(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: சித்திரை 17-ம் (30-4-2024) தேதி வரை ஜென்ம ராசியில், நிலைகொண்டிருந்த குரு பகவான், 18-ம் (1-5-2024) தேதியன்று, ஜென்ம ராசியை விட்டு, தனம், குடும்பம், வாக்கு ஆகியவற்றைக் குறிக்கும் ரிஷப ராசிக்கு, மாறுவது மிக நல்ல கிரக மாறுதல் ஆகும். மேலும், ரிஷபத்திலிருந்து, உங்கள் ராசிக்கு, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும் ஆயுள் ஸ்தானத்தையும், ஜீவன ஸ்தானத்தையும் தனது சுபப் பார்வையினால், தூய்மைப்படுத்துகிறார். குடும்பத்தில், பணக் கஷ்டம் நீங்கும். சுபிட்சம் பெருகும். வருமானம் வரும் ஒரு வருட காலத்தில், படிப்படியாக உயர்வதை அனுபவத்தில் காண முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற வழி பிறக்கும். வேலையில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த வேலை அமையும். உத்தியோகம் காரணமாகவோ அல்லது குடும்பப் பிரச்னைகள் காரணமாகவோ அடிக்கடி ெவளியூர்களுக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும்.
உத்தியோகம்: உத்தியோகத்திற்கு அதிகாரம் படைத்த சனி பகவான், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய கும்ப ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், குரு பகவான் தன ஸ்தானத்திற்கு மாறியுள்ளது, மிக நல்ல எதிர்காலத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஜீவன ஸ்தானத்திற்கு குருவின் சுபப் பார்வையும் கிடைப்பது, வரும் ஒருவருட காலத்திற்கு உத்தியோகத்தில் பல நன்மைகள் ஏற்டவிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலதிகாரிகள் உங்களை மரியாதையுடன் நடத்துவார்கள். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எவ்வித கவலையுமில்லாமல், பணிகளில் உங்கள் கவனத்தை முழுமையாகச் செலுத்த முடியும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் மேஷ ராசியினருக்கு, புதிய சலுகைகளும், ஊதிய உயர்வும் கிட்டும். இதனை அனுபவத்தில் பார்க்கலாம். ெவளிநாடு சென்று பணியாற்றும் விருப்பமிருப்பின், அது நிறைவேறும். புதிதாக வேலைக்கு முயற்சித்துவரும் மேஷ ராசியினருக்கு, எளிதில் வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்: தொழில் ஸ்தானத்தை குரு பார்வை ஏற்படுவதால், வரும் ஒரு வருட காலத்திற்கு, வியாபார அபிவிருத்தியும், லாபமும் கிட்டும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், உதவியும் நிர்வாக மேன்மைக்கு ஆதரவாக நிற்கும். புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு ஏற்ற ஆண்டு இது! ஏனெனில், வரும் ஒருவருடக் காலத்திற்கு, குரு பகவான் தனஸ்தானத்தில் நிலைகொண்டிருக்கிறார். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து, புதிய ஆர்டர்கள் வர ஆரம்பிக்கும். வியாபாரம் சம்பந்தமாக பலர் வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும், அதன் காரணமாக, புதிய ெதாடர்புகளும், வியாபார அபிவிருத்திக்கு உதவிகரமாகவும் அமையும். புதிய முதலீடுகளில் துணிந்து இறங்கலாம்! ஒருசிலருக்கு, சொந்தக் கட்டடத்திற்கு – விற்பனை நிலையத்திற்கு மாற்றும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன.
கலைத் துறையினர்: குடும்பத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த பண நெருக்கடி, குரு பகவானின் சஞ்சார பலத்தினால், இனி பப்படியாக நீங்கிவிடும். புதிய வாய்ப்புகள் தக்க தருணத்தில் கைகொடுக்கும். செல்வாக்கு உயரும். சிலருக்கு, அரசாங்க விருதுகள் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. சிலருக்கு, வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் அதன்மூலம் வருமானமும் கிடைக்கும் என்பதை குரு பகவானின் சுபப் பார்வை ஜீவன ஸ்தானத்திற்குக் கிடைப்பது, எடுத்துக்காட்டுகிறது. திரைப்படத் துறையினருக்கு, நல்ல வருமானத்தையும், புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தருவார், குரு பகவான்!!
அரசியல்துறையினர்: தொடர்ந்து பல மாதங்களாக ஏற்பட்டுவந்த மனக் குழப்பம் குருவின் கருணையினால் நீங்கும். மேல்மட்டத் தலைவர்களுக்கு, உங்கள் மீது இருந்த சந்தேகம் இனி நீங்கும். ஒருசிலருக்கு, கட்சி மாற்றத்திற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
மாணவ – மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களில், குருவும் ஒன்று! கிரகிப்புத் திறன், நினைவாற்றல் ஆகியவை அதிகரிக்கும். கல்வித் துறைக்கும், குரு பகவானுக்கும், நெருங்கிய தொடர்பு உண்டு. நல்ல நண்பர்களுடன் சேர்க்கை, திறமைவாய்ந்த ஆசிரியப் பெருமக்கள், மாணவ – மாணவியரின் மீது அன்பும், அக்கறையும் கொண்ட ஆசிரியர்கள் ஆகியோர் கிடைப்பதற்கு, முற்பிறவியில் மகத்தான புண்ணியம் செய்திருக்க வேண்டும். சென்ற காலங்களில், மாணவ – மாணவியரைத் தங்கள் குழந்தைகளாகவேக் கருதி, கல்வி போதித்து வந்தனர், ஆசிரியர்கள்!! அத்தகைய ஆசிரியர்கள் கிடைப்பதற்கு வழிவகுத்தருள்வார், குரு பகவான் இப்போது! ஆகவே, மாணவ – மாணவியரும் படிப்பில் சிறந்த முன்னேற்றத்தை அடைவார்கள்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு நேரிடையாக ஆதிபத்யம் கொண்டவர் செவ்வாய்! இருப்பினும், குரு – செவ்வாய் இணைந்து அளிக்கும் யோகத்திற்கு குரு – மங்கள யோகம் என்று பெயர். செவ்வாய் மற்றும் குரு ஆகியோர் நட்புக் கிரகங்களாவர். ஆதலால். வரும் ஓராண்டில் நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். சூரியன் அனுகூலமாக இருப்பதால், அரசாங்க உதவியும், சலுகைகளும் தக்க தருணத்தில் கிடைக்கும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நன்மைகளுக்கு, பொறுப்பேற்றுள்ள கிரகங்கள் இரண்டு!! அவைகள் முறையே, குருவும், சுக்கிரனுமாவர். மனைவியைப் புரிந்துகொண்டு, அனுசரணையாக வைத்துக் கொள்ளும் அன்பான கணவர் கிடைக்கச் செய்வார், குரு! ஏராளமான பெற்றோர்கள், தங்கள் பெண்களின் ஜாதகங்களில் குருபலன் வந்துவிட்டதா? -என்று கேட்பது, இக்காலத்தில் அதிகரித்துவருவது அனைவரும் அறிந்ததே!! இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம், திருமண வாழ்க்கையை நிர்ணயிப்பது, பெரும்பங்கு குரு பகவானுக்கே உள்ளது!
அறிவுரை: கொடுப்பதில், சற்று தாராளமாகவே அளித்தருள்பவர், குரு பகவான்! வரும் ஒரு வருட காலத்தில், பண வசதி குறையாமல் பார்த்துக்கொள்வார். அதே தருணத்தில், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளையும், சுபச் செலவுகளையும் ஏற்படுத்துவார். ஆகவே, சிக்கனமாக இருந்து, எதிர்காலத்திற்கென்று சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில், மாலையில் தவறாமல், நெய் தீபம் ஏற்றிவைத்து குரு பகவானை பூஜித்து வரவும்.