17-7-2024 முதல் 16-8-2024 வரை
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம்: லாப ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்துள்ள நிலையில், சுக்கிரன், செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. அஷ்டம ராசியில், வக்கிர கதியில் சனி பகவானும், ஜென்ம ராசியில் சூரியனும் அமர்ந்திருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். பண வசதிக்குக் குறைவிராது. குடும்பச் சூழ்நிலை திருப்தியை அளிக்கும். சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக முயற்சியும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். குடும்பத்தில், ஒற்றுமையும், அமைதியும் நிலவும். திருமண முயற்சிகளுக்கு, ஏற்ற மாதம் இந்த ஆடி! கேதுவின் நிலையினால், மனதில் தெய்வ பக்தியும், ஆன்மிகத்தில் ஈடுபாடும் அதிகரிக்கும். பலருக்கு, பாடல் பெற்ற திருத்தலங்களின் தரிசனம் கிட்டும்.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், வக்கிர கதியில், அஷ்டம ராசியில் சஞ்சரிப்பதால், நீங்கள் உங்களது அன்றாடக் கடமைகளில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். மேலதிகாரிகளின் அளவிற்கு மீறிய கண்டிப்பு, மனதில் வெறுப்பையும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தையும் ஏற்படுத்தும், நியாயமாக உங்களுக்குக் கொடுக்கவேண்டிய சலுகைகள் குறைக்கப்படும். உணர்்ச்சி வசப்படுவதையும், முன்கோபத்தையும், தவிர்த்தல் அவசியம். தற்போதைக்கு, எத்தகைய தருணத்திலும், வளைந்து கொடுத்து, ெபாறுமையாக இருப்பது எதிர்கால நலனிற்கு உகந்ததாகும். வெளிநாடுகளில் வேலை கிடைப்பதற்காக, இடைத் தரகர்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம். சக-ஊழியர்களுடன் உங்கள் சொந்தப் பிரச்னைகளை வெளியிடாமலிருப்பது நல்லது. அலுவலகத்தில், நீங்கள் உண்டு. உங்கள் பணியுண்டு என்று இருப்பது உங்கள் எதிர்காலத்தில் நன்மை தரும்.
தொழில், வியாபாரம்: பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ராசியில் சனி பகவானும் நிலைகொண்டிருப்பதால், லாபத்தைத் தக்க வைத்துக்கொள்ள மிகவும் பாடுபடவேண்டியிருக்கும். சுக்கிரன் சுப பலம் பெற்றிருப்பதால், சந்தை நிலவரம் கைகொடுக்கும். லாப ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால், நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூடியவரையில் கடனுக்கு சரக்குகள் அனுப்புவதை இம்மாதம் குறைத்துக் கொள்வது மிக, மிக அவசியம். விற்பனையில் “cash – carry” என்ற கொள்கையைக் கடைபிடிப்பது நல்லது.
கலைத்துறையினர்: குரு, சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளதால், லாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இருப்பினும், பாக்கிய ஸ்தானத்தில் பலம் வாய்ந்த ராகு உள்ளதால், வரவிற்கு ஏற்ற செலவுகளும் காத்திருக்கும். சனி, ராகு இருவருமே அனுகூலமில்லாத பாதைகளில் வலம் வருவதால், வெளியூர், வெளி மாநிலப் பயணங்களின்போது, விழிப்புடன் இருப்பது அவசியம். வருமானத்திற்கேற்ப உங்கள் செலவுகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, சினிமாத் துறையினரும், நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோரும் ஆடம்பரச் செலவுகளைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், புதிய கடன்களை ஏற்க நேரிடும் என்பதை கிரக நிலைகள் தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்காட்டுகின்றன. வெள்ளம் வருமுன் அணை போடுதல் விவேகமான செயல் அல்லவா….?
அரசியல் துறையினர்: மேல்மட்டத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும் என்பதையும், அத்தகைய தருணங்களில் சுக்கிரன் கைகொடுத்து இக்கட்டான நிலையிலிருந்து உங்களைக் காத்தருள்வார் என்பதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பொறுமை, சாதுர்யம் ஆகியவை மிகவும் அவசியம். கட்சியிலும், சில தொண்டர்களின் எதிர்ப்பை நீங்கள் சமாளிக்க வேண்டி வரும்.
மாணவ – மாணவியர்: கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடங்கலுமின்றி, நீடிக்கிறது. இருப்பினும், மனதைப் பாடங்களில் செலுத்த இயலாமல், நண்பர்களின் தலையீடு, தடை செய்யும். குடும்பச் சூழ்நிலை, பணப் பிரச்னை ஒரு சிலருக்கு தரக்குறைவான நண்பர்களின் சேர்க்கை ஆகியவை கல்வி முன்னேற்றத்தைப் பாதிக்கும்.
விவசாயத் துறையினர்: சுக்கிரன், குரு, செவ்வாய் ஆகிய மூவரும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாக இருக்கும். கால் நடைகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். எதிர்பாராது பெய்யும் அதிக மழையினால், பயிர்கள் சிறிது சேதமடையும். முன்னதாகவே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது விவேகமாகும்.
பெண்மணிகள்: குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். கேதுவும், அனுகூலமாக இருப்பதால், முயற்சிகளனைத்தும் வெற்றியடையும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, பணிச் சுமை அதிகமாக இருப்பினும், அதற்கேற்ற கூலியைப் பெற்றுத் தருவார், சனி பகவான். அதாவது, ஊதிய உயர்வு கிடைக்கும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வரனுக்காகக் காத்திருக்கும் பெண்மணிகளுக்கு, வரன் அமைவதில் உதவிகரமாக சுப பலம் பெற்றிருக்கின்றன குருவும், சுக்கிரனும். ஆதலால், நல்ல வரன் அமையும்.
அறிவுரை: அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் பலம் பெற்று சஞ்சரிப்பதால், உடல் நலனில் கவனமாக இருத்தல் அவசியம். வீண் அலைச்சல்களையும், இரவில் தனியே வெளிச் செல்வதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது. வீண் செலவுகளை விலக்குவதும், அவசியமாகும்.
பரிகாரம்: வசதியுள்ள அன்பர்கள், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு சென்று சனி பகவானை தரிப்பது நல்லது. திருநாகேஸ்வரம், நாகமங்களா (கர்நாடகம்), காளஹஸ்தி தரிசனமும் ராகு தோஷத்தைப் போக்கும். இயலாதவர்கள் வீட்டின் பூஜையறையிலேயே சனிக்கிழமைகளில் மாலையில் பரிகார தீபம் ஏற்றிவைப்பது மிகச் சிறந்த பரிகாரம்.
அனுகூல தினங்கள் ஆடி: 4-6, 10-12, 16-18, 23-26, 30, 31.
சந்திராஷ்டம தினங்கள் ஆடி: 7 பிற்பகல் முதல், 9 பிற்பகல் வரை.