(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
குடும்பம்: குரு பகவானின் ரிஷப ராசி மாறுதல், உங்களுக்குப் பல நன்மைகளை அளிக்கவல்லது! பாக்கிய ஸ்தானத்திற்கு மாறியுள்ள வியாழன், குறைவில்லாத வருமானத்தைத் தந்தருள்வார். மேலும், அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு மூன்றாம் இடத்தையும், பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தையும் தன் சுபப் பார்வையினால், பலப்படுத்துகிறார். குழந்தைகளின் கல்வி, அவர்களின் உத்தியோகம் ஆகியவற்றில் பல நன்மைகளைப் பெற்றுத் தருவார், குரு!! “ஓடிப்போனவனுக்கு 9-ல் குரு! அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்தில் சனி….!!” -என்றொரு மூதுரையும் உள்ளது. குரு பகவான் பரிபூரண சுப பலம் பெற்றுள்ள இத்தருணத்தில், சனி பகவானின் கும்ப ராசி சஞ்சாரமும் சிறந்த அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெறுவதற்கு மிகவும் அனுகூலமான காலகட்டமிது. செவ்வாயும் அனுகூலமாக இருப்பதால், பலருக்குச் சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது. குடும்பத்துடன் தீர்த்த தல யாத்திரை சித்திக்கும் யோகமும் இருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. விவாகமான பெண்மணிகள், கருத்தரிப்பதற்கு குரு பகவானின் சஞ்சார நிலை உதவிகரமாக உள்ளது. இப்புத்தாண்டின் ஆண் குழந்தைகளே அதிகமாகப் பிறக்கும் (ஆதாரம்: “ஜாதக அலங்காரம்” மற்றும் “பிருஹத் ஸம்ஹிதை” எனும் புராதன ஜோதிடக் கிரந்தங்கள்). களத்திர ஸ்தானத்தில் பலம் வாய்ந்த ராகு நிலைகொண்டிருப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். கருத்தரித்துள்ள மங்கையர்க்கு, சுகப் பிரசவம் அமையும்.
உத்தியோகம்: உத்திேயாகத்திற்கு அதிகாரம் படைத்த சனி பகவான் மிகவும் சுப பலம் பெற்றுள்ள நிலையில், குருவின் ரிஷப ராசி மாறுதலும் நிகழ்கிறது! வேலை பார்க்கும் இடத்தில், மேலதிகாரிகள், சக ஊழியர்கள் ஆகிய அனைவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் மன நிறைவை அளிக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு பதவியுயர்வு ஒன்றையும் எதிர்பார்க்கலாம். வெளிநாடு சென்று, வேலை பார்க்க விருப்பமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். ஒரு சிலருக்கு, இடமாற்றமும், அதன் காரணமாக, கூடுதல் சலுகைகளும் கிட்டும்.
தொழில், வியாபாரம்: வரும் ஒரு வருட காலத்தில், குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சாரம் உங்கள் எதிர்பார்ப்பிற்கு சற்று அதிகமாகவே லாபத்தைப் பெற்றுத் தரும். நிதிநிறுவனங்களின் உதவியும், ஒத்துழைப்பும் வியாபாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தும். குரு, சனி பகவான் ஆகிய இருவருமே சிறந்த சுப பலம் பெற்று வலம் வருவதால், உங்கள் பொருளாதாரத்தை சீர்செய்துகொள்வதற்கு ஏற்ற ஆண்டு இது!! நடைபாதை விற்பனையாளர்கள், சில்லரை வியாபாரிகள் ஆகியோருக்குக் கடன் தொல்லைகள் நீங்கும். கடன்களை அடைத்தே தீர வேண்டும் என்ற உறுதியான மனமும், திட்டமிட்டு செலவு செய்வதும் உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும். விற்பனை நிலையங்களை விரிவுபடுத்துவதற்கு ஏற்ற ஆண்டு இது என்பதை குரு பகவான் உறுதிசெய்கிறார். அதற்கேற்றாற்போல், வர்த்தகத் துறைக்கு அதிகாரியான சனி பகவானும், கைகொடுத்து, உதவுகிறார்.
கலைத்துறையினர்: கலைத்துறைக்கு ஆதிபத்தியம் கொண்ட சுக்கிரனின் ராசியில் அமர்ந்துள்ள குரு பகவான், உங்கள் வாழ்க்கைத் தரத்தையே வரும் ஓராண்டுக் காலத்தில் மாற்றியமைக்கவுள்ளார் என்பதை ஜோதிடக் கலை எடுத்துக்காட்டுகிறது. அதிக முயற்சியின்றி, நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும். முக்கியமாக, திரைப்படத் துறையினருக்கு, அதிர்ஷ்டகரமான காலகட்டம் இது.
அரசியல்துறையினர்: குரு, சுக்கிரன், சனி பகவான் ஆகிய மூவருமே அனுகூல நிலைகளில் சஞ்சரிப்பதால், உங்கள் அரசியல் வாழ்க்்கையில் ஓர் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துவார், குரு இப்புத்தாண்டில்! நெருக்கடியான தருணங்களில், மிகச் சரியான முடிவெடுக்கும் திறனைத் தந்தருள்கிறார், தேவ குரு!! அரசாங்கப் பதவியொன்றை வகிப்பதற்கும் யோகம் உள்ளது.
மாணவ – மாணவியர்: ரிஷபத்தில் அமர்ந்துள்ள குருபகவானின் சுபப் பார்வை உங்கள் ராசிக்குக் கிைடக்கிறது. கன்னி ராசிக்கு அதிபதி கல்வித் துறைக்கு அதிகாரியான புதனாவார். மிகவும் அருமையான கிரக நிலை இது. படிப்பில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்கள் வலிய வந்து உதவுவார்கள். நேர்முகத் தேர்வுகளில் உடனுக்குடன் மிகச் சரியான பதிலளிக்கும் திறனை குரு தந்தருள்கிறார்.
விவசாயத் துறையினர்: ஆடி மற்றும் ஆவணி அகிய இரு மாதங்களைத் தவிர மற்ற பத்து மாதங்கள் செவ்வாய், உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கிறார். ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் பக்கந்தான்! ஆதலால், விளைச்சல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் உயரும். கால்நடைகள் அபிவிருத்தியடையும்.
பெண்மணிகள்: இந்த குரு மாறுதல், உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கவுள்ளது. குடும்ப நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, மகிழ்ச்சியையும், மன நிறைவையும் சற்று தாராளமாகவே அளிக்கவுள்ளது, குரு பகவானின் ஓராண்டுக்கால ரிஷப ராசி சஞ்சாரம்.
அறிவுரை: வரும் ஓராண்டில், அதிர்ஷ்டகரமான காலகட்டம் என்பதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன. உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்வதற்கும், எதிர்காலத்திற்கென்று சேமித்து வைத்துக் கொள்வதற்கும், ஏற்ற தருணமிது! களத்திர ஸ்தானத்திற்கு ராகுவினால் சிறிது தோஷம் ஏற்பட்டுள்ளதால், மனைவியின் உடல் நலனில் கவனமாக இருத்தல் நலன் பயக்கும்.
பரிகாரம்: ராகுவிற்கு மட்டும் பரிகாரம் அவசியம். திருநாகேஸ்வரம் அல்லது கர்நாடகாவிலுள்ள நாகமங்களா திருத்தல தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். செல்லும்போது மண் அகலும், எள் எண்ணெயும் கைவசம் எடுத்துச்செல்ல மறந்துவிடாதீர்கள்.