்கியம் கிட்டும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகம்: ஜென்மச் சனி விலகியதே, மிக முக்கிய வரப் பிரசாதமாகும், உங்களுக்கு!! வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்டுவந்த பல பிரச்னைகள் நல்லபடி தீரும். காரணம் எதுவும் இல்லாமல், உங்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டுவந்த ஊதிய உயர்வு, பதவியுயர்வு, சலுகைகள் ஆகியவை இனி கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்கள், அவரவரது பணிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள். புதிய வேலைக்கு முயற்சிக்கும், மகர ராசியினருக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு கிரக நிலைகள் மிகவும் சாதகமாக அமைந்துள்ளன.
தொழில், வியாபாரம்: உங்கள் தொழிலை விஸ்தரிப்பதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், புதிய கிளைகளை ஆரம்பிப்பதற்கும் ஏற்ற புத்தாண்டு இது! இம்முயற்சிகளுக்குத் தேவையான நிதியுதவிகள் எளிதில் கிடைக்கும். தேச உடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் ஆதரவு எளிதில் கிட்டும். வெளிநாடுகளிலிருந்து, தொழில் நிபுணர்கள், திட்டங்கள் வகுப்பதில் உதவி செய்வார்கள். இது ஓர் அரிய சந்தர்ப்பம் – கிரக நிலைகளின்படி! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! துணிந்து, புதிய முதலீடுகளில் இறங்கலாம். வியாபாரிகளுக்கும், சந்தை நிலவரம் சாதகமாக உள்ளது, இந்த ஆண்டு முழுவதும்! ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலுள்ள புதிய நிறுவனங்களிலிருந்து ஆர்டர்கள் கிடைக்கும். லாபம் பலமடங்கு உயரும்.
கலைத்துறையினர்: உங்களுக்கு மட்டும் கிரகங்கள் நன்மைகளை மறுக்கவாப் போகின்றனர்? பல புதிய வாய்ப்புகள் உங்கள் வருமானத்தை உயர்த்தும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறும் உள்ளது. அதன் காரணமாக, வருமானம் அதிகரிக்கும். ெசல்வாக்கு உயரும். பரதநாட்டியக் கலைஞர்கள், புதிய பரதநாட்டியக் கலைப் பள்ளிகள் திறப்பதற்கு, வாய்ப்பும் வசதியும் கிட்டும். இவற்றின் மூலமாக, வருமானமும் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும்.
அரசியல் துறையினர்: பெரும்பான்மையான கிரகங்கள், உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றன. உங்கள் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளது, இப்புத்தாண்டு! பல ஆண்டுகளாக, ஒரே கட்சியில் பணியாற்றிவந்த நீங்கள், அக்கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சி ஒன்றில் சேர இருப்பதை, சுக்கிரன் மற்றும் ராகுவின் சஞ்சார நிலைகள் தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்காட்டுகின்றன. கிரக நிலைகளின்படி, இம்முடிவு, சரியான முடிவுதான்!
மாணவ – மாணவியர்: வித்யா காரகரும், வித்யா ஸ்தானமும், சனி பகவானால் ஏற்பட்டிருந்த தோஷத்திலிருந்து விடுபட்டுவிட்டதால், படிப்பில் மிகச் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஒருசிலர், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பிரசித்திப் பெற்ற பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பெற இடமும், சலுகைகளும் கிட்டும். நிதியுதவியும் எளிதில் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள், கிரகங்கள் அளிக்கும் இந்த அரிய வாய்ப்பினை!
விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாய், பிப்ரவரி 4-ம் தேதியிலிருந்து, சுப பலம் பெறுவதால், விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாக இருக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். வருமானம் சற்று உயர்வதால், பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெறலாம். விவசாயப் பெருமக்களுக்கு, மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடிய புத்தாண்டு இது என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்மணிகள்: ஏழரைச் சனி நீடிப்பதால், அவருக்கு மட்டும் பரிகாரம் செய்வதும், தொடர்ந்து தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தலும் அவசியம்.
அறிவுரை: தேவையில்லாமல் வெளியே செல்வது, வீண் கவலைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது உதவும்.
பரிகாரம்: தினமும், காலையில் மத் சுந்தர காண்டமும், மாலையில் அபிராமி அந்தாதியும் படித்து வந்தால் போதும். இவ்விரு பரிகாரங்களும் உடனுக்குடன் பலனளிப்பவை. அனுபவத்தில் காணலாம்.