சிம்மம்

Published: Last Updated on

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்: களத்திர ஸ்தானத்தில், பலம் பொருந்திய சனி பகவானும், ஆயுள் ஸ்தானத்தில் ராகுவும் நிலைகொண்டுள்ள இத்தருணத்தில், இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் விளங்கிய குரு பகவான், தற்போது ஜீவன ஸ்தானத்திற்கு மாறியிருக்கின்றார். வாக்கு, தனம், குடும்பம், சுகம், ருண (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (எதிரிகள்) ஸ்தானங்களைப் பார்வையிடுகிறார். கோள்சாரத்தின் விதிகளின்படி, ராசிக்கு 10-ம் இடத்தில், குரு சஞ்சரிப்பது, அதிக அலைச்சலையும், வெளியூர்ப் பயணங்களையும் சிறு விஷயங்களுக்குக்கூட அதிக முயற்சியையும் விளைவிக்கும். மேலும், பகை வீடான கும்ப ராசியில், சனி இருப்பதும் குடும்பப் பிரச்னைகளின் கடுமையை எடுத்துக்காட்டுகிறது. திருமண முயற்சிகளில் ஏமாற்றம் ஏற்படும். பல தருணங்களில் தவறான வரனை நிச்சயித்துவிடும் தவறும் நிகழ்ந்துவிடும். வரும் ஒரு வருட காலத்திற்கு, கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிக்க வேண்டும் என்பதை குரு பகவானின் நிலை எச்சரிக்கை செய்கிறது. இல்லாவிடில், புதிய கடன்களை ஏற்க நேரிடும். நெருங்கிய உறவினர்களுடன் கருத்து வேற்றுமையும், பகையுணர்ச்சியும் மேலிடும்.

உத்தியோகம்: குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சாரம், உத்தியோகத் துறையினருக்கு நன்மை செய்யாது! ஏற்கெனவே, அஷ்டம ஸ்தானத்தில் ராகு நிலைகொண்டிருக்கிறார். வரும் ஒரு வருட காலத்திற்கு வேலை பார்க்குமிடத்தில், அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். மேலதிகாரிகளின் கண்டிப்பு ஒருபுறம்; சக-ஊழியர்களின் மறைமுகத் தொல்லைகள் மறுபுறம்! -என்ற நிலையைச் சமாளிப்பதற்கு பொறுமையும், சமயோசித புத்தியும் அவசியம். மேலதிகாரிகளுடன் பழகும்போது, உணர்ச்சிவசப்படுவதையும், முன்கோபத்தையும் தவிர்த்தல் வேண்டும். சில தருணங்களில் வேலையை விட்டுவிடலாமா? என்ற எண்ணம் தலைதூக்கும். அத்தகைய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. மேலும், சக-ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதையும், அவர்களது சொந்தப் பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதையும் தவிர்த்தல் வேண்டும். இல்லாவிடில், தேவையற்ற பிரச்னைகளில் நீங்கள் சிக்கிக்கொண்டு அவதியுற நேரிடும் என்பதை குருபகவானின் நிலை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்காட்டுகிறது.

தொழில், வியாபாரம்: கிரக நிலைகளின்படி, நீங்கள் பண விஷயங்களில் சற்று கவனமாக இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது! சந்தை நிலவரத்தை மிகவும் உன்னிப்பாகவும், நேரடியாகவும் கவனித்து, அதற்கேற்ப உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது நல்லது என்பதை குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சாரம் எடுத்துக்காட்டுகிறது. புதிய முயற்சிகளையும், முதலீடுகளையும், விஸ்தரிப்புத் திட்டங்களையும் ஒத்திப்போடுதல் அவசியம். நடைபாதை, சில்லரை விற்பனையாளர்கள், விற்பனையை எதிர்பார்த்து, கடன் வாங்குவதைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை குரு மற்றும், சனி, ராகு ஆகியோரின் சஞ்சார நிலைகள் உள்ளங்கை நெல்லிக்கனி என எடுத்துக்காட்டுகின்றன. பல தருணங்களில், நிதிநிறுவனங்கள் ஒத்துழைக்க மறுத்துவிடுவார்கள்.

கலைத்துறையினர்: குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சாரக் காலம் உங்களுக்கு நன்மை செய்யாது! அதற்கு மாறாக, பல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. திரைப்படத் துறையினருக்கு, நண்பர்களே எதிரியாவார்கள்!! தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோர் உங்களைப் புறக்கணிப்பார்கள். இவ்வருடம் புதிய படமெடுத்தால், அது பெரும் நஷ்டத்தில் கொண்டுவிடக்கூடும் என கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ஆதலால், தவிர்ப்பது நல்லது.

அரசியல்துறையினர்: அரசியல் துறைக்குத் தொடர்புள்ள அனைத்து கிரகங்களும் சுபத்துவப் பாதையில் சஞ்சரிக்காத தருணத்தில், குரு பகவானின் ரிஷப ராசி மாறுதல் நிகழ்கிறது. அடுத்துவரும் சுமார் ஒருவருட காலத்திற்கு குரு பகவான் ரிஷபத்திலேயே நிலைகொண்டிருப்பதால், அரசியல் துறையினர், தங்கள் பேச்சிலும், செயலிலும், பிறகட்சிப் பிரமுகர்களுடன் உள்ள உறவிலும் அதி-ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொது மேடைகளில் பேசும்போது, தீர யோசித்து சொற்களை உபயோகிக்கவேண்டும். ஒருநிமிடக் காலம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினாலும்கூட, மிகப் பெரிய பிரச்னையில் அகப்பட்டுக்கொள்ள சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன.

மாணவ – மாணவியர்: புதன் கிரகத்தை ஆதாரமாகக் கொண்டு, கல்வி பயிலும் மாணவ – மாணவியருக்கு, இந்த குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சார காலம், அளவோடு நன்மை செய்யும். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நேர்முகத் தேர்வுகளில், வெற்றிபெறச் செய்வார் குரு! குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள உத்தம பெண்மணிகளுக்கும், மாணவ – மாணவியருக்கும் உதவி செய்வதில், குருவிற்கு இணையான கிரகம் வேறு கிடையாது என வருணித்துள்ளது, “காலப்ரகாஸிகா” எனும் ஜோதிட நூல்!

விவசாயத் துறையினர்: குருவும், பூமி காரகரான செவ்வாயும் நட்புக் கிரகங்களாகும்! குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சார காலத்தில், விவசாயிகளுக்கு நல்ல மழை பொழியும். விளைச்சல் அதிகரிக்கும். சந்தையில் உங்கள் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும். பலருக்கு, அரசாங்கச் சலுகைகள் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பு குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களுக்கும் உண்டு என்பதை மிகப் பழைமையான ேஜாதிடக் கிரந்தங்கள் விவரித்துள்ளன. ஆதலால், ரிஷப ராசியில், அமர்ந்துள்ள குரு பகவானால் வரும் ஒரு வருட காலத்திற்கு பல நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும். ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும். திருமண வயதுள்ள பெண்மணிகளுக்கு நல்ல வரன் அமையும்.

அறிவுரை: குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சார காலத்தில், பல ராசியினருக்கு, அதிக நன்ைமயும், சிலருக்கு அளவோடு நன்மையும் ஏற்படும் என்பதை, மிகப் புராதன ஜோதிட நூல்களில் மகரிஷிகள் அருளியுள்ளதை மேலே கூறியுள்ளோம். இவற்றைப் படித்து, அப் பலன்களுக்கு ஏற்ப வரும் ஒருவருட காலத்தில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், மகிழ்ச்சியும், மனநிறைவும் வீட்டின் கதவைத் தட்டும். என்பதில் சந்தேகமில்லை.

பரிகாரம்: அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், வியாழக்கிழமைகளில் ஐந்து மண் அகல்களில், மாலை நேரத்தில், நெய் தீபங்கள் ஏற்றிவந்தால் போதும். நல்ல பலன் கிட்டும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us