14-4-2024 முதல் 13-5-2024 வரை
குடும்பம்: இம்மாதத்தின் மிக முக்கிய, அனுகூலமான கிரக மாறுதல் குரு பகவான் சித்திரை 18-ம் தேதி (1-5-2024) உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய ரிஷப ராசிக்கு மாறுவதேயாகும்! அந்தத் தேதியிலிருந்து, குடும்பத்தில் சுபீட்சம் பெருகும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். லாப ஸ்தானம் பலம் பெறுவதால், பணக் கஷ்டம் படிப்படியாக நீங்கும். சுப நிகழ்ச்சிகளையும் எதிர்பார்க்கலாம். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். சித்திரை 12-ம் தேதி (25-4-2024)யன்று சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறுவதால், குடும்பத்தில் ஒற்றுமை குறையும். சிறு, சிறு பிரச்னைகள் கவலையை அளிக்கும். இவையனைத்திற்கும் மேலாக, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது, அஷ்டம (8) ஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள சனி – ெசவ்வாய் கூட்டுச் சேர்க்கையே ஆகும். இத்தகைய கிரக நிலை, விபத்துகளை ஏற்படுத்தக் கூடும் எனக் கூறுகின்றது, ஜோதிடக் கலை! இருப்பினும், கும்ப ராசி, சனி பகவானின் ஆட்சி வீடாகவும், உங்களுக்கு அவரே அஷ்டமாதிபதியாகவும் அமைந்திருப்பதால், தோஷம் மிகவும் குறைகிறது. இருப்பினும், வாகனங்களை ஓட்டும்போது, கவனமாக இருங்கள். பிறருடன் பகை வேண்டாம்.
உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில், அனைவருடனும் சற்று விட்டுக்கொடுத்து, அனுசரித்து நடந்துகொள்வது மிகவும் அவசியம். பொறுப்புகளில் கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், கிரக நிலைகளின்படி, உங்கள் பொறுப்புகளில் கவனக் குறைவாக இருப்பதற்கும், அதன் காரணமாக, தவறுகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. சக-ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதையும், அவர்களது சொந்த – தனிப்பட்ட பிரச்னைகளில் தலையிடுவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தொழில், வியாபாரம்: பல பிரச்னைகளை நீங்கள் சமாளிக்கவேண்டிய மாதமிது! தொழிலதிபர்களுக்கு, உற்பத்தி பாதிக்கப்படும். மிகக் கடுமையான போட்டிகளையும், பணப் பிரச்னையும் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். இத்தகைய தருணத்தில், சகக் கூட்டாளிகளும் ஏற்க இயலாத கோரிக்கைகளை வற்புறுத்துவார்கள். உடல்நலனும், மன நலனும் பாதிக்கப்படும். சனி பகவானின் ஆட்சிவீடாக இருப்பதால், தக்க தருணத்தில் பிரச்னைகள் தீர அவரே வழிவகுத்தருள்வார்.
கலைத் துறையினர்: சற்று சிரமமான மாதம்தான் இது. பணப் பிரச்னை கவலையளிப்பதுடன், ஆரோக்கியக் குறைவும் அதன்காரணமாக, மருத்துவச் செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவிப்போகும். சேர்த்து வைத்திருந்த செல்வம் சிறிது, சிறிதாகக் கரையும். திரைப்படத்துறையினர், மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய தருணமிது. ஆபத்தான பாத்திரங்களில் நடிக்கும் “ஸ்டண்ட்” நடிகர்கள் மிக, மிக எச்சரிக்கையாக இல்லாவிடில், விபத்துகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.
அரசியல்துறையினர்: பேச்சிலும், அறிக்கைகள் விடும்போதும், வார்த்தைகளை அளந்து உபயோகிப்பது மிகவும் அவசியம் என்பதை அஷ்டம ஸ்தான கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சிறு தவறும் சமூகத்தில் உங்களுக்கு உள்ள நற்பெயரைப் பாதிக்கும். சிலருக்கு, மேலிடத் தலைவர்்களின் ஆதரவு குறையும். கட்சித் தொண்டர்களின் மறைமுகப் பேச்சுகளில் ஆளாக நேரிடும். தசா, புக்திகள் சாதகமாக இல்லவிடில், நீதிமன்றம் செல்ல நேரிடும்.
மாணவ – மாணவியர்: வித்யா காரகரான புதன் அனுகூலமாக இல்லை! வீரியம் நிறைந்த மற்ற கிரகங்கள் பெரும்பாலும், சாதகமற்ற நிலைகளில்தான் சஞ்சரிக்கின்றன. சித்திரை
23-ம் தேதி வரை புதன் சாதகமாக இல்லை. அஷ்டம ஸ்தானமும் பாதிக்கப்பட்டுள்ளது. பாடங்களில் மனதைச் செலுத்த இயலாமல், ஆரோக்கியம் பாதிக்கப்படும். பிற மாணவ – மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது மிகவும் அவசியம். இல்லாவிடில், உங்கள் நற்பெயருக்குக் களங்கம் நேரிடும். சக மாணவர்களினால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாய், சனி பகவானுடன், அஷ்டம ஸ்தானத்தில் வலம் வருவது, நன்மை தராது. அதற்குப் பதில், சிரமங்களை ஏற்படுத்தும். கால்நடைகள் நோய்வாய்ப்படுவதனால், பணம் சக்திக்கு மீறி செலவழியும். உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பதும் சற்று கடினமே! சந்தை நிலவரம், சாதகமாக இல்லை, இம்மாதம் முழுவதும். உங்கள் பொருட்களுக்குக் குறைந்த விலையே கிடைக்கும். அதன் காரணமாக, லாபமும் குறையும். வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதமாகும். கடின உழைப்பினால், ஆரோக்கியம் கெடும். பணப் பிரச்னையும் கவலையளிக்கும்.
பெண்மணிகள்: சற்று சிரமமான மாதமாகும், இந்தச் சித்திரை! குடும்பப் பொறுப்புகள், குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை, தேவைக்குக் குறைவான பணவரவு, கணவரின் உடல் நலன் பாதிப்பு ஆகியவை மன நிம்மதியைப் பாதிக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள கடக ராசிக் கன்னியருக்கு, வரன் அமைவது, மேலும் தாமதமாகும். கருவுற்றிருக்கும் பெண்மணிகள் அதிகம் அலையாமல், எச்சரிக்கையுடன் இருப்பதும், அவ்வப்போது ஓய்வெடுப்பதும் மிக, மிக அவசியம் என்பதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
அறிவுரை: அதிக அலைச்சல், உடல் உழைப்பு, இரவு நேரப் பயணங்கள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிக்கவும்.
பரிகாரம்: சக்தியுள்ளவர்கள், திருநள்ளாறு, திருக்ெகாள்ளிக்காடு, வைத்தீஸ்வரர் கோயில் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். முடியாதவர்கள், சனிக் கிழமைகளில் மாலை நேரத்தில், திருக்கோயில் ஒன்றில் நல்லெண்ணெய் தீபமும், செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபமும் ஏற்றிவருவது, கண்கண்ட பரிகாரங்களாகும். உடனுக்குடன் பலனளிக்கும்.
அனுகூல தினங்கள்
சித்திரை: 2-4, 8-12, 16-18, 22-25, 30.
சந்திராஷ்டம தினங்கள்
சித்திரை:19 முற்பகல் முதல், 21 பிற்பகல் வரை.