தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குடும்பம்: ராகு, சுக ஸ்தானத்திற்கும், கேது, ஜீவன ஸ்தானத்திற்கும் மாறியிருக்கிறார்கள். கோள்சார விதிகளின்படி, சுக ஸ்தானம் என்பது ராசிக்கு அர்த்தாஷ்டக வீடாகும். அங்கு ராகு சஞ்சரிக்கும் காலத்தில் சுகம் கெடும் அல்லது குறையும் எனக் கூறுகிறது, ஜோதிடக் கலை! ஆயினும், தற்போது ராகு மாறியுள்ள ராசி, குரு பகவானின் ராசியாகும். மிகப் புராதன ஜோதிட நூல்கள் அனைத்தும், ராகு மற்றும் கேது – குரு பகவானின் ஆட்சி வீடுகளான தனுசு மற்றும் மீன ராசியில் சஞ்சரிக்கும்போது, தங்களது பலத்தை ஓரளவு இழக்கின்றனர் எனக் கூறுகின்றன. ஆதலால், ராகுவினால் ஏற்படும் பிரச்னைகள் கடுமையாக இராது. ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. கூடிய வரையில், வெளியூர்ப் பயணங்களையும், குறிப்பாக இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் 10.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை ராகுவிற்கு பலம் அதிகம் எனவும், பல விபத்துகள் அந்த நேரத்தில் ஏற்படுவதற்கும் முக்கிய காரணம். அந்நேரத்தில், ராகுவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதேயாகும் எனப் புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. “ஜோதிடம்” என்பது வானியலை அடிப்படையாகக் கொண்ட, விஞ்ஞானப்பூர்வமான நுண்ணிய கலையாகும். “நமது அன்றாட வாழ்க்கைக்கு துணையிருக்கும் நண்பன் அது…” எனக் கூறியுள்ளார் அரசியல் மேதையும், தனது அரசியல் வெற்றிக்காக ஜோதிடத்தைப் பயன்படுத்திக் கொண்டவருமான சாணக்கியர்! அர்த்தாஷ்டக ராகு கூடா நட்பினை ஏற்படுத்தி, அதனால் பண விரயத்தையும், மன சபலங்களையும் உண்டாக்குவார். லாட்டரி, இணையதளச் சூதாட்டம், பிறரை நம்பி கடன் கொடுத்தல், தரகர்களை நம்பி சொத்து வாங்குதல் ஆகியவை மூலம் பணப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். ராகுவின் மீன ராசி சஞ்சார காலத்தில் கூடியவரையில் பெரிய அளவில் பண முதலீடுகளில் ஈடுபடவேண்டாம் என ராகுவின் நிலை எச்சரிக்கை செய்கிறது. உறவினர்களிடையே ஒற்றுமைக் குறைவையும் ஏற்படுத்துவார்! அர்த்தாஷ்டக ராசியான மீனத்தில் சஞ்சரிக்கும்போது அதனால் மனத்தில் கவலையும், “டென்ஷனும்” ஏற்படும். திருமண முயற்சிகளில் வரன் பற்றிய தவறான செய்திகளால் மனத்தில் குழப்பம் ஏற்படும். வரவிற்கு மிஞ்சிய செலவுகளைச் சமாளிக்க நேரிடும்.

உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில் கேது மாறியிருப்பது, வேலை பார்க்கும் இடத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும். சிலருக்கு, இடமாற்றம் அல்லது பொறுப்புகளில் மாற்றம் ஏற்படக்கூடும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் தனுர் ராசியினர், நிறுவன மாற்றத்திற்குத் தங்களை தயார் செய்துகொள்வது நல்லது! கேது, கன்னி ராசியில் உள்ளவரை, தனது அன்றாடக் கடமைகளில் கவனமாக இருத்தல் அவசியம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பது கடினம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

தொழில், வியாபாரம்: ராகு, கேது இருவருமே உதவிகரமாக இல்லை! நியாயமற்ற போட்டிகள் அதிகரிக்கும்; லாபம் குறையும். கூட்டாளிகள், கருத்துவேற்றுமை காரணமாக, விலகிவிடுவார்கள். புதிய முதலீடுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சில்லறை வியாபாரிகளுக்கு, நிதி நெருக்கடி கவலையளிக்கும், வங்கிக் கடனுதவி கிடைப்பதிலும் தடங்கல்களை ஏற்படுத்துவார், கேது! பரிகாரம் பலனளிக்கும்.

கலைத்துறையினர்: நீங்கள் பொறுமையுடன் இருக்கவேண்டிய நேரம் இது! பல காரணங்களினால், எதிர்பார்த்திருந்த வாய்ப்பு கள் ஏமாற்றத்தை அளிக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, தாங்கள் எடுத்த திரைப் படம் தோல்வியுறும். கடுமையான நிதிநெருக்கடியை ஏற்படுத்துவார், கேது பகவான்!

அரசியல் துறையினர்: அளவிற்கு மீறிய உற்சாகத்தினாலும், கட்சியில் மேலுள்ள பற்றுதலாலும், பேச்சில் அஜாக்கிரதையாக இருப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதை ராகு – கேது ஆகியோரின் சஞ்சாரநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ராகுவின் அர்த்தாஷ்டக தோஷத்தினால், வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் உள்ளது.

விவசாயத் துறையினர்: ராகுவின் சஞ்சார நிலையினால், அடிக்கடி அசதி, சோர்வு, சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படுவதால், வயல் பணிகளில் ஆயாசமும், அலுப்பும் ஏற்படக்கூடும். விளைச்சல் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. கேதுவினால், அண்டை நிலத்தாரோடு வரப்புப் பிரச்னை, வாய்க்கால் தகராறுகளினால் பகை ஏற்படும். தவிர்க்க முயற்சிக்கவும்.

மாணவ, மாணவியர்: ராகு மாறியிருப்பது, குருவின் ஆட்சிவீடாக இருப்பதாலும், கேது நிலைகொண்டிருக்கும் கன்னி, கல்விக்கு அதிபதியான புதனின் ஆட்சிவீடாக அமைந்திருப்பதாலும், கல்வி முன்னேற்றம் இந்த ராகு – கேது ராசி மாற்றத்தினால் எள்ளளவும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. இருப்பினும், ராகு இருப்பது உங்கள் சுக ஸ்தானமாக இருப்பதால், கல்விக் கட்டணம் செலுத்துவதிலும், விடுதிக்கான செலவுகளை ஏற்பதிலும், சிரமம் ஏற்படக்கூடும். மற்றபடி, கல்வி முன்னேற்றம் நீடிக்கும் – எவ்வித பாதிப்புமின்றி!!

பெண்மணிகள்: குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். சுக ஸ்தானத்தில் ராகு இருப்பதால், குழந்தைகளின் உடல் நலன், படிப்பு ஆகியவை பற்றி மன நிம்மதி குறையும். கணவர் – மனைவியரிடையே தேவையற்ற வாக்கு வாதமும், பரஸ்பர அந்நியோன்யக் குறைவும் உண்டாகும். விவாக வயதிலுள்ள வனிதையருக்கு மனதிற்கு திருப்தியளிக்காத வரன் அமையும்.

அறிவுரை: வருமானத்திற்குள் குடும்பத்தை நிர்வகிக்கவும். சிக்கனம் தேவை இக்கணம் என்பதை உணர்ந்து செயல்பட்டால், பணத் தேவைக்காக அடுத்தவரிடம் செல்லா நிலை உருவாகும்; உங்கள் நிலையும் தாழாது! உறவினர்களின் சிறு, சிறு தவறுகளைப் பெரிதுபடுத்தாமல், பொறுமையுடன், விட்டுக் கொடுத்தும் நடந்துகொள்ளுங்கள். உத்தியோகத் துறைனர், தானுண்டு; தன் வேலையுண்டு என்று அலுவலகப் பிரச்னைகளிலிருந்து விலகி இருப்பது மிக, மிக அவசியம்.

பரிகாரம்: வெள்ளிக் கிழமைகளிலும், செவ்வாய்க் கிழமைகளிலும், பாம்பு புற்றிற்கு பசும்பால் தெளிப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.கர்நாடகாவில் உள்ள நாகமங்களா க்ஷேத்திர திவ்ய தரிசனம் உயர்ந்த பரிகாரமாகும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us