(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
17-8-2024 முதல் 16-9-2024 வரை
குடும்பம்: வரவும், செலவும் சமமாகவே இருக்கும். இருப்பினும், கடன் வாங்க வேண்டிய அவசியம் இராது. ஜென்ம ராசியில் சனி பகவான், வக்கிர கதியில் இருப்பதால், ஏதாவதொரு உடல் உபாதை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய கவலையும், அச்சமும் மனதை வருத்தும். அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர்களிடையே பிரச்னைகள் ஏற்பட்டு, ஒற்றுமை பாதிக்கப்படும். வெளிநாட்டில் வேலைபார்த்துவரும் பெண் அல்லது பிள்ளையின் உத்தியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு, கவலையை அளிக்கும். திருமண முயற்சிகளில், ஏமாற்றமே மிஞ்சும். அடிக்கடி வெளியூர் செல்லவேண்டிய அவசியம் ஏற்படுவதால், உடலில் அசதியும், மனதில் சோர்வும் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்த்தல் அவசியம்.
உத்தியோகம்: தன ஸ்தானத்தில், ராகு சஞ்சரிக்கும் இத்தருணத்தில், சனி பகவானும் அனுகூலமாக இல்லை! குருவும், செவ்வாயும் ராசிக்கு அர்த்தாஷ்டக நிலையான ரிஷப ராசியில் நிலைகொண்டுள்ளனர். ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். உடல் உபாதைகள் காரணமாக, விடுப்பு எடுக்க நேரிடும். எதிர்காலத்தைப் பற்றி அச்சம் மேலிடும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் கும்ப ராசியினருக்கு, வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
தொழில், வியாபாரம்: கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! வர்த்தகத் துறைக்கு அதிபதியான சனி பகவான், வக்கிர கதியில் சஞ்சரிப்பதால், எதிர்பாராத பல பிரச்னைகளினால் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். வெளி மாநிலங்களிலிருந்து, வந்து பணியாற்றும் தொழிலாளர்களின் நியாயமற்ற கோரிக்கைகளினால், உற்பத்தி பாதிக்கப்படும். மூலப் பொருட்களின் விலை அதிகரிக்கும். சந்தை நிலவரமும் சாதகமாக இல்லை!! முக்கியமான தருணங்களில், நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. இதன் காரணமாக, நிதி நெருக்கடி ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
கலைத்துறையினர்: கலைத் துறையினருக்கு, வாய்ப்புகள் குறையும். அதன் காரணமாக, வருமானமும் பாதிக்கப்படும். குறிப்பாக, திரைப்படத் துறையினர், தொடர்ந்து பல துன்பங்களுக்கு ஆளாவார்கள். தயாரிப்பாளர்களுக்கு, பணப் பற்றாக்குறையினால், படங்கள் பாதியிலேயே நின்றுபோகும். நடிகர் – நடிகையர் ஆகியோருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுகள் அதிகமாகும். பலருக்கு, என்றோ பட்ட கடன்களினால், தொல்லைகள் ஏற்படும். ஒரு சிலர் நீதி மன்ற வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.
அரசியல் துறையினர்: ஆவணி 10-ம் தேதியிலிருந்து, சுக்கிரன் அனுகூலமாக மாறுவதால், அரசியல் துறையினருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் தேடி வரும். இருப்பினும், அதிஜாக்கிரதையாக இருக்கவேண்டிய தருணம் இது. சென்ற காலத்தில் செய்துள்ள தவறுகளினால், சட்டப் பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. “நண்பர்கள்” என நினைத்து, நீங்கள் நெருங்கிப் பழகியவர்களே, உங்களுக்கு எதிராக நடந்துகொள்வார்கள் என்பதை ராகு மற்றும் வக்கிர சனி பகவானின் நிலைகள் சூட்சுமமாக உணர்த்துகின்றன. உங்கள் சொந்தப் பிரச்னைகளை பிறருடன் கூறாமலிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. இதுவரை உங்களிடம் அன்பு காட்டிய மேல் மட்டத் தலைவர்கள் இப்போது விலகிக் கொள்வார்கள். எந்நிலையிலும், மௌனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன.
மாணவ – மாணவியர்: இம்மாதம் முழுவதும் கிரக நிலைகள் உங்களுக்கு ஆதரவாக இல்லை! பாடங்களில் மனம் ஈடுபடுவது கடினம். தகாத சேர்க்கைக்கும், அதன் விளைவாக சில சிக்கல்களிலும் நீங்கள் அகப்பட்டுக்கொள்வதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை ராகு மற்றும் வக்கிர சனியின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நீங்களுண்டு, உங்கள் படிப்புண்டு என்று இருப்பது நல்லது. கூடிய வரையில், பிற மாணவ – மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது விவேகமாகும். ஏனெனில், உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: செவ்வாய், ராகு, சனி ஆகிய முக்கிய கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு ஆதரவாக இல்லை! வயல் பணிகளில் கடுமையாக உழைத்தும்கூட, விளைச்சலும், வருமானமும் எதிர்பார்க்கும் அளவிற்கு இராது. கால்நடைகளின் பராமரிப்பில் பணச் செலவு அதிகரிக்கும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும்.
பெண்மணிகள்: இம்மாதம் முழுவதும், கிரக நிலைகள் சாதகமாக இல்லை! சிறு விஷயங்களுக்குக்கூட அதிகமாக பாடுபடவேண்டியிருக்கும், அலைய வேண்டிவரும். சிறு, சிறு உபாதைகள் உடலை வருத்தும். கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் பாதிக்கப்படும். விவாகத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, வரன் அமைவதில் தாமதங்களும், தடங்கல்களும் உண்டாகும். வேலைபார்க்கும் வனிதையருக்கு, அலுவலகச் சூழ்நிலை கவலையளிக்கும்.
அறிவுரை: கும்ப ராசியினர், ஏழரைச் சனியின் இரண்டாம் பகுதியில் உள்ளனர், இப்போது. பிறருடன் பழகுவதிலும், வெளியூர்ப் பயணங்களிலும், வாகனம் ஓட்டும்போதும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது மிக, மிக அவசியம். மேலும், உங்கள் சொந்த, அந்தரங்க விஷயங்களை பிறரிடம் கூறாமலிருத்தலும் அவசியமாகும். அதிக அலைச்சலைத் தவிர்த்தல் நலம் பயக்கும்.
பரிகாரம்: திருப்பதி, பூவரசன்குப்பம், சூரியனார்க் கோயில், திருச்செந்தூர் ஆகிய திருத்தலங்கள் ஏதாவது ஒன்றிலாவது நெய் தீபம் ஏற்றி வைத்து, தரிசித்துவிட்டு வருவது, சக்திவாய்ந்த பரிகாரமாகும். இப்பரிகாரம் அவசியமும் கூட!
அனுகூல தினங்கள்
ஆவணி: 1-5, 10-12, 16-18, 22-26.
சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி:19 காலை முதல், 21 இரவு வரை.