(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சாரம், உங்களுக்கு அளவற்ற நன்மைகளை அளிக்கவுள்ளது! ஏழரைச் சனியின் கடைப்பகுதியில் இருப்பதால், சனி பகவானாலும் பல நன்மைகள் ஏற்படவுள்ளது. மீனத்தில் நிலைகொண்டுள்ள ராகுவினாலும், அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது. இத்தகைய நலன்களைத் தவிர, குரு பகவானின் பார்வை விசேஷம், ராசி, பாக்கியம், லாப ஸ்தானங்களுக்குக் கிடைப்பது, சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய கிரக நிலைகளாகும். குடும்பச் சூழ்நிலை, மகிழ்ச்சியை அளிக்கும். தேவையான அளவிற்கு, வருமானம் இருப்பதால், அடுத்துவரும் ஒரு வருட காலத்திற்கு, பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை!! பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறுவீர்கள். திருமண வயதில், பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமைந்து, விவாகமும் நடைபெறும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறத் துணை நிற்கிறார், ராகு பகவான். உடல் ஆரோக்கியம், திருப்திகரமாக உள்ளது.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள குரு பகவானுடன், மற்ற கிரகங்களும்கூட, சுபத்துவப் பாதைகளில் சஞ்சரிப்பதால், அலுவலகச் சூழ்நிலை உற்சாகத்தையளிக்கும், மேலதிகாரிகளின் ஆதரவு, உதவி, ஆகியவை நிறுவனத்தில் உங்கள் எதிர்காலம் பற்றியிருந்த கவலைகளை நீக்கும். வெளிநாடு சென்று, வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமிருப்பின், தற்போது முயற்சிக்கலாம். எளிதில் வெற்றி கிட்டும். காரணமில்லாமல், நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊதிய உயர்வு, இப்போது கிட்டும். வேலையில்லாமல் நிம்மதியை இழந்துள்ள மகர ராசி அன்பர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த வேலை அமையும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்கெனவே வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் மகர ராசியினருக்கு, புதுச் சலுகைகள் கிடைக்கும். பலர் விடுப்பில் தமது தாய் நாடு திரும்பி, குடும்பத்தாருடன் தங்கி இருந்துவிட்டுச் செல்ல அனுகூலமான கால நிலை இது.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைக்குச் சம்பந்தப்பட்ட அனைத்து கிரகங்களும், சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. இத்தகைய நிலையில், குரு பகவான், உங்கள் ராசிக்கு பஞ்சம (ஐந்து) காலமாகிய ரிஷபத்தில் வலம் வருவது, நல்ல லாபத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் அளிக்க வல்லது. நிதி நிறுவனங்கள் ஒத்துழைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவதற்கு அனுகூலமான காலகட்டம் இது. ஒருசிலர், உயர் தொழில்நுட்பம் பெறுவதற்கு, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் யோகமும் அமைந்திருப்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. சில்லரை வியாபாரிகள்கூட, நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பழைய கடன்கள் இருப்பின் அவற்றை அடைத்து நிம்மதி பெற கிரக நிலைகள் உதவிகரமாக அமைந்துள்ளன.
கலைத்துறையினர்: சனி பகவான், ராகு, சுக்கிரன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலைகள் அனுகூலமாக இருப்பதால், சென்ற பல மாதங்களாகவே வருமானக் குறைவினால், பல பிரச்னைகளை அனுபவித்துவரும் உங்களுக்கு, மீண்டும் வருமானம் வர ஆரம்பிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்பற்றாக்குறை தீரும். புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். பல மாதங்களுக்குப் பிறகு, முதன்முறையாக, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, நல்ல படங்கள் எடுக்க வாய்ப்புகள் கிடைக்கும். அது நல்ல வசூலைப் பெற்றுத் தரும். அதனால், உங்கள் பணப் பிரச்னைகள் தீருவதுடன், மேலும் பல புதிய படங்கள் எடுப்பதற்கு வாய்ப்பு கிட்டும். புதிதாகத் திரைப்படத் துறையில் கால் பதிக்க விரும்புபவர்களுக்கு, குரு பகவானின் சாதகமான சஞ்சாரம் உதவும். இதை அனுபவத்தில் பார்க்கலாம்.
அரசியல்துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரியான, சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் சனி பகவான் மாறியிருப்பது, மிக நல்ல மாறுதலாகும். மக்களிடையே செல்வாக்கும், பிரபலமும் அதிகரிக்கும். பல கட்சிகளிடமிருந்து, அழைப்பு வரும். உங்கள் அரசியல் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான காலகட்டமாகும் என்பதை குரு பகவானின் சஞ்சார நிலை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
மாணவ – மாணவியர்: கல்வித் துறைக்கு அதிகாரியான புதன், அனுகூலமான நிலையில் சஞ்சரிக்கும் நேரத்தில், குரு பகவானின் இந்த ரிஷப ராசி மாறுதல், ஏற்பட்டுள்ளது, உங்கள் அதிர்ஷ்டம்தான்!! படிப்பில், மனம் தீவிரமாக ஈடுபடும். தேர்வுகளில் கேள்விகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப சரியான பதில்களை அளிப்பதற்கு, குருவின் நிலை பெருமளவில் உதவி செய்கிறது. ஒருமுறை கூத்தனூர் சென்று, அங்கு எழுந்தருளியிருக்கும், அன்னை சரஸ்வதி தேவியை, நெய் தீபம்ஏற்றிவைத்து தரிசித்துவிட்டு வந்தால் போதும். வெற்றி கிட்டும். வெளிநாடு சென்று, உயர் கல்வி பயில வேண்டுமென்ற விருப்பமிருப்பின், இந்த ஆண்டில் முயற்சிக்கலாம். எளிதில் விசா கிடைத்துவிடும். வேண்டுமெனில், நிதியுதவியும் தேடி வரும்.
விவசாயத் துறையினர்: ரிஷப ராசியில் அமர்ந்துள்ள குரு பகவான், பாக்கிய ஸ்தானத்தைப் பார்வையிடுவதால், இந்தாண்டு நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். அடிப்படை வசதிகளான தண்ணீர், உரம், இடுபொருட்கள், விதைகள் ஆகியவை குறைவின்றி, நியாயமான விலைக்குக் கிடைக்கும். கால்நடைகள் நல்ல அபிவிருத்தியை அடையும். சந்தையில் உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலையும், லாபமும் கிட்டும்.
பெண்மணிகள்: உங்கள் ராசிக்கு ரிஷபம், பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானமாகும்! குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சிக்கும் பெண்மணிகளுக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்கு நிறைவையளிக்கும் பணி கிடைக்கும். புத்தர ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால், குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது மகிழ்ச்சியை அளிக்கும்.வேலைக்கும் நங்கையருக்கு, மனத்திற்குப் பிடித்த பணி கிடைக்கும்.
அறிவுரை: மகர ராசியில் பிறந்துள்ள அனைவருக்கும், குரு பகவானின் ஒருவருட ரிஷப ராசி சஞ்சாரக் காலம், பல நன்மைகளை அளிப்பதுடன், மனத்திற்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கவல்லது. கிரகங்கள் கொடுக்கும்போது, எதிர்கால நலனிற்காக நாம் சேமித்துவைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்திற்கென்று எறும்புகளே சேமித்து வைத்து, மனிதர்களாகிய நமக்குப் பாடம் புகட்டுகின்றன!!
பரிகாரம்: சனி பகவானுக்கு மட்டும் பரிகாரம் செய்வது, நன்மையளிக்கும் என புராதன ஜோதிடக் கிரந்தங்கள் கூறுகின்றன. ஏழைகளுக்கு உணவளிப்பதும், வஸ்திரங்கள் கொடுப்பதும், பசுக்களுக்கு பசும் புல் அளிப்பதும் மகத்தான புண்ணய பலன்களைத் தரும்.