(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம்: உங்கள் ராசிக்கு நாயகனாகிய, குரு பகவான், ரிஷப ராசியில் அமர்ந்து, உங்கள் ராசிக்குக் களத்திர ஸ்தானமாகிய (மனைவியைக் குறிக்கும் ராசி) கன்னியையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும், தன் சுபப் பார்வையினால், தோஷங்கள் அனைத்தையும் அகற்றி, பலப்படுத்துகிறார். திருதீய குருவினால், மருத்துவ செலவுகளும், கற்பனையான கவலைகளும், உறவினர்களுடன் கருத்துவேற்றுமையும் ஏற்படும். சிறு காரியங்களுக்குக்கூட, அதிக முயற்சியும், அலைச்சலும் ஏற்படும். திருமண முயற்சிகளில் வீண் செலவுகளும், ஏமாற்றமும் கவலையை அளிக்கும். ஏதாவதொரு கவலை மனத்தை அரித்துக் கொண்டே இருக்கும். பரிகாரம் மிக, மிக அவசியம். கணவர் – மனைவியரிடையே வாக்குவாதமும், அபிப்ராய பேதமும் ஏற்படுவது மனநிம்மதியைப் பாதிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது.
உத்தியோகம்: ஏழரைச் சனியின் பிடியில் உள்ள உங்களுக்கு, உங்கள் ராசி நாதன் குரு பகவான், ரிஷப ராசியில் சஞ்சரிப்பது நன்மை தராது. உங்கள் ராசிக்கு நாயகனாக இருப்பதால், பிரச்னை எதுவும் கடுமையாக இராது. வேலை பார்க்குமிடத்தில், சக ஊழியர்களால், பிரச்னைகள் ஏற்பட்டு, மனத்தில் கவலை உண்டாகும். மேலதிகாரிகளினால், சிரமங்கள் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் மீன ராசி அன்பர்களுக்கு, தடங்கல்கள் ஏற்படும். வேலை கிடைத்தாலும், அதில் திருப்தியிராது.
தொழில், வியாபாரம்: திருதீய குரு பகவான், அன்றாட வர்த்தகத்தில் பல சிரமங்களை ஏற்படுத்துவார். இத்தருணத்தில், ஜென்ம ராசியில் ராகு அமர்ந்திருப்பதும், எழரைச் சனியின் தோஷமும் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியை அளவோடு வைத்துக்கொள்வது நல்லது. கடனுக்கு, சப்ளை செய்வது, பணப் பிரச்னையில் கொண்டுவிடும் என்பதையும் குருபகவானின் நிலை எடுத்துக்காட்டுகிறது. புதிய முயற்சிகளையும், முதலீடுகளையும் வரும் ஓராண்டிற்கு ஒத்திப்போடுவது மிகவும் அவசியம். இல்லாவிடில், பண நெருக்கடியில் கொண்டுவிடக்கூடும். பண விஷயங்களில் கண்டிப்பாக இல்லாவிடில், உங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை குருவின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது.
கலைத்துறையினர்: வரும் ஒருவருட காலத்திற்கு, நீங்கள் எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. உங்கள் ராசி நாதனாகிய குரு பகவான், அவரது திருதீய ஸ்தானமாகிய ரிஷப ராசியில் நிலைகொண்டுள்ள இடத்தில், ராகு, சனி ஆகியோரும் அனுகூலமாக இல்லை. நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது. இல்லாவிடில், நிதி நெருக்கடியில் அகப்பட்டுக் கொள்ள நேரிடும்.
அரசியல்துறையினர்: குரு பகவானால், வரும் ஒருவருடக் காலத்திற்கு அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. அதிர்ஷ்டவசமாக குரு மாறியிருப்பது, அரசியல் துறைக்கு அதிகாரியான சுக்கிரனின் ராசியாகும். எத்தகைய கிரகநிலைகளின்போது, நமக்கு சோதனைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே நமக்குத் தெரிவித்து, நம்மைக் காப்பாற்றும் மாபெரும், ஒளிவிளக்காகவும் விளங்குகிறது, ஜோதிடம் எனும் அற்புதக் கலை!
மாணவ – மாணவியர்: கடின உழைப்பு இருப்பினும், கல்வி முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். படிப்பில் ஆர்வம் மேலிடும். கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள புதன், சுபத்துவப் பாதையில் வலம் வந்துகொண்டிருப்பதால், வரும் ஒரு வருடக் காலத்தில், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், உதவியும், ஆசியும் கிடைப்பது, படிப்பில் கூடுதல் உற்சாகம் மேலிடும். நேர்முகத் தேர்வுகள் இருப்பின், மிகச் சரியான பதில்களை அளித்து, வெற்றி பெற குரு உதவுவார். ராசிக்கு லாப ஸ்தானமாகிய மகரத்தில் அமர்ந்துள்ள சனி பகவானை, குரு பார்ப்பதும் நன்மையே!
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிபரான செவ்வாய், மீன ராசியின் வாக்கு, தனம், குடும்பம், சுகம், பாக்கியம் ஆகிய ராசிகளுக்கு அதிபதியாவார். ஆதலால், ேயாக காரகர் எனக் கூறுகின்றன, ஜோதிட நூல்கள்!! வரும் ஒருவருடக் காலத்தில், செவ்வாய் பெரும்பாலும் மீன ராசிக்கு நற்பலன்களை அளிக்கும்படியே சஞ்சரிப்பதால், வயல் பணிகளில் அதிக செலவுகள் ஏற்படினும் விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். கால்நடைகளின் பராமரிப்பில் அதிக செலவுகளை ஏற்படுத்துவார், திருதீய குரு!! பழைய கடன்களினால், அவ்வப்போது தொல்லைகள் ஏற்படும். ஜென்ம ராசியில், ராகு நிற்பதால், இரவு நேரப் பணிகளில் விழிப்புடன் இருத்தல் அவசியம். குருவினால் ஏற்படும் வீண் செலவுகளைச் சமாளிப்பதில் அதிக சிரமம் ஏற்படாது.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நன்மைகளைப் பாதுகாப்பதில், குரு பகவானுக்கு பெரிய பங்குண்டு! அவர், ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால், குடும்ப நிர்வாகத்தில், பணப்பற்றாக்குறை அடிக்கடி நேரிடும் – வரும் ஒருவருடக் காலத்தில்!! வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. நெருங்கிய உறவினருடன் பிரச்னைகள் ஏற்பட்டு, மன அமைதி பாதிக்கப்படும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, வேலைச் சுமை அதிகரிக்கும். குருவின் நிலையினால், பலருக்கு, இடமாற்றம் ஏற்படக்கூடும். மணமாலை சூடக் காத்திருக்கும் கன்னியருக்கு, வரன் அமைவதில் தாமதம் உண்டாகும்.
அறிவுரை: ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, கோள் சாரத்தில், குரு பகவான் ஜென்ம ராசிக்கு மூன்றாம் இடத்தில் (திருதீய குரு) வரும்போது, அவரால் ஏற்படும் நன்மைகள் குறையும். இருப்பினும், அவர் உங்கள் ராசிக்கு நாதனாக இருப்பதால், பிரச்னைகள் அளவோடு நிற்கும். அதுவும், பரிகாரத்திற்கு உட்பட்டவையே!
பரிகாரம்: பசுவிற்கு உணவளிப்பது, உடல் குறையுடன் இருப்போருக்கு உதவுதல், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் (தாலி) கொடுப்பது, பசியினால் துன்புறும் ஏைழ – எளியோர்களுக்கு உணவளிப்பது ஆகியவை குரு பகவானுக்கு மிகவும் உகந்த பரிகாரங்களாகும்.