ரிஷபம்

Published: Last Updated on

(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: இதுவரை உங்கள் ராசிக்கு, விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான், தற்போது ஜென்ம ராசிக்கு மாறியிருக்கிறார். இங்கு வரும் சுமார் ஒருவருட காலத்திற்கு நிலைகொண்டுள்ளார். “ஜென்ம ராசி வனத்திலலே….!” -என்றொரு பழமொழி உண்டு. அவதார புருஷரான ராமபிரான் வனவாசம் சென்றபோது, அவரது ஜாதகத்தில் ஜென்ம ராசியில், சனி பகவான் அமர்ந்திருந்தார்! ஆதலால்தான், அத்தகைய மூதுரை ஏற்பட்டது. இதன் கருத்து என்னவென்றால், ஒவ்வொருவரின் ஜாதகத்திலும், கோள்சார விதிகளின்படி, ஜென்ம ராசியில், குரு பகவான் சஞ்சரிக்கும்போது, மற்ற கிரக நிலைகளும் அனுகூலமில்லாமல் இருப்பின், உத்தியோகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சம்பந்தப்பட்ட ஜாதகர், குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும் என்பதேயாகும்!! ரிஷப ராசி அன்பர்களுக்கு, வரும் ஒருவருட காலத்தில், குடும்பப் பிரச்னைகளும், அதிக அலைச்சலும், பண விரயமும், நிம்மதிக் குறைவும் ஏற்படும். அவரவரது தனிப்பட்ட ஜாதகத்தின் கிரக நிலைகளின்படி, பிரச்னைகள் ஏற்படும். ஏதாவதொரு காரணத்தினால், அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள குரு, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய கன்னியையும், களத்திர ஸ்தானமாகிய விருச்சிகத்தையும் பாக்கிய ஸ்தானமாகிய மகரத்தையும் தனது சுபப் பார்வையினால், பலப்படுத்துகிறார். இந்தப் பார்வையின் பலத்தினால், கணவர் – மனைவியரிடையே ஒற்றுமையும் பரஸ்பர அந்நியோன்யமும் மேலோங்கும். இந்த ராசியில் பிறந்துள்ள பல பெண்மணிகளுக்கு, புத்திர பாக்கியம் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்திற்கு, குரு பகவானின் கடைக்கண் பார்வை கிடைப்பதால், வருமானம் உயரும். பழைய கடன்கள் இருப்பின், அவை அடைபடும்.

உத்தியோகம்: எவ்விதக் காரணமுமில்லாமல், நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊதிய உயர்வு உடனடியாக உங்களுக்குக் கொடுக்கப்படும். தற்காலிகப் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். வேலையில்லாமல், துன்புற்றிருக்கும் இளைஞர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கச் செய்வார், குரு பகவான்! ஆரம்பத்திலேயே மனத்திற்கு நிறைவைத் தரும் நல்ல சம்பளம் கிடைக்கும். களத்திர ஸ்தானமாகிய விருச்சிகத்திற்கு, குரு கடாட்சம் கிடைப்பதால், நல்ல வரன் அமைந்து, திருமணமும் நடைபெறும், அதன் மூலம், மனதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் உண்டாகும்.

தொழில், வியாபாரம்: தொழில் ஸ்தானத்தில், ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில், தொழில்காரகரான சனி பகவானும், லாப ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்துள்ள இத்தருணத்தில், பாக்கிய ஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை கிடைப்பது, மிகவும் அரிதான கிரக நிலைகளாகும். தொட்டவை அனைத்தும் பொன்னாகும்! சந்தை நிலவரம் அனுகூலமாக இருக்கும். லாபம் படிப்படியாக உயரும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். ஏற்றுமதித் துறை அன்பர்களுக்கு, அரிய சந்தர்ப்பம் இது!! வரவேண்டிய பாக்கிகள் எளிதில் வசூலாகும்.

கலைத்துறையினர்: கலைத்துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சுக்கிரனின் ராசியில், குரு பகவான் அமர்ந்து, ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும், சனி பகவானின் வீடான மகரத்தைப் பார்ப்பது, அதிக நற்பலன்களை அளிக்க வல்லது. புதிய வாய்ப்புகள் எவ்வித முயற்சியுமின்றி, தேடி வரும். வருமானம் உயரும். மக்களிடையே பிரபலமாகி விளங்குவீர்கள்.

அரசியல்துறையினர்: குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சார காலத்தில், பல நன்மைகள் உங்களுக்குக் காத்துள்ளன. குறிப்பாக, நீதிமன்ற வழக்குகள் இருப்பின், அவற்றிலிருந்து நல்லபடி வெளிவந்துவிடுவீர்கள்! கட்சியில் ஆதரவு பெருகும். உங்கள் அரசியல் வாழ்க்கையில் வரும் ஒருவருடக் காலம் ஓர் திருப்புமுனையாக அமையும். ஜனனகால தசா, புக்திகள் சுபபலம் பெற்றிருப்பின், அரசு பதவியொன்றை வகிக்கும் யோகமும் உள்ளது. இதனை அனுபவத்தில் காணலாம்.

மாணவ – மாணவியர்: கல்வித் துறைக்கும், குரு பகவானுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதைப் புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. மாணவர்களின் மனதில் புரியும்படி பாடங்களைப் புகட்டும் தனித் திறமைவாய்ந்த ஆசிரியர்கள், நன்னடத்தை கொண்டுள்ள நண்பர்கள், பிரபலமான கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பது ஆகிய நன்மைகள் குரு பகவானின் கருணையினால் மட்டுமே கிடைக்கக்கூடிய நற்பயன்களாகும். இவையனைத்தையும் இப்புத்தாண்டில் குரு பகவானால், உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் யோக பலன்களாகும்.

விவசாயத் துறையினர்: விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாக இருக்கும். குரு பகவானின் பார்வை பலத்தினால், தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீர் வசதி இருக்கும். அதிக மழையினால், பயிர்கள் சேதமடையாமல் பார்த்துக்ெகாள்வார், குருபகவான்! எந்த அளவிற்கு யோக பலன்களை அளிக்கும் சக்தியுள்ளதோ அதே அளவிற்கு அதிக யோகத்தினால், ெகடுதி வராமலும் பார்த்துக்கொள்ளும் அதிகாரம் குரு பகவானுக்கு உள்ளது. “அளவிற்கு மிஞ்சினால், அமுதமும் விஷமாகும்…!” என்பது ஆன்றோர் வாக்காகும். இதனை குரு பகவான் என்றும் மறந்ததில்லை!! தனது சஞ்சார பலத்தினால், நம்பைப் பாதிக்கும் அளவிற்கு நற்பலன்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார் குரு!

பெண்மணிகள்: குடும்பப் பெண்மணிகளின் நன்மைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு, குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்கள் ஏற்றுள்ளதை, ஜோதிடக் கலை விளக்கியுள்ளது. குடும்பப் பொறுப்பிலுள்ள பெண்மணிகளுக்கு, என்றும் துணை நிற்கிறார், குரு பகவான்! தேவையான அளவிற்கு இவ்வருடம் முழுவதும் பண வசதி தந்தருள்கிறார், குரு! பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற உதவுவார், தேவகுரு!

அறிவுரை: வியாழக்கிழமைகளில் ஏழை ஒருவருக்காவது அன்னதானம் செய்தால் சிறப்பு.

பரிகாரம்: குரு பகவானின் ஆட்சி தினமாகிய வியாழக்கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது வீட்டின் பூஜையறையிலோ ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வந்தால் போதும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us